search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    புத்திர காமேட்டீஸ்வரர் திருக்கோவில்- ஆரணி
    X
    புத்திர காமேட்டீஸ்வரர் திருக்கோவில்- ஆரணி

    புத்திர காமேட்டீஸ்வரர் திருக்கோவில்- ஆரணி

    புத்திர காமேட்டீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி தெரியாத பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த புத்திர காமேட்டீஸ்வரர் திருக்கோவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைந்துள்ளது.
    திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாதவர்கள் புத்திர காமேட்டீஸ்வரரை வழிபட்டால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் பெருமை என்னவென்று பார்த்தால் தசரத மன்னனுக்கு சன்னதி அமைந்த திருத்தலம் ஆகும்.

    ஒரு முறை ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்திலிருந்து சிதறிய நீர் நதியாக பெருக்கெடுத்து ஓடியது. அதுவே கமண்டல நதியானது. இந்த நதியின் கரையில் தான் புத்திர காமேட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் எதிரே  இந்த நதி வடக்கிலிருந்து கிழக்காக திரும்பி பின்னர் மீண்டும் திசை திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது. தற்போது மழைக்காலங்களில் மட்டுமே ஓடும் நதியாகிவிட்டது.  

    மூலஸ்தானத்தில் சிவன் ஒன்பது தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். சிவனுக்கு பௌர்ணமி தோறும் விசேஷ பூஜை நடக்கும் அதன் பின்பு சுவாமி புறப்பாடும் நிகழும். அம்பாள் பெரியநாயகிக்கு என்று தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதி உள்ளது. கோயிலுக்கு நேர் எதிரே வெளிப்புறத்தில் தசரத மன்னனுக்கும் சன்னதி உள்ளது. இவர் இங்கு சக்கரவர்த்தியாக இல்லாமல் யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில் முனிவர் போல காட்சியளிக்கிறார். கைகளில் ருத்ராட்ச மாலை மற்றும் கமண்டலம் வைத்திருக்கிறார். விசேஷ நாட்களில் இவருக்கும் பூஜை நடத்தப்படுகின்றது.

    இத்தலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாக உள்ளது. திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாதவர்கள் புத்திர காமேட்டீஸ்வரரை வழிபட்டால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    குழந்தைப்பேறு அருளும் புத்திர காமேட்டீஸ்வரர் கோவில்லின் வரலாறு
    குழந்தை வேண்டி புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள் 6 திங்கட்கிழமை விரதம் இருக்க வேண்டும். முதல் திங்கள் அன்று விரதம் துவங்கி மதியம் மட்டும் ஒரு குழந்தைக்கு அன்னம் கொடுத்து பின் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில் ஆறாவது திங்களன்று 6 குழந்தைகளுக்கு அன்னதானம் பரிமாறி விரதம் இருக்க வேண்டும். ஏழாவது திங்கள்கிழமை அன்று இங்கு புத்திர காமேட்டீஸ்வரர்க்கு  செவ்வரளி பூ மற்றும் பவளமல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்த்த வெண் பொங்கல் நெய்வேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

    ஆனி மாதம் பௌர்ணமியன்று சிவனுக்கு 11 சிவாச்சாரியார்கள் புத்திர காமேஷ்டி யாகம் நடத்துவார்கள் அதில் நாம் கலந்து கொண்டால் நமக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஜாதக ரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும். நாகதோஷம் நீங்க கோவிலில் உள்ள வேம்பு மற்றும் ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்தும், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக் கொள்வதன் மூலமாக சிறப்பான பலன்களை பெறலாம்.

    இக்கோவிலின் தல வரலாறு என்னவென்று  பார்த்தால் அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. தனக்குப் பின் நாட்டை ஆள இளவரசர் இல்லாததால் தசரதர் மிகவும் வருந்தினார். புத்திர பாக்கியம் உண்டாவதற்கு வழி சொல்லும்படி தன் குலகுரு  வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டார். அவர் இத்தலத்தை சுட்டிக்காட்டி சிவனை  வேண்டி புத்திர காமேஷ்டி யாகம்  செய்து வழிபடுவதன் மூலம் புத்திரப் பாக்கியம் கிடைக்கும் என்றார். அதன்படி  தசரத மன்னரும் இவ்விடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார்.

    இந்த யாகத்தின் வலிமையால் அவர் ராமர், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர் அவருக்கு  தான் நடத்திய யாகத்தின் பெயரையே  சூட்டினார். அன்றிலிருந்து அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை புத்திர காமேட்டீஸ்வரர் என்ற நாமத்துடன் அழைக்கப்படுகின்றார்

    . இந்த திருக்கோவிலின் சிறப்பு அம்சமாக அதிசயத்தின் அடிப்படையில் எந்த ஒரு செயலையும் விநாயகரிடம் துவங்கி ஆஞ்சநேயரிடம் முடிக்க வேண்டும் என்பர். இங்கு நதிக்கரையில் வடக்கே பார்த்து  விநாயகரும்  அவருக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். பக்தர்கள் தாம் எந்த ஒரு செயலையும்  துவங்கும்போது இந்த விநாயகரை வணங்கிச் செல்கின்றனர். அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். ஆஞ்சநேயர் சிலையில் சங்கு,சக்கரம் உள்ளது மற்றொரு சிறப்பு. இவ்வாறு எதிரெதிரே விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை காண்பது அரிது.

    குழந்தைப்பேறு அருளும் புத்திர காமேட்டீஸ்வரர் கோவில்லின் வரலாறு
    பிரகாரத்தில் அறுபத்துமூவர், சொர்ண விநாயகர், அம்பிகையுடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்திர லிங்கம், காளியுடன் வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதன், பாமா ருக்மணியுடன் கோபாலகிருஷ்ணன், காலபைரவர், சனீஸ்வரர், மற்றும் சூரியன் ஆகியோர் உள்ளனர்.

    இக்கோயிலில் நேர்த்திக்கடன் என்று பார்த்தால் பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும்.

    Next Story
    ×