search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது

    • இன்று காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.
    • ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த தலம் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.

    இங்கு ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தையொட்டி நடக்கும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடந்த 18-ந்தேதி 5 கருட சேவை நடைபெற்றது. மேலும் திருவிழாவையொட்டி ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.

    தேரோட்டத்தை முன்னிட்டு சீதனமாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு பட்டுப்புடவை, வஸ்திரம், மங்களப்பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டன. யானை முன்னே செல்ல ஸ்ரீரங்கம் பட்டு, மேல தாளங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டு தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அழகர்கோவிலில் இருந்து வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், அருள் செல்வம், பிரதீபா, உதவி பொறியாளர் கிருஷ்ணன், பேஷ்கார் முருகன், உதவி பேஷ்கார் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தேர் திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் அதிகாரிகள் செய்துள்ளளனர்.

    Next Story
    ×