search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வாழ்வில் வெற்றியை தரும் எளிமையான பஞ்சாயதன பூஜை
    X

    வாழ்வில் வெற்றியை தரும் எளிமையான பஞ்சாயதன பூஜை

    • அற்புதமான பலன் தரக்கூடிய அபூர்வமான வழிபாட்டு முறை.
    • இந்த வழிபாட்டிற்கு எந்திரமோ, விக்கிரகமோ கிடையாது.

    ஆதிசங்கரர் இந்து மதத்தில் பல பிரிவுகளாக சிதறிக்கிடந்த வழிபாடுகளை ஒருங்கிணைத்து, சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், சவுரம், கணாபத்யம் என்று வகைப்படுத்தினார். இதில் கவுமாரம் மற்றும் கணாபத்யம் ஆகியவை சைவ மதத்தின் துணைப் பிரிவுகளாகவே சிலரால் சொல்லப்படும். இந்த 6 வகையான வழிபாட்டு முறைகளையும் மேலும் எளிமைப்படுத்தி, அனைவருமே தினமும் எளிய முறையில் பூஜிக்கக்கூடிய, மறைந்திருந்த பஞ்சாயதன பூஜையை வெளிப்படுத்தினார். வசதி உள்ளவர்கள் இதை பெரிய அளவில் விஸ்தாரமாக தினமும் செய்யலாம். வசதி இல்லாதவர்கள் குறைந்தபட் சம் 10 அல்லது 15 நிமிடத்தில் இந்த பூஜையை செய்து முடித்து விடலாம். அற்புதமான பலன் தரக்கூடிய ஒரு அபூர்வமான வழிபாட்டு முறை இதுவாகும்.

    இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், இதற்கு எந்திரமோ அல்லது விக்கிரகமோ கிடையாது. இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து மூர்த்தங்களை வைத்து பூஜிக்கக்கூடிய முறை இது. எனவே இதற்கு 'பஞ்சாய தன பூஜை' என்று பெயர் வந்தது.

    சிவபெருமானுக்குரிய இயறகை மூர்த்தம்- பாண லிங்கம், அம்பாளுக்குரியது சொர்ணமுகி, விஷ்ணுவிற்குரியது சாளக்கிராமம், சூரியனுக்குரியது ஸ்படிகம், விநாயகருக்குரியது சோனாபத்திரம் என்னும் கல். ஈஸ்வரன், அம்பாள், மகாவிஷ்ணு, விநாயகப் பெருமான், சூரிய பகவான் ஆகிய ஐந்து பேர்களை சேர்த்து வைத்து பூஜை செய்யக்கூடிய இந்த முறை மிக விசேஷமாக கருதப்படுகிறது.

    இதில் சிவபெருமானுக்குரிய பாணலிங்கம் இயற்கையாகவே நர்மதை நதிக்கரையில் கிடைக்கும். பாணாசுரன் தன் ஆயிரம் கரங்களால் பாணலிங்கத்தை தினமும் பூஜித்து இந்த நதியில் விட்டதாக சொல்வர். இந்த பாணலிங்கத்தில் சிவ பெருமான் இருப்பதாக ஐதீகம்.

    அம்பிகையின் சொரூபமான சொர்ணமுகி என்னும் கல், ஆந்திராவில் சொர்ணமுகி ஆற்றில் இயற்கையாகவே கிடைக்கிறது. இதில் தங்க ரேகைகள் காணப்படும். அடுத்து, விஷ்ணு பகவானின் வடிவமாக விளங்கக் கூடிய சாளக்கிராமம். இது நேபாள தேசத்தில் முக்திநாத் ஷேத்திரத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கிறது.

    சூரிய பகவானுக்குரிய ஸ்படிகமும், தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் என்ற இடத்திற்கு அருகில் இயற்கையாகவே கிடைக்கிறது. விநாயகப்பெருனின் உருவத்திற்குரிய மூர்த்தமாக சொல்லப்படும் சோனா பத்திரக்கல், கங்கை கலக்கக்கூடிய சோனாநதியின் கரையில் கிடைக்கப்பெறுகிறது. இந்த ஐந்து மூர்த்தங்களையும், ஐந்து தெய்வங்களாக பாவித்து பூஜிப்பதால், சகல நலன்களும் தேடி வரும் என்கிறார்கள்.

    மேற்கண்ட தெய்வ மூர்த்தங்கள் அனைத்து சிறிய வடிவங்களிலேயே கிடைக்கப்பெறும். இவற்றில் சாளக்கிராமம் மட்டுமே சற்று பெரியதாக இருக்கும். இவை அனைத்தையும் ஒரு சின்ன மரப்பெட்டியில் வைத்துக்கொள்ள முடியும். இதற்கு எளிய முறையில்

    தினமும் அபிஷேகம் செய்யலாம். மந்திர உபதேசங்கள் தெரிந்தவர்கள் அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை ஜெபிக்கலாம். அல்லது எளிய முறையில் எட்டு அல்லது 16 நாமாவளி சொல்லி, துளசி, வில்வம் போன்ற இலைகளாலோ, சிறிய அளவிலான பூக்களைக் கொண்டோ பூஜை செய்யலாம்.

    சிறிய மரப்பெட்டியில் வைக்கப்படும் இந்த மூர்த்தங்களை, வெளியிடங்களுக்குச் செல்வதாக இருந்தாலும் கையில் எடுத்துச் சென்று அங்கு வைத்தும் பூஜையை நடத்த முடியும். இவற்றிற்கு நைவேத்தியமாக படைக்க பெரிய செலவு எதுவும் தேவையில்லை. நம்மால் எது முடியுமோ, அதை நைவேத்தியமாக படைக்கலாம்.

    உலர்ந்த திராட்சை, கல் கண்டு போன்றவை கூட போதுமானது. அதையே கொஞ்சம் விரிவாக செய்யக்கூடியவர்கள், தினமும் நீராடி, அன்னம் வைத்து நெய் (மகா நைவேத்தியம்) விட்டு பூஜிக்கலாம். வெளியே செல்லும்போது பூஜைக்குரிய சந்தனம், குங்குமம், துளசி, வில்வம் எடுத்துக்கொண்டு செல்லலாம்.

    துளசி, வில்வம் சற்று வாடினால் கூட கவலைப்பட வேண்டாம். தொடர் பயணத்தில் தினமும் எங்கு நமக்கு நேரம் கிடைக்கிறதோ, அங்கேயே பஞ்சாயதன பூஜையை செய்யலாம். சொர்ணசே பஞ்சாயதன பூஜையில் முருகனுக்குரிய வழிபாடு சொல்லப்படவில்லை.

    ஆனால் சிலர் முருகப்பெருமான் வழிபாடு செய்ய வேண்டும் என கருதுவார்கள். அவர்கள் வேல் வைத்து முருகப்பெருமானை மற்றவற்றோடு சேர்த்து பூஜிக்கலாம். வெளியில் செல்லும் போதும் அந்த வேலை எடுத்துச் செல்லலாம். (சில இடங்களில் வேலையும் சேர்த்து வழிபாடு செய்யும் வழக்கமும் உண்டு).

    எப்படி கூப்பிட்டாலும் பக்தியோடு அழைப்பவர்களுக்கு, இறைவன் கட்டாயம் வந்து அருள் செய்வார். சிவன், விஷ்ணு, கணபதி, சூரியன், அம்பாள் ஆகிய தெய்வங்களுடன் பஞ்சாயதன பூஜையை செய்பவர்களுக்கு வாழ்வில் நிச்சயம் ஏற்றம் உண்டு. சகல பாவங்களும் விலகும். பிரம்மஹத்தி, கோஹத்தி, சிசுஹத்தி போன்ற தோஷங்களும் நிச்சயமாக நீங்கும். இந்த ஒவ்வொரு மூர்த்தங்களிலும் இயற்கையாகவே சுவாமி இருக்கிறார் என்று அறிந்து நம் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

    பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் தான் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வரும் என்பார்கள். பஞ்சாயதன வழிபாட்டு முறையில் இறைவனை பூஜித்து வருபவர்களுக்கு, எந்த விதமான செய்வினைகளோ, கெடுதல்களோ, அகாலமரணமோ, விபத்துகளோ ஏற்படாது என சொல்லப்பட்டுள்ளது.

    Next Story
    ×