search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா- கொடியேற்றத்துடன் தொடக்கம்

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 16-ந்தேதி பால்குட திருவிழா நடக்கிறது.
    காரைக்குடி:

    காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் வரும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்த விழா நேற்று காலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    முன்னதாக கடந்த 6-ந்தேதி மாலை சுமங்கலி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதன் பின்னர் அதிகாலை 6.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. இதை தொடர்ந்து அம்பாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பால்குடம் எடுக்கும் பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்ட காட்சி.


    இந்த காப்புக்கட்டும் நிகழ்ச்சியில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ள லட்சக்கணக்கான பக்தர்களும் காப்புக்கட்டி நேற்று முதல் விரதம் இருக்க தொடங்கி உள்ளனர். முன்னதாக நேற்று காலை காப்புக்கட்டுவதற்காக சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து காப்புக்கட்டி கொண்டனர். விழாவையொட்டி தொடர்ந்து தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
    வருகிற 15-ந்தேதி மாலை கரகம், மதுக்குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி முத்தாலம்மன் கோவிலில் இருந்து நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா 16-ந்தேதி காலையில் நடக்கிறது. அன்றைய தினம் விரதம் இருக்கும் பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் அன்றைய தினம் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக காணப்படுவார்கள். தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் கரகம் பருப்பூரணிக்கு கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியும், 17-ந்தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழாவையொட்டி நேற்று முதல் விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி மஞ்சள் நிற ஆடையை அணிய தொடங்கியதால் காரைக்குடி நகர் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளித்தது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுமதி தலைமையில் கோவில் கணக்கர் பாண்டி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×