search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அந்திலி லட்சுமி நரசிம்மர்
    X

    பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அந்திலி லட்சுமி நரசிம்மர்

    விழுப்புரம் மாவட்டம் அந்திலி லட்சுமிநரசிம்மர் கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகளால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும்.
    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திலும், அரகண்டநல்லூர் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது அந்திலி லட்சுமிநரசிம்மர் கோவில்.

    இந்த கோவில் அரசமரத்தடியில் கருட வடிவிலான சிறிய பாறையின் மீது அமைந்துள்ளது. கோவிலில் நரசிம்மர் மீது ஆண்டு முழுவதும் சூரிய ஒளி படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது மிக சிறப்பு அம்சம் ஆகும். மகாவிஷ்ணு தனது நரசிம்ம அவதாரத்தில் தூணில் இருந்து தோன்றி இரணியனை அழித்து பக்த பிரகலாதனை காப்பாற்றினார். அப்போது மகாவிஷ்ணு கருட வாகனத்தை பயன்படுத்தவில்லை.

    எந்த சூழ்நிலையிலும் தன் மீதே அமர்ந்து பயணம் செய்யும் மகாவிஷ்ணு இந்த முறை பரமபதத்தின் மூலம் தூணில் இருந்து தோன்றி பக்த பிரகலாதனை காப்பாற்றி காட்சியளிக்க காரணம் என்ன? தான் (கருடன்) ஏதாவது தவறு செய்து விட்டோமா? அதனால்தான் நம்மீது பயணம் செய்வதை மகாவிஷ்ணு தவிர்த்து விட்டாரோ என்று கருட பகவான் குழப்பம் அடைந்தார்.

    உடனே பூமிக்கு வந்து தென்பெண்ணை நதிக்கரையின் அருகில் உள்ள கருட வடிவிலான பாறையில் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார். கருடனின் கடும் தவத்தை பார்த்த மகாவிஷ்ணு நேரில் வந்து கருடனின் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு கருடன், பக்த பிரகலாதனுக்கு நரசிம்மராக காட்சியளித்த நீங்கள், எனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கூறினார். இதைகேட்ட மகாவிஷ்ணு கருடன் முன்பு நரசிம்மராக காட்சியளித்தார்.அப்போது மகாலட்சுமியும், மகா விஷ்ணுவின் மடியில் அமர்ந்து கருடனுக்கு காட்சியளித்த காரணத்தால் இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலுக்கு பல மகான்கள் வந்து தரிசித்து சென்றுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகளால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும். திருமண தடை நீங்கும். கண் சம்மந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதாகவும் கூறுகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் சாற்றுதல், ஹோமம் செய்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

    Next Story
    ×