என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் கோவில்தெருவில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
    திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் கோவில்தெருவில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை திருவிழா திருப்பலி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி அன்று இரவு நடைபெற்றது. கே.என்.நேரு எம்.எல்.ஏ. தேர்பவனியை தொடங்கி வைத்தார்.

    ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி பட்டாபிராமன்சாலை, அரசு மருத்துவமனை, புத்தூர் நால்ரோடு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சவேரியார் கோவில்தெரு நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் திரளாக கலந்து கொண்டனர். 
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பெருவிழா ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கொடியேற்றி வைத்தார். திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 8-ம் திருவிழாவான நேற்று அதிகாலை பழைய கோவிலில் திருப்பலியும், அதை தொடர்ந்து திருப்பலி திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் நடந்தது.

    மாலையில் ஜெபமாலை திருப்பலியும், மறை மாவட்ட பொருளாளர் அலாய்சியஸ் தலைமையில் புதூர் பங்கு பணியாளர் சாம் மேத்யு மறையுரையும் ஆற்றினார். இரவு சப்பர பவனி நடந்தது. 9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி நடக்கிறது. காலை 6.15 மணிக்கு திருப்பலியும், 8 மணி முதல் 9 மணி வரை திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், 10.30 மணிக்கு நோயாளர்களுக்கான திருப்பலியும் நடக்கிறது.

    இதற்கு வாவத்துறை பங்கு தந்தை ஜான்ஜோர் கென்சன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி முன்னாள் பங்கு தந்தை லியோன் எஸ்.கென்சன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்க தேர் பவனியும் நடக்கிறது.
    சாத்தானின் சோதனையை வென்று கடவுளின் திட்டத்துக்கு முற்றிலும் தம்மைக் கையளித்ததால், இயேசு தம்மை ‘இறைமகன்’ என்று நிரூபித்தார்.
    கிறிஸ்தவ சமயத்தில் ஒருவர் திரு முழுக்கு (ஞான ஸ்நானம்) பெறுகின்ற வேளையில், “சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டு விடுகிறீர்களா?” என்று குருவானவர் கேட்பது வழக்கம். இந்த வழக்கம் தோன்றியதன் பின்னணியில், இறை மகன் இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று உள்ளது. அதுதான் இயேசுவை சாத்தான் சோதித்த நிகழ்ச்சி.

    ‘இயேசு திருமுழுக்கு பெற்றதும் பாலைநிலத்தில் நாற்பது நாள் இருந்தார். அப்போது அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டார்’ என்று மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தி நூல்களில் காண்கிறோம். “அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் இயேசு தோன்றினார்” (1 யோவான் 3:8) என்று கூறும் அதே விவிலியத்தில், இத்தகைய நிகழ்வு சொல்லப்பட்டிருப்பது பலருக்கும் வியப்பைத் தருகிறது.

    இயேசு இறைமகன் என்றால், அலகை (சாத்தான்) அவரை சோதிப்பது சாத்தியமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சாத்தானால் சோதிக்கப்பட்டார் என்றால், இயேசுவை இறைமகன் என்று ஏற்க முடியுமா என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், கடவுளுக்கு எதிராக மனிதரை செயல்படத் தூண்டுவதே சாத்தானின் வேலை என்பது நமக்குத் தெரியும். ஆகவே, மானிட மகனாகத் தோன்றிய இயேசுவையும் சாத்தான் சோதித்துப் பார்த்தது.

    “இறைமகனாகிய இயேசு எல்லா வகையிலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டவர். எனினும் பாவம் செய்யாதவர்” (எபிரேயர் 4:15) என்று விவிலியம் கூறுகிறது. இந்த உண்மையின் உருவகமாகவே இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்ட நிகழ்வு அமைந்துள்ளது. இயேசுவின் வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு மனப் போராட்டங்களை அவர் எப்படி வெற்றி கொண்டார் என்பதை நாம் இந்நிகழ்வின் வழியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

    இயேசு ‘இறைமகன்’ என்பதற்கு, தந்தையாம் கடவுள் சான்று பகர்ந்த பிறகு, அலகை அவரை சோதிக்கிறது. இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் நோன்புஇருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அலகையின் பேச்சைக் கேட்டு, கல்லை அப்பமாக மாற்றி தம்மை இறைமகன் என்று இயேசு நிரூபித் திருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.

    இயேசு மறுமொழியாக, ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என மறைநூலில் எழுதியுள்ளதே’ என்றார். (மத்தேயு 4:2-4).

    ‘கடவுளின் பிள்ளைகள், உணவுக்காக சாத்தானின் பேச்சைக் கேட்க வேண்டியதில்லை’ என்பதே இயேசுவின் பதிலடி. ‘கடவுளின் வார்த்தையாகிய தம்மாலேயே மனிதருக்கு வாழ்வு கிடைக்கும்’ என்று கூறி சாத்தான் மீது இயேசு வெற்றி கொள்கிறார்.

    இயேசு வாழ்ந்த காலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கை ஏற் படுத்தின. ‘அப்பங்களைப் பெருகச்செய்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்த வேளையில், இயேசுவை அரசராக்க யூதர்கள் முயற்சி செய்தாலும் அவர் விலகிச் சென்றார்’ (யோவான் 6:15) என்று வாசிக்கிறோம். தமது மகிமைக்காக அல்லாமல், மக்களின் நலனுக்காகவே அற்புதங்களைச் செய்து இயேசு சோதனையை வென்றார்.

    இரண்டாவது சோதனைக்காக, சாத்தான் அவரை எருசலேம் நகரத்திற்குக் கூட்டிச் சென்றது. “கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ‘நீர் இறைமகன் என்றால் கீழே குதியும். கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று சாத்தான் அவரிடம் சொன்னது.

    இங்கு இயேசுவின் மீட்புச் செயலைத் தடுப்பதற்காக, அவரை தற்கொலை செய்யுமாறு அலகை தூண்டுகிறது. இயேசு அதனிடம், ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் எனவும் எழுதியுள்ளதே’ என்று சொன்னார் (மத்தேயு 4:5-7).

    ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ என இங்கு இயேசு பயன்படுத்தும் வார்த்தைகள் சாதாரணமானவை அல்ல. ஆண்டவராகியத் தம்மை சோதிக்க சாத்தானுக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்த்தும் விதத்தில் அவர் இப்படி கூறினார்.

    இயேசுவின் அதிகாரத்தை விமர்சித்து, அடையாளச் செயல்களை செய்து காட்டுமாறு கேட்ட பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்ற யூத சமயத் தலைவர் களுக்கு பதிலாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. ‘தேவையான நேரத்தில் கடவுள் அற்புதம் செய்வார் என்றாலும், அதிசயம் நிகழும் என நம்பி கடவுளை சோதிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது’ என்று கூறி சாத்தானை வெல்கிறார் இயேசு.

    மூன்றாவதாக, சாத்தான் அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், ‘நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்’ என்றது.

    இங்கு, அதிகாரமும் பதவியும் பெறுவதற்காக தன்னை வணங்குமாறு சாத்தான் சோதிக்கிறது.

    அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார் (மத்தேயு 4:8-10).

    அதாவது, இறைமகனாகிய தாம் அலகையின் காலில் விழுவது நடக்காத காரியம் என்று சொல்லி, இயேசு அலகையை விரட்டி விடுகிறார். இயேசுவை விட்டு அலகை அகன்றதும், வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். (மத்தேயு 4:11)

    இயேசுவின் இறைத்தன்மையின் மேன்மையைக் கண்ட சீடர்கள், அவர் உலகு சார்ந்த ஓர் அரசை அமைக்கப்போவதாக எண்ணினர். அவரது அரசாங்கத்தில் பதவி கிடைக்கும் என்ற எண்ணத்துடனே பலர் அவரது சீடர் களாக இருந்தனர். யூதர்களில் பலருக்கும் இத்தகைய எண்ணம் இருந்தது. ஆகவேதான் இயேசு எருசலேமில் நுழைந்தபோது, “ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக” (லூக்கா 19:38) என்று மக்கள் ஆர்ப் பரித்தனர்.

    ஆனால், சிலுவை சாவை ஏற்கும் தமது லட்சியத்தில் இருந்து இயேசு விலகவில்லை. “ஆண்டவரே, சிலுவை உமக்கு வேண்டாம்” என பரிந்துரைத்த பேதுருவிடம், “அப்பாலே போ சாத்தானே” என்று இயேசு கூறினார். “கடவுள் வடிவில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி மனிதராகத் தோன்றினார். சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்” (பிலிப்பியர் 2:6-8) என்ற வார்த்தைகள் இயேசுவின் மேன்மையை எடுத்துரைக்கின்றன.

    இவ்வாறு சாத்தானின் சோதனையை வென்று கடவுளின் திட்டத்துக்கு முற்றிலும் தம்மைக் கையளித்ததால், இயேசு தம்மை ‘இறைமகன்’ என்று நிரூபித்தார்.

    “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத்தேயு 16:24) என்றும் அவர் அழைப்பு விடுக்கிறார். இயேசுவின் அழைப்பை ஏற்று சோதனைகளை வென்று வாழ்ந்தால், நாமும் கடவுளின் பிள்ளைகளாக மாற முடியும்.

    டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
    நமது வாழ்க்கையில் நாம் தவறிய ஆட்டைப் போல இருக்கிறோம் என்பது இதயத்தால் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை வைத்தே கணக்கிடப்படும்.
    லூக்கா 15 : 4..7

    (புதிய மொழிபெயர்ப்பு )

    “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?

    கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.

    அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

    ( பழைய மொழிபெயர்ப்பு )

    உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

    கண்டு பிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

    அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    ( இதே உவமை மத் 18:12 ‍ 14 பகுதியிலும் உண்டு )
    இயேசு வழக்கம் போலவே மக்களுக்குப் புரியக் கூடிய விஷயங்கள் மூலமாக, மக்களுக்குத் தெரிந்திராத இறை அன்பைக் குறித்துப் பேசுகிறார்.

    ஒருவரையும் சிறியவராய் எண்ணக் கூடாது, இறைவனின் பார்வையில் எல்லோரும் மதிப்பு மிக்கவர்கள். எந்த ஒரு மனிதனும் தனது மீட்பை இழந்து விடக் கூடாது என்பதே இறைவனின் விருப்பம். என்பதே இந்த உவமையில் இழையோடும் சிந்தனையாகும்.

    இந்த உவமையில் இயேசுவே மேய்ப்பனாக இருக்கிறார். அவரிடம் நூறு ஆடுகள் இருக்கின்றன. அவரிடம் இருக்கும் ஆடுகள், அவரை நம்பி அவரை மீட்பராக ஏற்றுக் கொண்ட மக்களைக் குறிக்கிறது. இயேசுவை விட்டு விலகி பாவத்தின் வழியில் நடப்பவர் தான் வழி விலகிப் போன ஆடு.

    விலகிச் சென்றது ஒற்றை ஆடுதானே என நினைக்காமல், மற்ற ஆடுகள் போதும் என அமைதிகாக்காமல், அந்த ஒற்றை ஆட்டைத் தேடிச் செல்கிறார் மேய்ப்பன். இங்கே இயேசுவின் அன்பு வெளிப்படுகிறது.

    வரி தண்டுவோரையும், ஏழைகளையும், நோயாளிகளையும் பாவிகள் என உதறி நடந்தது யூத சமூகம். அவர்களுக்கு மீட்பு இல்லை என அறிவித்துத் திரிந்தது. அந்த சூழலில் இயேசுவின் இந்த போதனை ஏழைகளுக்கு புத்துணர்ச்சியை ஊட்டியது.

    விண்ணக மாட்சியை விட்டு, மண்ணுலகில் மனிதனாய் வந்து, சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டு, நம் பாவத்தையெல்லாம் சுமந்து தீர்த்த இறைவன் அவர். “என் வேலை முடிஞ்சது, இனி வேணும்ன்னா நீயா மீட்பின் வழிக்கு வா” என விடவில்லை. விலகிச் செல்கைடுல் மீண்டும் அவர் தேடி வருகிறார். அதில் அவருடைய அளவில்லா அன்பும் கரிசனையும் தெரிகிறது.

    ஆட்டுக்கு ஒரு இயல்பு உண்டு. அது சும்மா வழிதவறி விடாது. அருகில் ஏதேனும் புல்லைப் பார்த்தால் அந்தப் பக்கம் தாவும், அங்கிருந்து இன்னொரு அழகிய புல் கூட்டத்தைப் பார்த்தால் அங்கே போகும், இப்படியே சென்று கொண்டிருக்கும் ஆடு, தாமதமாகத் தான் புரிந்து கொள்ளும் தான் வழி விலகிவிட்டோம் எனும் உண்மையை !

    ஊரில் ஆட்டுக்குட்டியைக் காணோமெனில் சொல்வார்கள், “பக்கத்து மரச்சீனித் தோட்டத்துல பாரு, இல்லேன்னா சானல் கரைல புல் கூட்டத்துல போய் பாரு” என்று. ஆடு புல்லைத் தேடியோ இலையைத் தேடியோ தான் செல்லும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

    உலக செல்வத்தையும், உடனடிச் சிற்றின்பங்களையும் நாடித் தேடி ஓடும் மக்கள் இப்படித் தான் வழி விலகுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு படி, இன்னொரு படி என தாவித் தாவி அவர்கள் உலக சிற்றின்பங்களில் சிக்கிக் கொள்கின்றனர். கடைசியில் மந்தையை விட்டு வெகு தூரத்தில் சென்று விடுகின்றனர்.

    ஒரு சின்ன கோணப் பிழை கப்பலை பல மைல் தூரம் வழிவிலகச் செய்து விடும். முதலில் சிறிதாக இருக்கும் இடைவெளி போகப் போகப் பெரிதாகிவிடும். கடைசியில் எங்கே நிற்கிறோம் என்பதே புரியாமல் வெலவெலக்கும் சூழல் உருவாகும்.

    ஆடு, நாயைப் போல மோப்பம் பிடிக்காது. வழி விலகிவிட்டால் பதறிப்போகும். மே..மே எனும் அபயக் குரல் மூலம் யாரையேனும் தொடர்பு கொள்ள முயலும். அந்தக் குரல் கொடிய விலங்குகளை அடைந்தால் மரணம் சர்வ நிச்சயம். மந்தையிலுள்ள ஒரு ஆட்டுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் தப்பிவிடலாம்.

    ஆடுகளின் தொடர்பு அப்படித் தான் இருக்கும். எங்கிருந்தோ குரல் கொடுக்கும் குட்டி ஆட்டின் குரலுக்கு அன்னையின் குரல் மறு முனையிலிருந்து வழிகாட்டும். அது தான் அந்த ஆட்டை மீண்டும் மந்தையில் சேர்க்கும். அல்லது மேய்ப்பனின் குரல் கேட்க வேண்டும்.

    இங்கே ஆடு, தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டது. அதைத் தேடி வருகிறார் மேய்ப்பன். ஆட்டைக் கண்டு பிடிக்கிறார்.

    ஆட்டைக் கண்டுபிடிக்கும் மேய்ப்பன் அடையும் மகிழ்ச்சி நமக்கு இறையன்பின் ஆழத்தைப் புரிய வைக்கிறது. ஒரு சின்ன பழிச் சொல் இல்லை, ஒரு சின்ன திட்டு இல்லை, அடி இல்லை, விசாரணை இல்லை. அள்ளி எடுத்து தோளில் போடுகிறார். நடக்கிறார்.

    ஒரு ஆடு எத்தனை கிலோ இருக்கும் என்பதெல்லாம் மேய்ப்பனுக்குக் கவலையில்லை. தனது குழந்தை எவ்வளவு எடையாய் இருந்தாலும் தூக்கிச் சுமக்கும் அன்னையைப் போல அவர் சுமக்கிறார். அவர் அடைகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாததாய் இருக்கிறது.

    ஆட்டைச் சுமந்து வரும் மேய்ப்பன் நேரடியாக வீட்டுக்குச் சென்று அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து விருந்து வைத்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார். வழிவிலகிச் செல்லும் ஒரு மனிதர் மீண்டும் இறைவனிடம் வரும்போது விண்ணகம் சிலிர்க்கிறது, மகிழ்கிறது. கொண்டாடுகிறது.

    99 ஆடுகளையும் மேய்ப்பன் உதாசீனம் செய்யவில்லை, அவர்களை மந்தையாய் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு ஆட்டைத் தேடிச் செல்கிறார்.

    நமது வாழ்க்கையில் நாம் தவறிய ஆட்டைப் போல இருக்கிறோம் என்பது இதயத்தால் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை வைத்தே கணக்கிடப்படும். நூறு பேர் இருக்கின்ற ஒரு திருச்சபையில், ஒருவர் மட்டும் இதயத்தால் மற்றவரை விட தொலைவில் இருக்கலாம். ஆங்காங்கே சிதறி இருக்கும் நூறு பேர் இதயத்தால் இணைந்தே இருக்கலாம். பாவ வழியினால் இயேசுவின் இதயத்தை விட்டு விலகி இருக்கும் மக்களை இறைவன் தேடிவருகிறார்.
    பூண்டி மாதா பேராலயத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், மன அமைதி பெறவும், உலக நன்மைக்காகவும் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது.
    பூண்டி மாதா பேராலயத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், மன அமைதி பெறவும், உலக நன்மைக்காகவும் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. இதில் பாப்பாக்குடி தியான மைய இணை இயக்குனர் மார்ட்டின்ராஜா தலைமை தாங்கினார். இதில் பூண்டி மாதாவின் தேர்பவனி நடந்தது.

    அப்போது பக்தர்கள் பிரார்த்தனை பாடல்களை பாடியபடி ஊர்வலம் வந்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைசாமி மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
    அன்பான தேவ பிள்ளைகளே, நம் ஆண்டவர் நமக்கென்று ஒரு சித்தம், திட்டத்தை வைத்திருக்கிறார். நாம் ஜெபத்தோடு காத்திருக்கும்போது நிச்சயம் ஆண்டவர் காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.
    பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நாம் நம் குடும்ப காரியங்கள், தேவைகள் ஆகியவற்றுக்காக அதிகமாக ஜெபிக்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்கும் பதில் கிடைப்பதில்லையே என கலங்குகிறோம்.

    ‘கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்’. (ஏசா.53:10)

    மேற்கண்ட வசனத்தை வாசித்துப் பாருங்கள். கர்த்தருடைய சித்தத்தை ஆண்டவர் நிச்சயம் நிறைவேற்றுவார். அப்படியானால் அவருக்குச் சித்தமில்லாத காரியங்களை அவர் வாய்க்கப் பண்ண மாட்டார்.

    வேதம் சொல்லுகிறது, ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்’. (I யோவான் 5:14).

    எனவே அவருடைய சித்தத்தின்படி ஜெபித்தால் நிச்சயம் அற்புதம் நடக்கும்.

    தேவ சித்தம் அறிய ஜெபம்

    ஆதியாகமம் 24:12-14 வரையுள்ள வசனங்களை வாசித்துப் பார்ப்பீர்களேயானால், ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு ஒரு நல்ல பெண்ணைத் தேடிக்கொண்டு வர எலியேசரை அனுப்புகிறார். அப்பொழுது எலியேசர் தன் எஜமானின் குமாரனுடைய வாழ்வில் தேவசித்தம் நிறைவேற வேண்டும். தன் காரியத்தை கர்த்தர் வாய்க்கப் பண்ண வேண்டும் என்பதற்காக தேவசித்தத்தை அறிய ஒரு ஜெபம் ஏறெடுக்கிறதை நாம் காணலாம்.

    பிரியமானவர்களே, உங்கள் எதிர்காலம் மற்றும் பிள்ளைகளின் திருமணம், வேலை, படிப்பு காரியங்களில் அற்புதத்தை எதிர்நோக்கியிருக்கிற இந்நாட்களில், முதலாவது நம் வாழ்வில் தேவசித்தம் என்ன என்பதை அறிய ஜெபிக்க வேண்டும்.

    ஆண்டவரிடமிருந்து ஒரு அடையாளத்தைக் கேட்கலாம், கர்த்தரின் சித்தத்தை நமக்கு வெளிப்படுத்தும்படி ஜெபிக்கலாம். இப்படி ஜெபிக்கும் போது, அவரே தம் சித்தத்தை வெளிப்படுத்தி, காரியங்களை வாய்க்கப் பண்ணுவார்.

    தேவ சித்தம் நிறைவேற காத்திருக்க வேண்டும்

    ‘அந்த மனிதன் அவளைக் குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பயணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்’. (ஆதி.24:21)

    பிரியமானவர்களே, எலியேசர் தேவசித்தத்தை அறிய ஜெபம் பண்ணியபடியே காரியங்கள் நடந்தாலும், அவர் அவசரப்படாமல், அது தேவசித்தம் தானா என்பதை அறியும்படி காத்திருந்தான்.

    ஆனால் இன்று அநேகருக்கு காத்திருக்க பொறுமையில்லை. அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். அது முடிவில் ஏமாற்றத்திலும் பிரச்சினையிலும் கொண்டு போய்விடும்.

    ஆகவே பொறுமையோடு தேவசித்தம் நிறைவேற காத்திருங்கள். கண்டிப்பாக உங்கள் நம்பிக்கை வீண்போகாது. அன்பான தேவ பிள்ளைகளே, நம் ஆண்டவர் நமக்கென்று ஒரு சித்தம், திட்டத்தை வைத்திருக்கிறார். நாம் ஜெபத்தோடு காத்திருக்கும்போது நிச்சயம் ஆண்டவர் காரியங்களை வாய்க்கப்பண்ணுவார். உங்கள் குடும்ப வாழ்வில் அற்புதங்களைக் காண்பீர்கள்.

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    அநேகர் பாவம் போக்க பல புண்ணிய தேவாலயங்களுக்கும், புகழ் பெற்ற ஸ்தலங்களுக்கும் போகிறது உண்டு. காரணம், ‘எங்கள் பாவம் மாற வேண்டும், பாவ தோஷம் நீங்க வேண்டும்’ என்பது தான்.
    ஆசைகள் மிகுந்த இந்த உலகில் வாழும் மனிதர்கள் கூட்டத்தில் பாவம் செய்யாத நபரே இல்லையென்று கூறினால் அது மிகையாகாது.

    கடவுள் சிருஷ்டித்த முதல் மனிதன் ஆதாம் முதல், இந்த நிமிடம் வாழும் மனிதன் வரையும், இனி உலகம் இருக்க போகும் கடைசி நிமிடம் வரையுள்ள மனிதர்கள் ஏதாவது ஒரு விதத்தில் ஏதாவது ஒரு வகையில் பாவம் செய்கின்றனர்.

    பாவம் செய்யும் பொழுது சந்தோஷமாக இருக்கும், அதை செய்து முடித்தவுடன் நம் மனசாட்சியே நம்மை வாதிக்கும். ஆகவேதான் அந்த வேதனை தாங்காமல், மனசாட்சி நாளுக்கு நாள் வாதிப்பதினால், அநேகர் தற்கொலை செய்து மாண்டு போகின்றனர்.

    அநேகர் இந்த பாவம் போக்க பல புண்ணிய தேவாலயங்களுக்கும், புகழ் பெற்ற ஸ்தலங்களுக்கும் போகிறது உண்டு. காரணம், ‘எங்கள் பாவம் மாற வேண்டும், பாவ தோஷம் நீங்க வேண்டும்’ என்பது தான்.

    ‘மனுக்குலத்தின் பாவங்களை போக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் பலியானார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்’ (1 யோவான் 1:7) என்று வேதம் கூறுகிறது.

    ஒரு புகழ் பெற்ற ஓவியருக்கு ஒரு முறை ஒரு ஆசை வந்தது. இயேசு கிறிஸ்துவையும், அவருடைய பன்னிரண்டு சீடர்களையும் ஓவியம் தீட்ட வேண்டும் என்று.

    இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் பலியாவதற்கு முன்னர் தன் பன்னிரண்டு சீடர்களுடன் ஒரு மேல்வீட்டறையில் இராப்போஜனம் பண்ணினார் என்று வேதம் கூறுகிறது.

    இந்த சம்பவத்தை ஓவியமாய் வரைய அந்த காலகட்டத்தில் வாழ்ந்த இயேசுவின் சீடர்கள் எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்து, யூகித்து, ஒவ்வொரு மனிதனாய் தேடிப்பிடித்து அவனை அமரவைத்து ஓவியம் தீட்டினார்.

    முதலாவது சீடரை தீர்மானித்து வரைந்தார். பதினோரு சீடர்களை வரைந்து முடித்தார். கடைசியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும்படி காட்டிக் கொடுத்த யூதாசை வரைய வேண்டி இருந்தது.

    பல நபர்களை தேர்ந்தெடுத்து பார்த்தார் அவருக்கு திருப்தியே வரவில்லை. இறுதியாக அவர் அந்த ஊரின் சிறைச்சாலைக்குச் சென்று கொலை, திருட்டு, கொள்ளை, போன்ற குற்றங்களில் ஈடுபட்ட ஒரு சிறை கைதியை தேர்ந்தெடுத்து வரைய எத்தனித்தார். அப்படியே வரைந்து முடித்தார். அவருக்கு மிகுந்த சந்தோஷம். மிகவும் நன்றாக பொருத்தமாக அந்த கைதியின் முகம் இருந்தது.

    இறுதியாக அவர் ஏசு கிறிஸ்துவை வரைய, அதற்கேற்ற நபரை தேடி அலைய ஆரம்பித்தார். நாட்கள் கடந்தன, யாரை அவர் பார்த்தாலும் அவருக்கு திருப்தி வரவில்லை. இயேசு கிறிஸ்துவைப் போல வரைய அவர் நபர்களை தேடித்தேடி அலைந்தார். நாட்கள் உருண்டோடின. எவரும் அவருக்கு தென்படவில்லை. அவரும் திருப்தியாகவில்லை.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு ஒரு செய்தி வருகிறது. ஒரு பிரசங்கியார், அவர் இருந்த ஊருக்கு அருகாமையில் ஊழியம் செய்ய வந்திருக்கிறார். அவருடைய முகத்தில் அவ்வளவு பிரகாசம், சாந்தம், அன்பு. ஜனங்களெல்லாரும் அவரிடம் பிரார்த்தனை செய்ய போகின்றனர் என்று.

    இவரும் அவரை காண விரைந்தோடினர். அவரை கண்டவுடன் இவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இயேசு கிறிஸ்துவாக வரைவதற்கு இவரே பொருத்தமான நபரென்று எண்ணி தன் ஓவிய திட்டத்தை அவரிடம் விவரித்து அவரை வரையவேண்டும் என்று பணிவுடன் கேட்டார்.

    அந்த ஊழியரும், ‘வரைந்து கொள்ளுங்கள்’ என்று அவருக்கு முன் அமர்ந்தார். அந்த ஓவியர் வரைய ஆரம்பித்தார்.வரைந்து முடித்தவுடன் இவருக்கு மிகுந்த சந்தோஷம். அந்த ஊழியருக்கு சந்தோஷத்தோடே நன்றி கூறும் வேளையில் அந்த ஊழியர் இப்படியாக கேட்டார்: ‘என்னை இதற்கு முன்னால் பார்த்திருக்கின்றீர்களா, என்னை அடையாளம் தெரிகிறதா?’.

    ‘இல்லையே, நான் இதற்கு முன்பு உங்களை பார்த்தது இல்லையே’ என்று ஓவியர் பதிலளித்தபோது: அந்த ஊழியர் ஒரு புன்முறுவலுடன் கேட்டார், ‘சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊரின் சிறைச்சாலைக்கு நீ சென்றிருந்தாயா?’

    ‘ஆம், சென்றிருக்கிறேன்’ என்று இவர் பதிலளித்திருக்கிறார். ‘அப்பொழுது யூதாசை வரைய கைதிகளைப் பார்த்தாயல்லவா?’ என்றார். ‘ஆம், பார்த்தேன், நான் அதில் ஒரு கைதியை தேர்ந்தெடுத்து யூதாஸாக வரைந்தேன்’ என்றார்.

    ‘அந்த கைதி வேறு யாரும் இல்லை, நான் தான்’ என்றார் இந்த ஊழியர்.

    ஓவியருக்கு பிரமிப்பு வந்தது.

    ‘நான் சிறைச்சாலையில், இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். என் தண்டனைக் காலம் முடிந்ததும் நான் விடுதலையாகி ஊழியம் செய்து வருகிறேன்’ என்றார்.

    ஆம், அவருடைய பாவங்களை நீக்கி இரட்சித்த இயேசு கிறிஸ்து இன்றைக்கும் ஜீவிக்கிறார். அதுபோல இதை வாசிக்கின்ற அனைவரையும் மன்னித்து, இரட்சித்து, ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக.

    சகோ. சி சதீஷ், வால்பாறை.

    கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தின் 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடி பவனி, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, ஆராதனை ஆகியவை நடந்தது. அதைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து திருப்பலி மற்றும் மறையுரையாற்றினார். இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல் அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.
    பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: ‘தபீத்தாளே, எழுந்திரு’ என்றான். (அப்.9:40)

    உலகம் கற்பனை செய்துபார்க்க முடியாத அதிசயமான காரியங்கள் ஜெபத்தினால் நடப்பிக்கப்படுகின்றன. யோப்பா பட்டணத்தில் தபீத்தாள் என்ற ஸ்திரி இருந்தாள். அவள் மிகுதியான நற்கிரியைகள், தான தருமங்கள் செய்துகொண்டு வந்தாள். அவள் திடீரென்று வியாதிப்பட்டு மரணமடைந்தாள். மேல் வீட்டில் கிடத்தி வைத்தார்கள்.

    இயேசுவின் சீஷரான பேதுருவை அழைத்துச்சென்று தபீத்தாள் செய்திருந்த நல்ல காரியங்களை எல்லாம் பேதுருவுக்கு தெரிவித்தார்கள். பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து; முழங்காற்படியிட்டு இறைவனிடம் ஜெபம் பண்ணி பிரேதத்தை பார்த்து: ‘தபீத்தாளே எழுந்திரு’ என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்தாள். பேதுரு அவளை உயிருள்ளவளாக ஜனங்களுக்கு முன்பாக நிறுத்தினான். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

    தானியேல் தான் முன் செய்துவந்த படியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணினான் (தானி.6:10).

    தரியு ராஜா அரசாண்ட காலத்தில் தானியேல் பிரதான மந்திரியாக இருந்தார். ‘ராஜா, என் ஜனங்கள் எனக்கு கீழ்படிகின்றவர்களா என்று சோதிக்கும்படியாக முப்பது நாள்வரை எந்த தேவனையாகிலும் யாதொரு மனிதர்களும் வேண்டுதல் செய்து ஜெபம் செய்யக்கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்தான். மீறினால் அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட கட்டளை பிறப்பித்து கட்டளைப் பத்திரத்தில் கையெழுத்து வைத்தான்.

    தானியேல், தரியு ராஜாவின் உத்தரவை தள்ளி, தான் முன் செய்து வந்தபடியே தினம் மூன்று வேளையும் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்செய்து பரலோக தேவனை பணிந்து கொண்டான்.

    ராஜா, தானியேலை சிங்கங்களின் கெபியிலே போட்டார். ஒரு இரவு முழுவதும் சிங்கங்களின் கெபியிலே இருந்தான். கர்த்தர் சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார். காலையில் சிங்கங்களின் கெபியிலிருந்து உயிரோடு வெளியே வந்தான். அவன் உடலில் ஒரு சேதமும் காணப்படவில்லை.

    ராஜா, தானியேலை பார்த்து ‘நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவித்தார்’ என்றான். தானியேலின் ஜெபம் ஜெயமாக மாறியது.

    வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரியின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. (1 இரா.17:17)

    தேவனிடம் நெருங்கி உறவாடும் தனி மனிதனாகிய எலியா என்ற தேவ மனிதன் சாறிபாத் ஊரில் ஒரு விதவை வீட்டில் தங்கி இருந்தான். விதவைக்கு ஒரு மகன் இருந்தான். அவன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் வியாதி அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவன் செத்துப் போனான்.

    எலியா அந்த குமாரனை வாங்கி தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் படுக்கவைத்து, ‘என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனை சாகப்பண்ணினதினால் விதவை ஸ்திரிக்கு துக்கத்தை வருவித்தீரோ’ என்று ஜெபம் செய்தான்.

    எலியா அந்த பிள்ளையின் மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து, ‘என் ஆண்டவரே, இந்தப் பிள்ளையின் உயிர் அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும்’ என்று ஜெபம் செய்தான்.

    அவன் உயிர் திரும்பி வந்து அவன் பிழைத்தான். எலியா பிள்ளையை தாயினிடத்தில் கொடுத்து, ‘உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்’ என்றான். அந்த ஸ்திரி, ‘நீர் தேவனுடைய மனுஷன். உமது வாயிலிருந்து பிறக்கும் வார்த்தை தேவ வார்த்தை என்று அறிந்தேன்’ என்றாள்.

    ‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள்’. (பிலி.4:6)

    நீயோ ஜெபம் பண்ணும் போது உன் அறை வீட்டினுள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

    தேவனுக்கு பிரியமில்லாத படி ஜீவிக்கிறவர் ஜெபம் அருவருப்பானது. செம்மையானவர்கள், பரிசுத்தமானவர்கள், நீதிமான்கள் ஜெபத்தையோ கேட்கிறார். பதில் கொடுக் கிறார்.

    வேதத்தையும் தேவனுடைய எச்சரிப்பு களையும் பொருட்படுத்தாதவர்களின் ஜெபம் கேட்கப்படுதல் அரிது. வேதத்தை படிக்காதவனுடைய ஜெபம் தேவனுக்கு பிரியமில்லாத ஜெபம்.

    திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல் அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். இயேசு அதிகாலையில் வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய் பிதாவை நோக்கி ஜெபம் செய்தார். நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.

    சகல யூத ஜனங்களையும் அழித்து நிர்மூலமாக்க ஆமானின் சதியால் அகாஸ்வேரு ராஜா உத்தரவு போட்டபோதும், எஸ்தர் உபவாசம் செய்து ஜெபித்ததால் சகல யூதர்களின் உயிர் பாதுகாக்கப்பட்டது. பவுல் எருசலேம் தேவாலயத்திலே ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கையில் ஞான திருஷ்டியடைந்து அவரைத் தரிசித்தான். ஜெபம் நமக்கு ஜெயத்தைத் தரும். ஆமென்.

    சி. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
    உங்கள் ஊழியத்திற்கும் விரோதமாய் எழும்புகிற எல்லா ஆவிகளையும், சத்துருவின் கிரியைகளையும் முறியடித்து ஜெயத்தோடு ஓட ஆண்டவர் நிச்சயம் கிருபை பாராட்டுவார்.
    ‘என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது’. சங்.23:5

    இந்த உலகத்திலே நமக்கு இருக்கிற ஒரே எதிரி சாத்தான் தான். அவன் தான் பலவிதங்களில் பலவிதமான மனுஷர்கள் மூலமாக கிரியை செய்து யுத்தங்களையும், சண்டைகளையும், வேதனைகளையும் கொண்டு வருகிறான்.

    ஆனால் இன்றும் கூட நம் குடும்ப வாழ்விலும், வேலை ஸ்தலத்திலும், ஊழியப்பாதையிலும் பலவித குழப்பங்களையும் போராட்டங்களையும் ஏற்படுத்தி நம்மை அலைக்கழிக்கிற எல்லாவிதமான சத்துருவின் கிரியைகளையும் தேவன் முறியடித்து நம் வாழ்விலே ஜெயத்தைக் கட்டளையிட வல்லவராயிருக்கிறார்.

    குடும்ப வாழ்வில்...

    பிசாசின் முக்கிய குறிக்கோளே குடும்பங்களைப் பிரிப்பது ஆகும். ஆதியில் ஏவாளுக்குள் நுழைந்து அவள் மூலமாய் அந்த குடும்பத்திற்குள் சாபத்தைக் கொண்டு வந்தான். இன்றைக்கும் சண்டைகள், வாக்குவாதங்கள், வியாதிகள், தரித்திரங்கள், கடன் பிரச்சினைகள், குழந்தை இல்லாமை... போன்ற போராட்டங்களைக் கொண்டு வந்து நம் குடும்பத்திலே குழப்பங்களையும், வேதனைகளையும் கொண்டு வரப்பார்ப்பான். தேவ பிள்ளைகள் அவனுடைய தந்திரங்களை அறிந்து செயல்பட வேண்டும்.

    தேவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரிய ஆசீர்வாதமே குடும்ப வாழ்க்கை தான். எனவே கவனமாயிருங்கள். வீணான வார்த்தை, கோபம், ஞானமற்ற நடத்தை, பொறாமை, பெருமை, மேட்டிமை, கோள் சொல்லுதல், கசப்பு, வைராக்கியம், பண ஆசை... இதுபோன்ற பிசாசின் செயல்களுக்கு இடம் கொடுத்து உங்கள் குடும்ப வாழ்வு பாதிக்க சாத்தானுக்கு இடம் கொடுத்து விடாதீர்கள்.

    ஆவிக்குரிய வாழ்வில்...

    ‘பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்’. யோவான் 8:34

    ஆவிக்குரிய வாழ்வில் பரிசுத்தமாய் வாழ விடாதபடி தடுப்பதே பிசாசின் தலையாய நோக்கம். தேவனுக்கும் நமக்கும் பிரிவினையை உண்டாக்கி தேவனோடு உள்ள உறவை எப்படியாகிலும் பிரிக்கப்பார்ப்பான். ஜெபிக்க விடாதபடி, வேதத்தை வாசிக்க விடாதபடி சோர்வுகளையும், உலகக் கவலைகளையும் கொண்டு வரப்பார்ப்பான். அப்பொழுதே புரிந்து கொள்ளுங்கள் பிசாசின் தந்திரங்களை. உடனே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, விழித்திருந்து ஜெபம் பண்ணி அவனை எதிர்த்து நில்லுங்கள். (I பேதுரு 5:8,9) அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.

    நம் தேவன் பரலோக வாழ்வுக்கென்று நம்மைத் தேர்ந்தெடுத்திருக்க, நாம் ஏன் நித்திய நரகத்தை சுதந்தரிக்க வேண்டும்? எனவே ஒருநாளும் பிசாசு நம்மை வஞ்சிக்க இடம் கொடாதிருங்கள். உபவாசமிருந்து, ஜெபம் பண்ணுங்கள். சத்துருவின் கிரியைகள் அழிக்கப்படுவது நிச்சயம்.

    ஊழியப்பாதையில்...

    ஒரு காலத்தில் தேவனுக்காக வல்லமையாகப் பிரகாசித்த அநேக தேவமனிதர்களை சாத்தான் இன்று வஞ்சித்து, சோர்வையும், பெலவீனத்தையும் கொண்டுவந்து, உலக ஆசை, செல்வம் இவற்றால் பரிசுத்தத்தைக் கெடுத்து தேவனுக்காக எழும்பவிடாதபடி முடக்கி வைத்திருக்கிறான். ஆகவே ஊழியம் செய்கிற தேவபிள்ளைகளே, எந்த விதத்திலாவது சாத்தான் நுழையாதபடி ஜெபத்தினாலும், அபிஷேகத்தினாலும் நிரம்பியிருங்கள். தேவனுக்காக வைராக்கியத்தோடு எழும்புங்கள். சாத்தான் நம்மை மேற்கொள்ளவே முடியாது.

    எனவே தூக்கம், கர்த்தருடைய ஊழியத்தில் அசதி, வீண் பேச்சு, மற்ற ஊழியர்களோடு ஒப்பிடுவது, காணிக்கையே குறிக்கோள், சோர்வு, பெலவீனம், குடும்பப் பிரச்சினை, இச்சை, பொருளாசை... போன்ற சாத்தானின் ஆயுதங்களை அடையாளம் கண்டுபிடித்து அவற்றை மேற்கொள்ள தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள்.

    ‘நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்’. எபே.6:11

    வானத்திலிருந்து அக்னியையும் மழையையும் இறக்கி, வைராக்கியமாய் ஆண்டவருக்காக ஊழியம் செய்த எலியாவையே யேசபேலின் ஆவி சோர்வுக்குள்ளாக்கவில்லையா? அவரை ஆண்டவர் தட்டி எழுப்பி, அவர் செய்து முடிக்க வேண்டிய ஊழியத்தை அவரை வைத்தே செய்து முடித்து அக்னி ரதம் மூலம் மகிமையான முடிவை கொடுத்தாரல்லவா?

    உங்கள் ஊழியத்திற்கும் விரோதமாய் எழும்புகிற எல்லா ஆவிகளையும், சத்துருவின் கிரியைகளையும் முறியடித்து ஜெயத்தோடு ஓட ஆண்டவர் நிச்சயம் கிருபை பாராட்டுவார்.

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54
    குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும்.
    குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். கேட்ட வரங்களையெல்லாம் புனித சவேரியார் அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை. அதனால்தான் புனித சவேரியாரை ‘கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்‘ என்று வாயார புகழ்கிறார்கள்.

    புனித சவேரியார்

    கிறிஸ்தவர்களின் இதய ஆசனத்தில் வீற்றிருக்கும் புனித சவேரியார், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் 1506-ம் ஆண்டு பிறந்தார். 1529-ம் ஆண்டு புனித இஞ்ஞாசியாரை சந்தித்தபிறகுதான் சவேரியாரின் வாழ்க்கை ஆன்மிகத்துக்கு திரும்பியது. அதைத்தொடர்ந்து 1537-ம் ஆண்டு சவேரியார் குருப்பட்டம் பெற்றார். 1542-ம் ஆண்டு அவர் கோவாவுக்கு வந்தார்.

    ஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். அவரது வார்த்தைகளும், செயல்பாடுகளும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை அவருக்கு பெற்றுத்தந்தன. அவர் பாடிய கத்தோலிக்க பாடல்கள் மக்களின் எண்ண ஓட்டங்களில் இடைவிடாது தவழ்ந்தன.

    புனித சவேரியார் கோவாவில் இருந்து, கடற்கரை ஓரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாட்டுக்கு சென்று மக்களுக்கு போதனை நடத்தினார். அங்கிருந்து அடிக்கடி நாகர்கோவில் கோட்டாருக்கு அவரது பயணம் அமைந்தது.

    மன்னருக்கு உதவி

    அந்த நேரத்தில்தான் திருவிதாங்கூர் மன்னருக்கும், பாண்டிய மன்னருக்கும் போர் நடந்தது. இந்த போரில் திருவிதாங்கூர் மன்னர் வெற்றிபெற புனித சவேரியார் உதவி புரிந்தார். இதனால் திருவிதாங்கூர் மன்னர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். தனது வெற்றிக்கு கை கொடுத்த புனித சவேரியாரை அவரும் போற்றினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க புனித சவேரியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதுள்ள சவேரியார் பேராலயத்தைச் சுற்றி ஒரு சிறிய ஆலயம் கட்ட நிலத்தையும், பணத்தையும் மன்னர் பரிசாக கொடுத்தார். அதைத்தொடர்ந்து கோட்டாரை மையமாகக் கொண்டு நற்செய்தி பணிகளை சவேரியார் மேற்கொண்டார்.

    அதன்பின்னர் புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றார். இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர்நீத்தார்.

    அழியாத உடல்

    அவரது புனித உடல் பல மாதங்களுக்குப் பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து, இறைஊழியம் செய்து பெரும்சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

    பேராலயம்

    புனிதர் பட்டம் பெற்ற சவேரியாருக்கு முதல் ஆலயம், நாகர்கோவில் கோட்டார் ஆலயமாகவே இருக்க வேண்டும் என்பது இந்த மறைமாவட்டத்து மக்களின் விருப்பமாக இருந்தது. அதை நிறைவேற்றினார்கள். உலகில் புனித சவேரியாருக்கு கட்டப்பட்ட முதல் ஆலயமாக கோட்டார் ஆலயம் விளங்கி வருகிறது.

    கோட்டார் மறைமாவட்ட பேராலயமாக திகழும் இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை நடத்திச் செல்கிறார்கள். அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.

    திருவிழாவில் மக்களுக்கு சிறப்பு

    சவேரியார் ஆலயம் கட்டும்போது நாகர்கோவில் அறுகுவிளை மற்றும் ராஜாவூர் மக்கள் அக்காலத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர். இதன்காரணமாக ஆண்டுதோறும் திருவிழாவின்போது இவ்வூர்களின் மக்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

    கொடிபட்டத்தில் கட்டுவதற்கான பூக்கள் மற்றும் பூ மாலைகளை ராஜாவூரில் இருந்தும், நாகர்கோவில் அறுகுவிளையில் இருந்தும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புனித சவேரியார் பேராலயத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    தூய ஆரோபண மாதா ஆலயம்

    கி.பி. 1542 முதல் கி.பி. 1552 வரையுள்ள காலகட்டத்தில் புனித சவேரியார் கோட்டாரில் மறைபணியாற்றினார். அப்போது அவர் கோட்டாரில் தூய ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பினார். அந்த ஆலயத்தில் அவர் தனது புனிதம் மிக்க கரங்களால் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.

    கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் ஒரு பகுதியில் தூய ஆரோபண மாதா ஆலயம் இன்றும் இருக்கிறது. மக்கள் அந்த ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தின் முன் அமர்ந்து வேண்டுதல் செய்தும், வணக்கம் செலுத்தியும் வருகிறார்கள். புனித சவேரியார் இந்தியாவுக்கு வந்ததின் 450-வது ஆண்டு நினைவாக அவர் கட்டியெழுப்பிய தூய ஆரோபண அன்னை ஆலயத்தில் முழுநேர நற்கருணை ஆராதனை 1-5-1994 அன்று தொடங்கப்பட்டது.

    புனிதர்களின் திருப்பண்டம் இடம்பெற்ற பேராலயம்

    கோட்டார் புனித சவேரியார் பேராலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு திகழ்கிறது. 1605-ம் ஆண்டில் மூவொரு இறைவன் ஆலயமானது புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அள்ளித்தருபவர் என்று மக்களால் போற்றப்படும் புனித சவேரியாரின் வாழ்க்கைப் பயணம் திசைமாற காரணமாக இருந்தவர் புனித இஞ்ஞாசியார்.

    எனவே புனித சவேரியார் பேராலயத்தில் புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியாரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. 
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் திருவிழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட 4 தேர்கள் பவனி நடந்தது. திருவிழாவை காண ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தன. ஒவ்வொரு நாள் விழாவையும் ஒவ்வொரு அமைப்பினர் நடத்தினார்கள். விழாவில் கடைசி 3 நாட்கள் தேர் பவனி நடைபெறுவது வழக்கம்.

    அதே போல 8-ம் நாள் மற்றும் 9-ம் நாள் திருவிழாவன்று இரவில் தேர் பவனி நடந்தது. அப்போது தேரின் பின்னால் மக்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றினர். இந்த நிலையில் 10-ம் திருவிழா நேற்று பகலில் தேர் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா சொரூபங்கள் வைக்கப்பட்டு இருந்த 4 தேர்கள் வீதிகளில் வலம் வந்தது.

    பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் வடிவீஸ்வரம், கம்பளம் சந்திப்பு, ரெயில்வே ரோடு சந்திப்பு வழியாக கேப் ரோட்டுக்கு வந்து பின்னர் மீண்டும் பேராலயம் சென்றது. அப்போது அந்தந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பிரார்த்தனை செய்தனர். கூட்டத்தின் மத்தியில் தேர் ஆடி அசைந்து சென்ற காட்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். பின்னர் மாலையில் தேர்கள் மீண்டும் நிலைக்கு வந்தன. அதைத் தொடர்ந்து தேரில் திருப்பலி நடந்தது.

    முன்னதாக காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. அதைத் தொடர்ந்து 8 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது.

    10-ம் திருவிழாவையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் குடும்பம், குடும்பமாக புனித சவேரியார் பேராலயத்தில் குவிந்தனர். தேர் பவனியையொட்டி பேராலயம் அமைந்துள்ள கேப் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடுகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பேராலயத்துக்கு வந்து செல்ல வசதியாக இருந்தது. இந்த சாலைகளில் எல்லாம் ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    ×