என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவிலின் சிறப்புகள்
    X

    திருச்செந்தூர் கோவிலின் சிறப்புகள்

    • திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர்.
    • திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்.

    திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்பிரமணிய சுவாமி. கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு `வீரபாகு பட்டினம்' என்ற பெயரும் உண்டு.

    திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது. மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

    மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.

    திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

    திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை 'மாப்பிள்ளை 'சுவாமி' என்று அழைக்கிறார்கள்.

    திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

    திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83 திருப்புகழ் பாடல் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    திருச்செந்தூர் கோவில் வடிவம் பிரணவ மந்திரம் ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது. மூலவருக்கு பக்தர்கள் தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைரவேல் அணிவிக்கப்படும்.

    திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

    திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று சுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

    நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

    திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

    இத்திருத்தலம் மன்னார் வளைகுடா கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, 'திருச்சீரலைவாய்' என்று அழைக்கப்படுகின்றது.

    இக்கோவிலுக்குச் செல்லும் வழ யில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப்பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.

    முருகப்பெருமானின் வெற்றி வேல், மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரை ஓரமாக உள்ள 'மாப்பாடு' என்ற இடம் ஆகும். தற்போது, `மணப்பாடு' என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

    முருகனின் அறுபடை வீடுகளில் இது, 2-வது படை வீடு ஆகும். முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை சம்ஹாரம் செய்வதுதான்.

    திருச்செந்தூரில் தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும். அது மட்டுமின்றி இத்தல இறைவன், ஞானத்தை அருளி தீயவைகளிடம் இருந்து நம்மை காப்பாற்றுகிறார்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.

    முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு 'செந்தில்' என்ற பெயர் ஏற்பட்டது.

    திருச்செந்தூர் கோவில் ராஜ கோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமணநாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

    திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விஸ்வரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக மிக முக்கியமான பூஜையாகும்.

    மூலவர் தவக்கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

    முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

    உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள். இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.

    Next Story
    ×