என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் 3-ம் பிரகாரத்தில் உலா வந்த காட்சி.
    X
    சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் 3-ம் பிரகாரத்தில் உலா வந்த காட்சி.

    ராமேசுவரம் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழா

    வெளி மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் வாசல் பகுதியில் நின்று சாமியை தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    ராமேசுவரம் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தெப்பத் திருவிழா அன்று சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி உப கோவிலான லட்சுமனேசுவரர் கோவிலுக்கு வந்த பின்பு அங்கு மாலை 6 மணிக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜை நடைபெறும்.

    அதன் பின்னர் சாமி-அம்பாள் மின்விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைக்கப்பட்டு 11 முறை தெப்பம் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக லட்சுமனேசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டது.

    அதற்கு பதிலாக நேற்று கோவிலின் உள்ளேயே தெப்பத்திருவிழா நடைபெற்றது. சாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் சிவதீர்த்தம் எதிரே எழுந்தருளினர். தொடர்ந்து சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்று அதன் பின்னர் சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவிலின் பேஷ்கார்கள் கமலநாதன், முனியசாமி மற்றும் கோவில் குருக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    கடந்த 14-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ராமேசுவரம் கோவில் சாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரங்களும் தீர்த்த கிணறு பகுதியும் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. அதுபோல் வெளி மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் வாசல் பகுதியில் நின்று சாமியை தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×