search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தலையாட்டி விநாயகர் திருக்கோவில்
    X
    தலையாட்டி விநாயகர் திருக்கோவில்

    அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோவில்- ஆத்தூர்

    புதிய செயல்களை தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கை.
    மூலவர்: – தலையாட்டி விநாயகர்(காவல் கணபதி)
    தீர்த்தம்: – வசிஷ்ட நதி
    பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
    மாவட்டம்: – சேலம்

    தலவரலாறு

    சிவதல யாத்திரை சென்ற வசிட்ட முனிவர், வசிட்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை நிறுவனம் செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் நிறுவிய லிங்கத்தில் ஒளிப்பிழம்பு வடிவாக அமர்ந்தார் சிவன்.

    காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது. பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டி முதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான்.

    இவ்வாறு மன்னன் இக்கோயிலை கட்டும் முன்பு சிவனிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பே, பணியைத் துவங்கினான். சிவனே கோயில் திருப்பணிக்குப் பாதுகாவலராகவும் இருந்தார். மன்னன் கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து “பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?” என்று கேட்டான். அதற்கு சிவன், “நன்றாகவே கட்டியிருக்கிறாய்‘ என்று சொல்லும்விதமாகத் தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்குத் “தலையாட்டிப் பிள்ளையார்” என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.

    தலப்பெருமை

    புதிய செயல்களை தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கை.

    பொதுத்தகவல்

    முற்காலத்தில் இப்பகுதியில் வசிட்டநதி, சுவேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் “ஆற்றூர்‘ என்றழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் “ஆத்தூர்” என்று மருவியுள்ளது. இவரது கோயிலுக்கு அருகில் சிவன், காயநிர்மாலேசுவரராக அருளுகிறார்.

    திருவிழா: – விநாயகர் சதுர்த்தி.

    கோரிக்கைகள்:

    திருமண, புத்திர, கிரக தோடம் நீங்க இங்கு வழிபடலாம்.

    நேர்த்திக்கடன்:

    விநாயகருக்கு புத்தாடை சாத்தி, பூசைகள் செய்து வழிபடுகிறார்கள்.

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில்,
    ஆத்தூர் -636102,
    சேலம் மாவட்டம்
    Next Story
    ×