search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

    மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை நாட்களில் நடை திறக்கப்படும்.

    அதன்படி மாசி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. மற்ற சிறப்பு பூஜைகள் அன்றைய நாளில் நடைபெறாது. பக்தர்களுக்கும் அனுமதி கிடையாது. பின்னர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகளை நிறைவேற்றுவார். நாளை முதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    மேலும் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், கலசபூஜை, அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜை வழிபாடுகள் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 17-ந் தேதி இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜையை தொடர்ந்து அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருவதால், சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.

    தரிசனத்திற்கு முன் பதிவு செய்த பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசனத்திற்கு 72 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும். மற்றவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல் உடனடி முன்பதிவு தரிசனமும் கிடையாது. நடை திறக்கப்படுவதை யொட்டி பக்தர்களின் வசதிக்காக, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் உள்பட மாவட்ட தலைநகரங்களில் இருந்து நிலக்கல்-பம்பைக்கு கேரள போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    Next Story
    ×