என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அங்குச தேவருக்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    X
    அங்குச தேவருக்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: கற்பகவிநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா எளிமையாக நடைபெற்றது.

    இதேபோல் இந்த ஆண்டும் எளிமையாகவே நடைபெற்றது. விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி காலை மற்றும் இரவு உற்சவர் கற்பகமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 6-ம் திருநாள் அன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் 10-ம் திருநாளான நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அருகில் சண்டிகேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் உற்சவர் திருக்குளம் கரையில் எழுந்தருளி அங்கு அங்குச தேவருக்கு திரவியங்களால் பல்வேறு அபிஷேகம் நடைபெற்று, காலை 9.20 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    கோவிலில் மதியம் மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் வழிபாடு நடைபெற்றது.

    தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பதால், நேற்று கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தெப்பக்குளம் கரையோரம் நின்றபடி தீர்த்தவாரி நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர். கோவில் வாசல் முன்பு நின்று மூலவரை வணங்கி விட்டு சென்றனர். இரவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியார், வலையப்பட்டி மு.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×