search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாலட்சுமி பூஜை
    X
    மகாலட்சுமி பூஜை

    நாளை தீபாவளி: விரதம் இருந்து மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி?

    பூஜையின் போது மகாலட்சுமிக்கு புத்தம் புது ரூபாய் நோட்டுகளை படைப்பது நல்லது. பூஜை முடிந்த பின்னர் இந்த ரூபாய் நோட்டுகளையும், அர்ச்சனை செய்த ரூபாய் அல்லது நாணயங்களையும் ஒரு சிவப்பு துணியில் கட்டி லாக்கரில் வைக்க வேண்டும்.
    மகாலட்சுமி தாயார் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள் தீபாவளி. அதனால் தீபாவளியின் போது மகாலட்சுமி பூஜை முக்கிய இடம் வகிக்கிறது, அன்றைய தினம் மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பான பலனை தரும்.

    தீபாவளிக்கு முன்னதாகவே வீட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாசல் கதவுகளில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.

    பூஜையறையில் மாக்கோலமிட்டு ஒரு மனையில் மஞ்சள் அல்லது சிவப்புத்துணி போட்டு அதில் பிள்ளையார், மகாலட்சுமி படங்களை வைக்க வேண்டும். சிலை இருந்தால் சிலைகளை வைக்கலாம். பிள்ளையாரை மஞ்சளிலும் செய்து வைக்கலாம். இதில் குலதெய்வத்தையும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு படம் இருந்தால் அதை வைக்கலாம். இல்லை என்றால் ஒரு செம்பில் நீர் மலரிட்டு குலதெய்வமாக பாவித்து வைக்கலாம்.

    பிள்ளையார், மகாலட்சுமி, குலதெய்வம் மூவருக்கும் நல்ல மணமுள்ள மலர்களை சூட்ட வேண்டும். தாமரை மலர் கிடைத்தால் மகாலட்சுமிக்கு சூட்டுவது நல்லது. பிள்ளையாருக்கு மஞ்சள் துண்டு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, வாழை உள்ளிட்ட பழங்கள் படைக்க வேண்டும்.

    நெய்வேத்தியமாக வடமாநிலங்களில் நெய்யினால் பூரி சுட்டு, உருளைக்கிழங்கு, தக்காளி கூட்டு செய்து படைப்பார்கள். நெய்க்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பு உண்டு. நெய்யில் நிவேதனம் செய்தால் அணுகிரகம் விரைவில் கிடைக்கும்.

    பால் பாயாசம் சேமியா அல்லது அரிசி சேர்த்து செய்து வைக்கலாம். தமிழ்நாட்டில் அரிசி உணவுதான் பிரதானமாக இருப்பதால் அரிசி பாயாசமே செய்து கொள்ளலாம். வெங்காயம், பூண்டு சேர்க்காமல் அன்னம் செய்து படைக்கலாம். முக்கியமாக நெல் பொரி படைக்க வேண்டும். அதில் வெல்லம், பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளலாம்.

    ஒரு பெரிய அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். அதனை தொடர்ந்து 3 தினங்கள் எரியுமாறு பார்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. மகாலட்சுமி தாயாருக்கு கும்ப கலசம் வைக்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக வைக்கலாம்.

    பின்னர் மகாலட்சுமியின் 108 போற்றிகளை சொல்லி வழிபட வேண்டும். அது தெரியவில்லை என்றால் மிக எளிமையாக ஓம் ஸ்ரீம் நமக என்று சொல்லி வழிபடலாம்.

    வாய்ப்பு உள்ளவர்கள் 108 தாமரை மலர்களை போட்டு அர்ச்சனை செய்யலாம். இல்லை என்றால் குங்கும அர்ச்சனை செய்யலாம். அல்லது 108 வெள்ளி காசுகளை வைத்து அர்ச்சனை செய்யலாம். 108 புது ரூபாய் தாள்களை கொண்டு அர்ச்சிக்கலாம். அல்லது ஒரு ரூபாய் நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

    மகாலட்சுமி தாயாருக்கு மணியடித்து ஆரத்தி காட்டும் போது ஒரு வெடியாவது வெடிக்க வேண்டும்.

    பூஜையின் போது மகாலட்சுமிக்கு புத்தம் புது ரூபாய் நோட்டுகளை படைப்பது நல்லது. பூஜை முடிந்த பின்னர் இந்த ரூபாய் நோட்டுகளையும், அர்ச்சனை செய்த ரூபாய் அல்லது நாணயங்களையும் ஒரு சிவப்பு துணியில் கட்டி லாக்கரில் வைக்க வேண்டும். ஒரு சில நாணயம் நோட்டுகளை மணிபர்சிலும் வைக்கலாம்.

    அந்த பணத்தை உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஏழ்மையில் இருந்தால் வசதி பெறுவதற்காக அவர்களுக்கு கொடுக்கலாம். அவர்கள் விருத்தி அடைவார்கள். அவர்கள் வசதி அடைய அடைய உங்கள் வாழ்க்கையிலும் செல்வம் செழிக்கும்.

    நிவேதனம் செய்த பின்னர் பிரசாதத்தை குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும்.

    பொதுவாக பூஜையில் வைத்த மலர் மாலை, கலசம் உள்ளிட்டவற்றை 3-வது நாள் எடுப்பது தான் நல்லது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எடுக்கக்கூடாது. இந்த முறை 3-வது நாளாக சனிக்கிழமை வருவதால் அன்று எடுக்கலாம்.

    கலசத்தில் நீர் வைத்திருப்பதால் அதை வீடு முழுவதும் தெளிக்கலாம். அரிசி வைத்திருந்தால் அதனை சமைத்து சாப்பிட வேண்டும். அர்ச்சனை செய்த குங்குமத்தை பெண்கள் திலகமிட பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முறை தீபாவளியன்று மகாலட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 6.10 மணி முதல் இரவு 8.10. மணி வரை. லட்சுமி வழிபாட்டுக்கு பிரதோஷ காலமே உகந்தது என்பதால் மாலை 5.30 மணியில் இருந்தும் இரவு 8.10 மணிக்குள் செய்யலாம்.

    Next Story
    ×