
இந்த சித்திரை திருவிழா வருகிற 14ந் தேதி தொடங்கி 20ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா கடந்த பிப்ரவரி மாதம் 7ந்தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது.
சித்திரை பெருந்திருவிழா தொடர் முன்னோட்ட நிகழ்ச்சியாக கடந்த ஏப்ரல் 1ந்தேதி தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்த விழா நடந்தது. மேலும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர்கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனம் மற்றும் தசாவதார நிகழ்வின் போது கள்ளழகர் எழுந்தருளும் கருட, சேஷ வாகனங்கள் பாதுகாப்பாக தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
வருகிற 14ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடாகிறார். முன்னதாக வழியில் உள்ள 456 மண்டகப்படிகளில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளுகிறார். இதைத்தொடர்ந்து 15ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் மூன்று மாவடியில் கள்ளழகரை வரவேற்று உபசரிக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
16ந்தேதி (சனிக்கிழமை )காலை 5.50 மணிக்கு மேல் 6 மணிக்குள் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஷேச, கருட வாகனத்தில் எழுந்த ருளி மண்டூக மகரிஷி முனிவ ருக்கு சாப விமோ சனம் அளிக்கும் நிகழ்வும், தசாவதார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 18ந் தேதி (திங்கட்கிழமை) மோகன வதாரத்தில் கள்ளழகர் எழுந்தருளல், அன்று இரவு பூப்பல்லக்கு அலங்காரம் நடைபெறுகிறது.
19ந் தேதி (செவ்வாய்க்கிழமை)பூப்பல்லக்கில் எழுந்தருளல், 20ந்தேதி (புதன்கிழமை) அப்பன் திருப்பதியில் கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் பகல் 1.30க்கு கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் அழகர்மலை வந்து சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
சித்திரை திருவிழாவை 2 ஆண்டுகளுக்குப்பின் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். எனவே பக்தர்களும், பொதுமக்களும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வைகை ஆற்றில் கூடுவார்கள். எனவே அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சித்திரை திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் தலைமையில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர், அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.