search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோவில்
    X
    திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோவில்

    திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோவில்- திருச்சி

    திருச்சி, திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாட்சன் திருகோவிலின் பெருமாள் பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ளார். திருக்கோவிலின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள் இங்கு பார்ப்போம்.
    திருச்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி - துறையூர் சாலையில் இருக்கிறது இந்த திருவெள்ளறை எனும் சிற்றூர் அங்கே வெண் பாறைகளால் ஆன குன்றின் மேல் ஒரு கோட்டை போலவே அமைக்கப்பட்டுள்ளது இக்கோவில். திருவரங்கம் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையாகச் சொல்லப்பட்டாலும், இந்த திருவெள்ளறை திருவரங்கத்தினை விட பழமையான கோவில் என கருதப்படுகிறது. 

    மூலவர்

    புண்டரீகாட்சன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.

    தாயார் - செண்பகவல்லி தாயார் எனும் பங்கயச் செல்விக்கு தனி சன்னதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்

    பெயர் காரணம்:

    இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது.

    தீர்த்தம்:

    திருக்கோவிலில் திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று 7 தீர்த்தங்கள் கோவிலுக்குள்ளேயே அமைந்துள்ளது.

    விமானம்:

    விமலாக்ருதி விமானம்.- கோவில் கோபுரம் பாதி சிதைந்து பாதிமட்டுமே எஞ்சி இருக்கின்றது.

    கோவிலின் சிறப்பம்சம்:

    எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இங்கு உத்தராயண வாசல் (வடக்கு வாசல்), தட்சிணாய வாசல் (தெற்கு வாசல்) என இரு வாசல்கள் உண்டு.
    தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சினாய வாசல் வழியாக பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சிபிச்சக்கரவர்த்திக்கு பெருமாள் ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) காட்சி அளித்ததாக தல புராணம் கூறுகிறது. இதனால் ஸ்வேதபுரி நட்சத்திரம் எனவும் பெயர் வந்தது.

    ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய, சந்திரர்கள், ஆதிசேசன் முதலியோர் மனித வடிவில் வந்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ததாக் கூறப்படுகிறது.

    இங்கு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் பெருமை.

    தல வரலாறு:

    திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம் என்றார். அதற்கு லட்சுமி, தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு  என்றாள். இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல்.

    இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்றார். இந்நிலையில் இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் சென்றபோது, ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது.

    படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும்போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு முனிவர், நீ மிகவும் கொடுத்து வைத்தவன்.
    நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய் என்றார்.

    அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம், நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன் என்றார் பெருமாள். இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்றார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர், உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோவில் கட்டி திருப்தி பெறுக’ என்றார்.

    அரசனும் கோவில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்றார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார்செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

    கோவில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது அமைந்துள்ளதால் இத்தலம்  வெள்ளறை என்ற பெயர் பெற்று  தற்போது திருவெள்ளறை ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும், தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள்புண்டரீகாட்சப்பெருமாள் ஆனதாக வரலாறு கூறுகிறது.
          
    கோவில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள்உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 4வது திவ்ய தேசம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு படைத்த பொங்கலை சாப்பிட்டால் புத்ரபாக்கியம் நிச்சயம் என்பது ஐதீகம்.
    Next Story
    ×