search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சமூகத்தில் குழந்தைகள்கூட போராடுவது அவமானகரமானது - சூர்யா கண்டனம்
    X

    சமூகத்தில் குழந்தைகள்கூட போராடுவது அவமானகரமானது - சூர்யா கண்டனம்

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

    இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு அரசியல் கட்சிகள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஜி.வி.பிரகாஷ், விஷால் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் சூர்யாவும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக சூர்யா கூறியிருப்பதாவது, 

    `தூத்துகுடியில் நடந்த மக்கள் போராட்டம் கொடூரமான உயிர் பலிகளைச் சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டு வருகிற இழப்புகளும் தொடர்ந்து ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. 



    போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம், போராடுவதே வன்முறை ஆகிவிடாது. பாதிப்புகள் அதிகரிக்கும்போது போராடுவது ஒன்றுதான் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்களே மக்களுடைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும்.

    பல்வேறு அத்துமீறல்களை செய்து, மக்களின் உயிருக்கும், தூத்துக்குடி பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலையை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி என்ன காரணத்துக்காகச் செயல்பட அனுமதிக்கிறார்கள்?

    சின்ன குழந்தைகள்கூட ‘ஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு வேண்டாம்’ என்று அறிவிப்புப் பலகை ஏந்தி, களத்தில் நின்றனர். ஒரு சமூகத்தில் குழந்தைகள்கூட போராட வேண்டியிருக்கிற சூழல் அவமானகரமானது. 



    நான் படப்பிடிப்பிற்குப் பல முறை தூத்துக்குடி சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களிடம் பேசியிருக்கிறேன். சாதரண மக்களிடம் பேசும்போதுகூட, ‘ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்று சொல்வார்கள். காரணங்கள் இல்லாமல் இல்லை. பாதிப்புகள் அப்படி!

    2012-ல் மட்டும் 2,552 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின், புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றிருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிய முடிந்த தகவல் இது. தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்திருக்கின்றன. நச்சு கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் பல்வேறு விதமான நோய்களால் மக்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உச்ச நீதிமன்றம் வரை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

    அரசு என்ன சொல்கிறது? ‘‘வேலைவாய்ப்பு தருகிறோம்” என்கிறது. ‘‘எங்களுக்கு உங்கள் வேலை வேண்டாம். உயிரும் ஆரோக்கியமான வாழ்க்கையும்தான் முக்கியம்” என்று மக்கள் சொல்லும்போது, “உங்கள் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்” என்ற அரசின் பதில் உள்நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது. அப்படியென்றால், யாருடைய வாழ்வாதாரத்தை அடகு வைத்து, யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்? 



    ஒரு பிரச்னையை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது, மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தின் துணைகொண்டும், அதிகாரத்தின் வாள் கொண்டும் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது. ஆரோக்கியமான உடல் ஒன்றுதான் எளிய மக்களின் ஆதாரம். அதை வைத்துதான் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். இன்று வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கொண்டுவரப்படும் திட்டங்கள் பலவும் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, எளிய மக்களின் உடலாதாரத்தைக் குலைக்கின்றன.

    வயல்களை அழித்து, மலைகளை உடைத்து, வனத்தை நாசப்படுத்தி, ஆறுகளைச் சூறையாடி கொண்டுவரப்படும் எந்தப் பொருளாதார லாபமும் நிச்சயம் மக்களுக்கானவை அல்ல. அது வேறு யாருக்கானதோ என்பது நிதர்சனம். ‘இதை மக்களின் நலனுக்காகச் செய்கிறோம்’ என்பது சாத்தான் ஓதும் வேதம். இனி இழப்புகள் மக்களுக்கானதாக இருக்கக் கூடாது. இனியும் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது! என்று சூர்யா தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest #Suriya
    Next Story
    ×