search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரம் கோவில் நடை இன்று முழுவதும் சாத்தப்பட்டிருக்கும்
    X

    சுவாமி, அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த காட்சி.

    ராமேசுவரம் கோவில் நடை இன்று முழுவதும் சாத்தப்பட்டிருக்கும்

    • சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து மண்டபத்தில் எழுந்தருளினர்
    • கோவில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். 2-ம் நாளான நேற்று இரவு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.

    விழாவின் 3-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடை பெற்றது. தொடர்ந்து பிரியா விடையுடன், ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

    காலை 6 மணிக்கு சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடானார்கள். முக்கிய வீதிகள் வழியாக சென்ற சுவாமி-அம்பாள் காலை 9 மணியளவில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு சுவாமி-அம்பாள் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைகிறார்கள்.

    இன்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் புறப்பாடான பின் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமலும் தீர்த்த கிணறுகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றமடைந்தனர்.

    Next Story
    ×