search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரம் மாரியம்மன்
    X
    சமயபுரம் மாரியம்மன்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம்பெருகும், குடும்பத்தில் அமைதிநிலவும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இதன் காரணமாக இக்கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அம்மனை தரிசனம் செய்வதற்காக தினமும் கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து, அன்று காலை 6 மணிக்குமேல் 8 மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். மேலும் தினமும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    வருகிற 18-ந்தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் 11.30 அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.வருகிற 20-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 26-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்திலும் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    Next Story
    ×