search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பவுர்ணமி கிரிவலமும்... திருவண்ணாமலை அஷ்டலிங்கங்களும்...
    X

    பவுர்ணமி கிரிவலமும்... திருவண்ணாமலை அஷ்டலிங்கங்களும்...

    • பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது புண்ணியமாக கருதப்படுகிறது.
    • லட்சகணக்கான சிவ பக்தர்கள் இங்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் ஈசன் இங்கு உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு. சென்னையிலிருந்து 180 கி.மீ தொலைவில் உள்ளது. சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார்.

    ஓவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்சகணக்கான சிவ பக்தர்கள் இங்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெறுவார்கள். உடல் முழு உற்சாகம் அடையும் என்பது பக்தர்களிடையே உள்ள நம்பிக்கையாகும்.

    கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

    கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கி உள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

    மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் எமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கி உள்ளது. எம தர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் எனப்படும் தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பப்படுகிறது.

    நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சினைகளின்றி வாழலாம்.

    ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பக்குளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கி உள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம்.

    ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கி உள்ள இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதி யுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கொண்டு திகழ்வார்கள்.

    Next Story
    ×