search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மன் சிலைக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளித்ததை படத்தில் காணலாம்.
    X
    அம்மன் சிலைக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளித்ததை படத்தில் காணலாம்.

    முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சுசீந்திரத்தில் வரவேற்பு

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சுசீந்திரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி கடந்த 7-ந் தேதி சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டன. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்து மலர்தூவி வழியனுப்பி வைத்தனர்.

    அங்கு விழா முடிந்து சாமி சிலைகள் மீண்டும் ஊர்வலமாக புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை பத்மநாபபுரம் வந்தடைந்தது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் வேளிமலை குமாரசாமி கோவிலுக்கு சென்றது.

    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரத்திற்கு புறப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் சிலை மேளதாளத்துடன் சுசீந்திரம் வந்தடைந்தது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நவராத்திரி குழு தலைவர் வீரபத்திரபிள்ளை மற்றும் ஊர் பொதுமக்கள் நான்கு ரதவீதிகள் வழியே அம்மனுக்கு திருக்கண் சார்த்தி வரவேற்பு அளித்தனர். கோவில் முன்பு அம்மனுக்கு தமிழக மற்றும் கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் நடந்தது.

    அம்மனுக்கு ஆறாட்டும், அபிஷேகமும் செய்யப்பட்ட பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×