search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிக தகவல்கள் உங்களுக்காக...
    X

    ஆன்மிக தகவல்கள் உங்களுக்காக...

    • தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில்தான், சரஸ்வதி தேவிக்கு கோவில் இருக்கிறது.
    • ராகு காலத்தில் எந்த காரியமும் செய்யமாட்டார்கள்.

    சரஸ்வதி கோவில்

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு, பல கோவில்களில் விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருப்பதை காண முடியும். சில கோவில்களில் தனியாக சிறிய சன்னிதிகளும் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில்தான், சரஸ்வதி தேவிக்கு என்று தனியாக கோவில் இருக்கிறது. அது நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது. பெரும் புலவரான ஒட்டக்கூத்தருக்கு, சோழ மன்னன் தானமாக வழங்கிய ஊர் என்பதால் இது 'கூத்தனூர்' என்று பெயர் பெற்றது. அந்த புலவர் தன்னுடைய புலமைக்கு அருள்பாலித்த சரஸ்வதிக்கு, அவ்வூரில் ஒரு கோவிலை அமைத்தார். தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர், இத்தல சரஸ்வதி மீது, 'சரஸ்வதி அந்தாதி' பாடியுள்ளார்.

    ராகு கால பூஜை

    ராகு காலத்தில் எந்த காரியமும் செய்யமாட்டார்கள். ஆனால் அந்த கால வேளையில் ராகு பகவானை மட்டும் பூஜிக்கலாம். ராகு பகவானை துதிக்க, திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகராஜர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். அங்கு ராகு காலத்தில், நாகவள்ளி மற்றும் நாகக்கன்னி சமேத ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பிரம்மன் கோவில்

    தஞ்சையை அடுத்த திருவையாறு அருகில் உள்ளது திருக்கண்டியூர். இது பிரம்மனின் ஆணவம் அழிப்பதற்காக அவரது ஐந்து தலைகளில் ஒன்று சிவபெருமானால் கொய்யப்பட்ட இடமாகும். இந்த ஆலயத்தில் நான்கு முகங்களுடன் பிரம்மனுக்கு தனி கோவில் அமைந்திருக்கிறது. இது தவிர திருப்பட்டூரில் பிரம்மன் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.

    தொங்கும் தூண்

    கல்லிலே கலைவண்ணம் படைத்த தமிழர்கள், தங்களது எண்ணங்களை கலையாக்கி, சிலையாக்கி, திருக்கோவில்கள் தோறும் நிறுவி உள்ளனர். தர்மபுரி அருகேயுள்ள தகடூர் என்ற ஊர், மன்னன் அதியமான் கோலோச்சிய நகரமாகும். இங்குள்ள கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ச்சுனேசுவரர் திருக்கோவிலில் நவக்கிரக மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்குள் காணப்படும் கல் தூண் ஒன்றை, `தொங்கும் தூண்' என்று அழைக்கின்றனர். ஏனெனில் இந்த தூண், தரையில் படாமல் அந்தரத்தில் நிற்கிறது. இதன் அடிப்பாகத்தில் குச்சி அல்லது காகிதத்தை ஒரு புறம் நுழைத்து மறுபுறம் எடுத்துவிடலாம்.

    உச்சிப்பிள்ளையார்

    திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், மலை மீது 273 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அடைய 417 படிகள் ஏறி செல்ல வேண்டும். இந்த மலையை ஒரு பக்கம் இருந்து பார்த்தால் சிவனின் வாகனமான ரிஷபமாகவும், மற்றொரு பக்கம் இருந்து பார்த்தால் சக்தியின் வாகனமான சிம்மமாகவும், இன்னொரு திசையில் இருந்து பார்த்தால் தும்பிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் விநாயகராகவும் மூன்று வடிவங்களில் காட்சி தருகிறது.

    Next Story
    ×