search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரோகித் சர்மா அதிரடி.. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
    X

    ரோகித் சர்மா அதிரடி.. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

    • இந்தியா தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா 86 ரன்களை குவித்தார்.
    • ஸ்ரேயாஸ் அய்யர் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார்.

    உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், இவர்கள் முறையே 20 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார். எனினும், 50 ரன்களில் ஆடிய போது முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை சேர்த்தது. இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். அதிரடியாக விளையாடிய இவர் 63 பந்துகளில் 86 ரன்களை குவித்து அசத்தினார். இவருடன் ஆடிய சுப்மன் கில் 16 ரன்களிலும், அடுத்து வந்த விராட் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதன் மூலம் இந்திய அணி 30.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது. போட்டி முடிவில் ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களிலும், கே.எல். ராகுல் 19 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    Next Story
    ×