search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வடபழனி முருகன் கோவில்
    X
    வடபழனி முருகன் கோவில்

    வடபழனி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
    சென்னை :

    வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு தற்போது கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

    கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.2.56 கோடி செலவில் 34 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் வடபழனி முருகன் கோவிலில் நாளை (23-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா கடந்த 17-ந் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கியது. 20-ந்தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது.

    நேற்று 2-ம் கால மற்றும் 3-ம்கால யாக பூஜைகள் நடந்தன. இதில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். மேலும் நேற்று அஷ்ட பந்தன மருந்து இடிக்கும் வைபவம் நடைபெற்றது. பச்சை சுண்ணாம்புகல், கற்காவி, கருங்குங்கிலியம், கொம்பரக்கு, ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய 8 பொருட்கள் சேர்த்து இடித்து அஷ்டபந்தன கலவை தயாரித்து சன்னதிகளின் பீடத்தில் சாத்தப்பட்டது.

    நேற்று மாலை தங்கமுலாம் பூசப்பட்ட 7 தங்ககலசங்கள் ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டன. இன்று காலை 8.30 மணிக்கு 4-ம்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு 5-ம்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு 6-ம்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு பரிவார யாகசாலை பூஜையும், 9 மணிக்கு பிரதான யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.

    9.30 மணிக்கு யாத்ரா தானம், திருக்கலசங்கள் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு அனைத்து ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    காலை 11 மணிக்கு அனைத்து பரிவாரங்களுடன் முருகனுக்கு மகாகும்பாபிஷேகம் தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு மகாபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முருகபெருமான் ஆலயத்தை வலம் வந்து காட்சி அளிக்கிறார்.

    தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. மேலும் நாளை (ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. யூடியூப் சேனல் மூலம் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பக்தர்கள் நேரடியாக காண அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    தி.நகர் துணை கமி‌ஷனர் ஹரிகிரண் பிரசாத், வடபழனி உதவி கமி‌ஷனர் பாலமுருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×