search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சரிவிலிருந்து மீட்ட ரிஷப் பண்ட், ஜடேஜா ஜோடி - முதல் நாள் முடிவில் இந்தியா 338/7
    X

    222 ரன் சேர்த்த ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா

    சரிவிலிருந்து மீட்ட ரிஷப் பண்ட், ஜடேஜா ஜோடி - முதல் நாள் முடிவில் இந்தியா 338/7

    • இந்தியா 2 விக்கெட்டுக்கு 53 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.
    • ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    பர்மிங்காம்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா, ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விகாரி 20 ரன்னிலும், விராட் கோலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். தேநீர் இடைவேளையில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி சதமடித்தார். ஜடேஜா அரை சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 320 ஆக இருந்தபோது ரிஷப் பண்ட் 146 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னில் அவுட்டானார்.

    முதல் நாள் முடிவில், இந்திய அணி 73 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. ஜடேஜா 83 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×