search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்
    X
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்

    ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடு இன்று தொடங்குகிறது

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் சிறப்பு வழிபாடாக 41 நாட்கள் ராம நாம பிரார்த்தனை இன்று தொடங்குகிறது.
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கோவில்கொடி மரத்துக்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசம் உருவாக்கும் பணிகள் சென்னையில் நடந்து வருகிறது. மூலவரின் கடுசர்கரையோக சிலையை முழுமைப்படுத்தும் மருந்துக்கலவைகள் மாத்தூர் மடத்தில் தயாரிக்கப்பட்டு, திருவட்டாருக்கு கொண்டு வரப்படுகிறது. அத்துடன் பெருமாளின் சிலைக்குரிய இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது. சுற்றுப்பகுதியில் விளக்குகள் பொருத்தும் பணி பாதியளவு முடிந்துள்ளது.

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்ட போது கும்பாபிஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை நடந்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற உள்ளது. 16-ந் தேதி கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமம், திரிகால பூஜைகள், 17-ந் தேதி அதிகாலையில் கணபதி ஹோமம், மாலையில் பகவதி சேவை, 18-ந் தேதி காலை கணபதி ஹோமம், சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் போன்றவை நடக்கிறது. மேலும் வருகிற 25-ந் தேதி சர்ப்பபலி பூஜை நடைபெறும்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு வழிபாடாக 41 நாட்கள் ராம நாம பிரார்த்தனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 41 நாட்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராம நாம பிரார்த்தனை  நடைபெறும்.

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டுதல் செய்ய உள்ளனர்.
    Next Story
    ×