search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் அருணாசலேஸ்வரர். ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் அருணாசலேஸ்வரர். ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஈசானிய குளத்தில் நடந்த தீர்த்தவாரி: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் ஒன்று. ஈசானிய குளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்துகொள்வார். அதன்படி திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் கோவிலில் இருந்து அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு வந்தார். அங்கு சூலரூபமான அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பகல் 11 மணி அளவில் அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின்படி திருவண்ணாமலை பகுதியை ஆண்டு வந்த வல்லாள மகாராஜா என்ற மன்னர் அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அருணாசலேஸ்வரரிடம் அவர் தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம்கேட்டு வேண்டி வந்து உள்ளார்.

    ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர் உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறியுள்ளார். அதன்படி ராஜாவும் அருணாசலேஸ்வரரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்துள்ளார். தைப்பூசத்தின் போது அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மேளதாளத்துடன் கோவிலுக்கு திரும்பி செல்வார். அப்போது போர்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் கொல்லப்பட்டார் என்ற தகவல் அருணாசலேஸ்வரருக்கு தெரிவிக்கப்படும். தன்னை மகனான பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அருணாசலேஸ்வரர் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை நினைவுகூறும் விதமாக தீர்த்தவாரி முடித்துவிட்டு அருணாசலேஸ்வரர் அறிவொளிப்பூங்கா அருகே வரும் போது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார்.

    இதையடுத்து மேளதாளங்களின்றி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.
    Next Story
    ×