search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது
    X

    அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது

    தென்திருப்பதி என்றும், திருமாலிருஞ்சோலை என்றும் போற்றிப் புகழப்படும், அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தென்திருப்பதி என்றும், திருமாலிருஞ்சோலை என்றும் போற்றிப் புகழப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ளது கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா வருகிற 30-ந் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்றிரவு அன்ன வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும். 31-ந் தேதி காலையில் தங்கப்பல்லக்கு நிகழ்ச்சியும் இரவு சிம்மவாகனத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது. தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி காலை சிறப்பு பூஜையும், இரவு ஆஞ்சநேயர் வாகனத்தில் சாமி எழுந்தருளுதல், 2-ந் தேதி காலையில் தங்கபல்லக்கு , இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும். 3-ந் தேதி ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி காலையில் 7.45 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் சுந்தரராஜபெருமாள் பல்லக்கில் எழுந்தருளி மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்புகிறார். இரவு சேஷ வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.



    4-ந் தேதி யானை வாகனத்திலும், 5-ந் தேதி புஷ்ப சப்பரம், 6-ந் தேதி தங்ககுதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந் தேதி காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் திருத்தேருக்கு சாமி தேவியர்களுடன் எழுந்தருள்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருத்தேரின் வடங்களை பக்தர்கள் இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். 8-ந் தேதி திருவிழா சாற்று முறை, 9-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    ஆண்டுதோறும் அழகர்கோவில் ஆடித்திருவிழா முடிவடைந்து ஆடி அமாவாசை வரும். இந்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னதாகவே இந்த மாதம் 23-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது.

    இதையொட்டி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர்கோவில்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கையில் புனிதநீராடி வருவார்கள். கோவிலில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் சந்தனம் சாற்றுபடி செய்து தரிசனம் செய்வார்கள்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×