search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருக்குர்ஆன் வழிநடப்போம், நன்மைகள் பெறுவோம்....
    X

    திருக்குர்ஆன் வழிநடப்போம், நன்மைகள் பெறுவோம்....

    • இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.
    • இறுமாப்பு போன்ற குணங்கள் இல்லாமல் மனிதன் வாழ வேண்டும்.

    இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்று, அதன் வழி நடந்து நன்மைபெறும் வகையில் அதன் சிறப்புகள் அமைந்துள்ளன. ஏக இறைவன் அல்லாஹ் அனைத்து தரப்பு மக்களும் நல்வழி அடைய தனது கருத்துக்கள் நிறைந்த திருக்குர்ஆன் மூலம் வழிகாட்டுகின்றான். மனிதனின் மனதில் மறைந்திருக்கும் தீய குணங்களை அகற்றி நற்குணங்களை போதிப்பதில் திருக்குர்ஆன் தீவிரம் காட்டுகின்றது.

    ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது, உற்றார்களையும் உறவுகளையும் அவன் எப்படி பேணி நடக்க வேண்டும் என்பது உள்பட அவனது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆன் விளக்கிக் கூறுகிறது. உலகில் உள்ள மனித குலம் முழுமைக்கும் தேவையான, பயன்தரும் வழிகாட்டுதல்களும், கருத்துக்களும் திருக்குர்ஆனில் ஏராளம் நிறைந்துள்ளது.

    அதில் குறிப்பிடத்தக்கது தற்பெருமை, அகந்தை, தன்னைவிட உயர்ந்தது எதுவும் இல்லை என்ற இறுமாப்பு போன்ற குணங்கள் இல்லாமல் மனிதன் வாழ வேண்டும் என்பதாகும்.

    ஒரு மனிதன் 4 காரணங்களால் பெருமை கொள்கிறான். அவை:

    1) தான் அடைந்த கல்வி,

    2) தான் பெற்ற செல்வம்,

    3) தனக்கு கிடைத்த பதவி, அதிகாரம்,

    4) தான் பெற்ற மக்கட் செல்வம்.

    இந்த நான்கும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும்போது அவன் இதற்காக பெருமைப்படக்கூடாது. இறைவனின் அருளால், இறைவனின் நாட்டத்தால் மட்டுமே தனக்கு இத்தகைய சிறப்புகள் கிடைத்துள்ளன என்று உணர்ந்து கொள்ள வேண்டும். இதைமீறி அவன் பெருமை கொண்டு, தலைக்கனம் பிடித்து நடந்து கொண்டால் இறைவனிடம் இருந்து வரும் தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருக்க நேரிடும்.

    கல்வி

    `கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பார்கள். அதன்படி சிறப்புகள் கிடைக்கும் போது அவர் அதை அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் போற்றப் படுவார். அதேநேரத்தில் அவர் கல்விச்செருக்குடன் பண்பில்லாமல் நடந்து கொண்டால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். என்ன தான் கல்வியில் சிறந்து விளங்கினாலும் நல்ல பண்புகள் இல்லை என்றால் அந்தக்கல்வியினால் அவருக்கு சிறப்பும், பலனும் கிடைக்காது. ஒருவேளை சிறப்புகள் கிடைத்தாலும் அது நிலைக்காது.

    இதையே திருக்குர்ஆன் (2-269) இவ்வாறு கூறுகின்றது: "தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) எராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். (இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெற மாட்டார்கள்."

    செல்வம்

    செல்வம் சேரச்சேர செருக்கும், ஆணவமும் சேர்ந்தே வளரும். பணம் பகட்டையும், அகந்தையையும் அதிகரிக்கும். மற்றவர்களை மதிப்பின்றி நடத்த தூண்டும். செல்வத் தால் விரும்பியதை வாங்கிவிடலாம் என்ற அகந்தை தோன்றும். எனவே செல்வம் சேரும் போது, `இறைவனின் அருளால் இந்த செல்வம் கிடைத்துள்ளது. இதை இறைவன் காட்டும் வழியில், நல்ல முறையில் செலவு செய்ய வேண்டும்' என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். மனிதனுக்கு செல்வம் ஒரு சோதனையாகும் என்பதை இந்த நபி மொழி மூலம் அறியலாம்.

    `ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என்னுடைய சமுதாயத்திற்குச் செல்வம் சோதனை யாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அஹ்மத்)

    அதிகாரம்

    பதவியும், அதிகாரமும் வரும்போது பணிவு வர வேண்டும். நமக்கு கிடைத்த பதவி, அதிகாரத்தை பயன் படுத்தி மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு, ஆணவத் துடன் நடந்து மக்களை வாட்டி வதைத்தால் அதற் குரிய தண்டனை கிடைத்தே தீரும்.

    இதற்கு உதாரணமாக எகிப்தை ஆண்ட மன்னன் பிர் அவ்ன் ஆட்சியை குறிப்பிடலாம். ஆட்சி அதிகாரத்தின் மூலம் மக்களை கொடுமைப்படுத்தியதால் அவனும் அவனது படைகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.

    அதுபோல ஒரு மனிதனிடம் பணம், செல்வாக்கு எது இருந்தாலும் அவனது மரணத்திற்கு பிறகு எதுவும் அவன் கூட வருவதில்லை. உயிரற்ற அவன் உடல் மட்டுமே அடக்கம் செய்யப்படும்.

    மக்கட் செல்வம்

    இறைவனின் அருட்கொடைகளில் மக்கட் செல்வமும் ஒன்று. அதே நேரத்தில் அதுவும் சோதனைக்குரியது என்று திருக்குர்ஆன் (8:28) சுட்டிக்காட்டுகிறது.

    "நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும், (உங்களுக்குச்) சோதனையாயிருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்-அவனிடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான (வெகுமதி) நற்கூலி உண்டு என்பதையும் நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்".

    கல்வி, செல்வம், ஆட்சி அதிகாரம், மக்கட் செல்வம் என எத்தனை செல்வங்கள் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை இறைவன் வகுத்த வழியில் இருந்து விலகினால் அது துன்பத்தையே தரும். எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் வகுத்த வழியில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்வோம், அல்லாஹ்வின் நல்லருள் பெறுவோம். ஆமின்.

    Next Story
    ×