search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-20)
    X

    மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-20)

    • துன்பத்தை போக்கும் திறன்கொண்ட கண்ணபிரானே!
    • உன் பொற்பாதங்களை வணங்குகிறோம்.

    திருப்பாவை

    பாடல்

    முப்பத்து மூவர் அமரருக்கு முன்சென்று

    கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;

    செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

    வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

    செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

    நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;

    உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

    இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    முப்பத்து மூன்று கோடி தேவர்களின் துன்பத்தையும், அவை வருவதற்கு முன்பே ஓடோடிச் சென்று துன்பத்தை போக்கும் திறன்கொண்ட கண்ணபிரானே! துயில் எழுவாய்! செழுமையுடையவனே! பகைவர்களை வெல்பவனே! பகைவர்களுக்கு துன்பத்தைக் கொடுக்கின்ற தூய்மையானவனே! துயில் நீங்கி எழுந்து வர வேண்டும். பொன்னால் ஆன கலசம் போன்ற மார்பினையும், பவளம் வளம் போன்ற சிவந்த வாயினையும், சீர்மிகு சிற்றிடையை உடைய நப்பினையே! திருமகள் போன்றவளே! பாவை நோன்பு நோற்பதற்கு தேவையான விசிறி, முகம் பார்க்கும் கண்ணாடி இவைகளையும் உன்னுடைய கணவனாகிய கண்ணனையும் எங்களுக்கு வழங்கி, இப்போதே எங்களை நீராட்டுவாயாக! நாங்கள் நோன்பு நோற்ற பலனை அடைந்து மகிழ்ச்சி அடைவோம்.

    திருவெம்பாவை

    பாடல்

    போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

    போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

    போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்

    போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

    போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

    போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்

    போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

    போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    எங்கள் இறைவனே! உன் சிறப்பு வாய்ந்த ஒளிவீசும் திருவடிகளை எங்களுக்குத் தந்து அருள்புரிய வேண்டும். எல்லா உயிரினங்களின் பிறப்பிடமான உன் பொற்பாதங்களை வணங்குகிறோம். பாதுகாக்கின்ற உனது திருவடிதான் சகல உயிர்களின் தோற்றமும் முடிவுமாக உள்ளன. அனைத்து உயிர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக விளங்கும் உன் திருவடிகளைப் போற்றுகிறோம்! பிரம்மனும், திருமாலும் காண முடியாத உன் திருப்பாதங்களை வணங்குகிறோம். நாங்கள் முக்தி அடையும் படியாக எங்களை ஏற்று அருளும் பாதங்களை போற்றுகிறோம். இத்தனை சிறப்புகள் மிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பாடி புகழ்ந்து வணங்கி, அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தில் திளைத்து மார்கழி நீராடுவோம்.

    Next Story
    ×