search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.
    • 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. சிறு வயதில் பெருமாள் மீது பக்தி கொண்ட ஆண்டாள் திருப்பாவை பாடல்களை பாடி இறைவனை கணவனாக அடைந்தார் என்பது வரலாறு.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த ஜூலை 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு தினமும் காலை ஆண்டாள்-ரெங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி மற்றும் இரவு வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா..." என்ற கோஷம் எழுப்பியபடி சென்றனர்.

    முன்னதாக அமைச்ச ர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, தக்கார் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், செயல் அலுவலர் முத்துராஜா, நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், மாவட்ட நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் 4 ரத வீதிகளிலும் அசைந்தாடி சென்றது.

    2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்ட மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மேலும் திருவிழாவையொட்டி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

    Next Story
    ×