search icon
என் மலர்tooltip icon

    தரவரிசை

    சாமி இயக்கத்தில் மஹீன், பேபி திவ்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் அக்கா குருவி படத்தின் விமர்சனம்.
    சிறுவன்-சிறுமியாக இருக்கும் அண்ணன்-தங்கை. அவர்களின் ஏழை தந்தை, நோயாளி தாய், ஒரு இளம் காதல் ஜோடி... இவர்கள்தான் படத்தின் கதாபாத்திரங்கள். இந்த ஆறு பேர்களை வைத்துக்கொண்டு உணர்வுப்பூர்வமாக கதை சொல்லியிருக்கிறார், இயக்குனர் சாமி. 

    ஒரு ‘ஷூ’வில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. சிறுமி சாராவின் ‘ஷூ’ திடீரென்று காணாமல் போகிறது. அது, கான்வென்ட் என்பதால் ‘ஷூ’ இல்லாமல் பள்ளிக்குள் அனுமதிக்கமாட்டார்கள். சாராவின் பள்ளி நேரம் முடிந்ததும் தேவா ஓடிப்போய் தங்கையிடம் இருந்து ‘ஷூ’வை வாங்கி அணிந்து கொண்டு தனது பள்ளிக்கு ஓடுகிறான். இப்படி அண்ணனும், தங்கையும் ஒரே ‘ஷூ’வை மாற்றி மாற்றி அணிந்துகொண்டு சமாளிக்கிறார்கள்.

    விமர்சனம்

    சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் காசு சேர்த்து வரும் தேவா, தங்கைக்கு ‘ஷூ’ வாங்கி கொடுப்பதற்காக அந்த உண்டியலை உடைக்கிறான். அவன் தங்கைக்கு புது ‘ஷூ’ வாங்கிக் கொடுத்தானா?, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    தேவாவாக மாஸ்டர் மஹீன், தங்கையாக பேபி திவ்யா நடித்து இருக்கிறார்கள் என்று சொல்வதைவிட, பாசமுள்ள அண்ணன்-தங்கையாகவே கவனம் ஈர்க்கிறார்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இருவரும் நடித்தது போல் தெரியவில்லை. இவர்களின் தந்தையாக வி.எஸ்.குமாருக்கு இது முதல் படம் என்பது திரையில் தெரிகிறது.

    இந்த மூன்று பேர்களின் கதையை மட்டும் சொன்னால், ‘ஒரு அப்பாவும், இரண்டு குழந்தைகளும்’ என்று படம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடங்கிப்போயிருக்கும்.

    விமர்சனம்

    மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஈரானியப் படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறு ஆக்கமாக இயக்குனர் சாமி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சாமியிடம் இருந்து இப்படி ஒரு படமா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். தேவாவும், அவனுடைய தந்தையும் நகரத்துக்கு வந்து தோட்ட வேலை தேடுவது, தேவையில்லாத காட்சி.

    பின்னணி இசை மூலம் பார்வையாளர்களை படத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார், இசையமைப்பாளர் இளையராஜா. கொடைக்கானல் அழகை மாறாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் உத்பல் வி.நாயனார். 

    மொத்தத்தில் ‘அக்கா குருவி’ கோடை கால விருந்து.
    பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, மது ஷாலினி நடிப்பில் வெளியாகி இருக்கும் விசித்திரன் படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஆர்கே சுரேஷ் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து வீஆர்எஸ் பெற்றவர். பெரிய அதிகாரிகள் கூட கண்டுபிடிக்க முடியாத கொலைக் குற்றங்களை மிகவும் சாதாரணமாக கண்டுபிடிக்க கூடியவர். இவர் தற்போது மதுபோதைக்கு அடிமையாக இருந்து வருகிறார். 

    இந்நிலையில் இவரை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி பூர்ணா, சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இது விபத்தல்ல கொலை என்று ஆர்கே சுரேஷுக்கு என்று தெரியவருகிறது. மனைவி மரணத்திற்கான பின்னணியை ஆர்கே சுரேஷ் தேட ஆரம்பிக்கிறார்.

    இறுதியில் மனைவி பூர்ணாவை கொலை செய்தது யார் என்பதை ஆர்கே சுரேஷ் கண்டுபிடித்தாரா? இல்லையா? பூர்ணாவை கொலை செய்ததற்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்கே சுரேஷ், கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படம் அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவிற்கு உள்ளது. சின்ன அசைவுகளில் கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இவரது மனைவியாக நடித்திருக்கும் பூர்ணா, கணவன் மீது பாசம் வைத்திருக்கும் மனைவியாக நடித்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் மதுஷாலினி. மற்ற கதாபாத்திரங்களான இளவரசு, மாரிமுத்து, ஜார்ஜ், பகவதி பெருமாள் ஆகியோரின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மலையாளத்தில் ஜோசப் என்ற படத்தை இயக்கிய பத்மகுமார், அதே கதையை தமிழில் விசித்திரன் என்ற பெயரில் இப்படத்தை இயக்கி இருக்கிறார். மருத்துவத்தை சுற்றி நடக்கும் தொழில்களால் மனித உயிர்கள் பாதிக்கப்படுவதை திரைக்கதை மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். உடலுறுப்புத் திருட்டை எமோஷனல் திரில்லர் பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். 

    விமர்சனம்

    ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். படத்திற்கு தேவையான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். வெற்றி வேல் மாஹேந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘விசித்திரன்’ வெற்றியாளன்.
    சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஹாஸ்டல் படத்தின் விமர்சனம்.
    நாயகன் அசோக் செல்வன், சதீஷ் உள்ளிட்ட நண்பர்கள் நாசர் நடத்தி வரும் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், பண பிரச்சனையில் சிக்கும் அசோக் செல்வனுக்கு நாயகி பிரியா பவானி சங்கர் உதவ முன் வருகிறார். இந்த உதவிக்கு பலனாக பாய்ஸ் ஹாஸ்டலுக்கு தன்னை அழைத்து செல்லும்படி கேட்கிறார்.

    அசோக் செல்வனும் பணத்திற்கு ஆசைப்பட்டு, பிரியா பவானி சங்கரை யாருக்கும் தெரியாமல் அழைத்து செல்கிறார். ஹாஸ்டலுக்குள் சென்ற பிரியா பவானி சங்கர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொள்கிறார்.

    விமர்சனம்

    இறுதியில் பாய்ஸ் ஹாஸ்டலில் இருந்து பிரியா பவானி சங்கர் வெளியேறினாரா? பிரியா பவானி சங்கர் ஹாஸ்டலுக்குள் செல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், எப்பவும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவார். ஆனால், இம்முறை அவரது தேர்வு தவறாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அவரது நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். சதீஷ், நாசர், முனிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறது.

    விமர்சனம்

    காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன். ஆனால், படத்தில் காமெடி பெரியதாக எடுபடவில்லை. பல காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், சிரிக்கதான் முடியவில்லை. திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது. அனுபவ நடிகர்களை வைத்து வேலை வாங்காமல் விட்டிருக்கிறார் இயக்குனர்.

    போபோ சாஷி இசையில் பாடல்கள் அதிகம் கவனம் பெறவில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் 'ஹாஸ்டல்' சுவாரஸ்யம் குறைவு.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் விமர்சனம்.
    நாயகன் விஜய் சேதுபதி பிறந்ததிலிருந்து துரதிஷ்டசாலியாக இருக்கிறார். இவர் வாழ்க்கையில் எல்லாம் நேருக்கு மாறாக நடக்கிறது. இவர் பகலில் கார் டிரைவராகவும் இரவில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார்.

    டிரைவராக வேலை செய்யும்போது நயன்தாராவையும், பவுன்சர் வேலை செய்யும்போது சமந்தாவையும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது. இறுதியில் விஜய் சேதுபதி காதல் பிரச்சனையை எப்படி சமாளித்தார்? நயன்தாரா, சமந்தா இருவரில் யாருடன் காதலில் ஒன்று சேர்ந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகன் விஜய் சேதுபதி, ராம்போ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகள் மற்றும் முக பாவனைகளில் கூட அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குடும்ப பெண்ணாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நயன்தாரா. மாடர்ன் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார் சமந்தா. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா காம்பினேஷன் சீன்களில் மூன்று பேருமே போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். மாறன், கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.

    விமர்சனம்

    இரண்டு காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். இரண்டு காதல் வைத்து பார்ப்பவர்களை நெருடல் இல்லாமல் ரசிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். காமெடி காட்சிகள் ஆங்காங்கே கைகொடுத்து இருக்கிறது.

    விமர்சனம்

    படத்திற்கு பெரிய பலம் அனிருத்தின் இசை. பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சூப்பர்.  ஸ்ரீதரின் ஒளிப்பதிவோடு பார்க்கும்போது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

    மொத்தத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' கலகலப்பான காதல்.
    சரோவ் சண்முகம் இயக்கத்தில் விஜயகுமார், அருண் விஜய், அர்னவ் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஓ மை டாக்’ படத்தின் விமர்சனம்.
    நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் அருண் விஜய், மனைவி மகிமா நம்பியார், தந்தை விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் ஊட்டியில் வாழ்ந்து வருகிறார். அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் மிகவும் சேட்டை செய்பவராக இருக்கிறார். இந்நிலையில், டாக் ஷோவில் பல வெற்றிகளை பெற்றிருக்கும் வினய், கண் தெரியாமல் இருக்கும் குட்டி நாயை தன் ஆட்கள் மூலம் கொல்ல சொல்கிறார்.

    ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குட்டி நாய் அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அந்த குட்டி நாய்க்கு கண் ஆப்ரேஷன் செய்து வளர்க்க ஆரம்பிக்கிறார் அர்னவ். ஒரு கட்டத்தில் டாக் ஷோ நடக்க இருக்கிறது. இந்த ஷோவில் அர்னவ்வின் நாய் பல சுற்றுகளில் முன்னேறுவதால் அந்த நாயை போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தடுக்க வினய் முயற்சி செய்கிறார்.

    ஓ மை டாக் விமர்சனம்

    இறுதியில் அர்னவ்வின் நாய் டாக் ஷோவில் வெற்றி பெற்றதா?, வினய்யின் முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய், தந்தை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். விஜயகுமார் மற்றும் அர்னவ்வுடன் கோபம் மற்றும் பாசம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். அர்னவ் விஜய்க்கு முதல் படம் என்பதால் பல இடங்களில் ரசிக்க வைத்தாலும், ஒருசில இடங்களில் தடுமாற்றம் தெரிகிறது. மகிமா நம்பியார் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜயகுமார்.

    ஸ்டைலிஷ் வில்லனாக வரும் வினய்யின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை. அர்னவ்வின் நண்பர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். 

    ஓ மை டாக் விமர்சனம்

    கண் தெரியாத நாய் போட்டிகளில் கலந்து கொண்டு எப்படி வெற்றி பெறுகிறது என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சரோவ் சண்முகம். ஒரு சில காட்சிகள் யதார்த்த மீறல்களாக இருந்தாலும், பெரியதாக தெரியவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி திரைக்கதை உருவாக்கி இருக்கிறார். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் நாயிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்கள்.

    நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். அதேபோல் கோபிநாத்தின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு ஏற்ப கலர் புல்லாக அமைந்துள்ளது. 

    மொத்தத்தில் ‘ஓ மை டாக்’ ரசிக்கலாம்.
    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தின் விமர்சனம்.
    கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது. 

    கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யஷ். கே.ஜி.எஃப்-பை பிடிக்க யஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அதே சமயம் இறந்துவிட்டதாக கருதப்பட்ட சஞ்சய் தத், கே.ஜி.எஃப்.யை கைப்பற்ற தன் படைகளுடன் வருகிறார்.

    இறுதியில் எதிரிகளை எதிர்த்து யஷ், கே.ஜி.எஃப்யை தக்க வைத்துக் கொண்டாரா? சஞ்சய் தத்தின் நிலைமை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்து இருக்கும் யஷ் தனி ஒருவனாக படத்தை தன் தோள் மேல் சுமந்து செல்கிறார். மான்ஸ்டராக, மாஸ் ஹீரோவாக மனதில் நிற்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார். 

    சஞ்சய் தத் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய கெட்டப்பும் பார்வையும் மிரட்டல். அரசியல் தலைவராகவும் ரவினா டாண்டன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    விமர்சனம்

    முதல் பாகத்தை விட 2 மடங்கு மாஸாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரஷாந்த் நீல். விறுவிறுப்பான திரைக்கதை, காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆட்பறிக்கும் சண்டைக்காட்சிகள், என படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்து ரசிகர்கள் ரசிக்கும் உருவாக்கி இருக்கிறார்கள்.

    படத்தின் மிகப்பெரிய பலமான சண்டைக்காட்சிகளில் அன்பறிவ் மாஸ் காட்டியிருக்கின்றனர். ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். புவன் கவுடாவின் ஒளிப்பதிவு அபாரம். கர்நாடகா, மும்பை, கே.ஜி.எஃப் சுரங்கம் என சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்

    மொத்தத்தில் 'கே.ஜி.எஃப் 2' மாஸ்.
    நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் பீஸ்ட் படத்தின் விமர்சனம்.
    ராணுவத்தில் ரா பிரிவில் பணியாற்றி வரும் விஜய், தீவிரவாதி உமர் பரூக் என்பவரை பிடிக்க முயற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை இறந்து விடுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விஜய், ராணுவ வேலையை விட்டு, விடிவி கணேஷ் நடத்தி வரும் செக்யூரிட்டி அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

    அப்போது விஜய் ஒரு மாலுக்கு செல்லும் போது அங்கு தீவிரவாதிகள் பொதுமக்களை பணைய கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். மேலும் உமர் பரூக்கை விடுவிக்க கோரிக்கை வைக்கிறார்கள்.

    விமர்சனம்

    இறுதியில் விஜய், மாலுக்குள் இருக்கும் தீவிரவாதிகளை அழித்து பொதுமக்களை எப்படி காப்பாற்றினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் வீரராகவன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் விஜய். சண்டைக்காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார். குறிப்பாக டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் விஜய். நாயகியாக வரும் பூஜா ஹெக்டே, கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். அதிகாரியாக வரும் செல்வராகவன் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    விமர்சனம்

    படத்திற்கு பெரிய பலம் விடிவி கணேஷ். பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்து இருக்கிறார். யோகி பாபு ஒரு சில இடங்களில் வந்து சென்றிருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஷின் நடிப்பு ஓவர் ஆக்டிங்.

    பழைய கதையை தூசி தட்டி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் நெல்சன். வழக்கமான திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்து கொடுத்து இருக்கிறார். நிறைய லேக் லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

    அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

    மொத்தத்தில் 'பீஸ்ட்' கலகலப்பு.
    தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால் நடிப்பில் வெளியாகி இருக்கும் டாணாக்காரன் படத்தின் விமர்சனம்.
    நாயகன் விக்ரம் பிரபுவின் தந்தை லிவிங்ஸ்டன் போலீசாரால் பாதிக்கப்படுகிறார். இதனால் தனது மகனான விக்ரம் பிரபுவிடம் நீ போலீசாக வேண்டும் என்று கூறி விட்டு இறந்து விடுகிறார். தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக போலீஸ் வேலைக்கு செல்கிறார்.

    போலீஸ் பயிற்சியில் விக்ரம் பிரபுவுக்கும் பயிற்சியாளர் லாலுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் விக்ரம் பிரபு போலீஸ் ஆக கூடாது என்று லால் தொந்தரவு கொடுக்கிறார்.

    விமர்சனம்

    லாலின் தொந்தரவுகளை தாண்டி விக்ரம் பிரபு போலீஸ் ஆனாரா? தந்தை லிவிங்ஸ்டன் ஆசையை விக்ரம் பிரபு நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விக்ரம் பிரபு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்திற்காக திறமையாக உழைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது.

    விமர்சனம்

    ஈஸ்வரமூர்த்தி என்ற காவல்துறை பயிற்சி அதிகாரியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் லால். பல இடங்களில் சாதாரணமாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கு பிறகு எம்.எஸ்.பாஸ்கர் தனது அனுபவ நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். நாயகியாக வரும் அஞ்சலி நாயருக்கு பெரியதாக வேலையில்லை. கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். லிவிங்ஸ்டன், லிங்கேஷ், பவல் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள். 

    காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் தமிழ். முதல் பாதி முழுக்க பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்களையும், இரண்டாம் பாதி முழுக்க ஹீரோ, வில்லன் பாணியில் உருவாக்கி இருக்கிறார். கதாபாத்திரங்கள் இடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் வரும் அனிமேஷன் காட்சிகள் மற்றும் அதை சொன்ன விதம் அருமை. விக்ரம் பிரபுவின் பிளாஷ்பேக் காட்சி அழுத்தம் இல்லை.

    விமர்சனம்

    படம் முழுக்க மைதானம் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அதை சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். ஜிப்ரான் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லையென்றாலும் பின்னணி இசையின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். 

    மொத்தத்தில் 'டாணாக்காரன்' சிறந்தவன்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் நடிப்பில் வெளியாகி இருக்கும் மன்மத லீலை படத்தின் விமர்சனம்.
    நாயகன் அசோக் செல்வனின் வாழ்க்கையில் 2010ல் நடந்த ஒரு சம்பவம் மற்றும் பத்து ஆண்டுகள் கழித்து 2020ல் நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள். 

    2010ல் ஆர்குட் மூலம் தனக்கு அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுடன் பழகுகிறார் அசோக் செல்வன். வீடியோ மூலம் பேசி வரும் அசோக் செல்வன், ஒரு நாள் நேரில் சந்திக்க ஆசைப்படுகிறார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சம்யுக்தாவை சந்திக்கிறார் அசோக்செல்வன். அப்போது இருவரும் மது போதையில் தவறு செய்துவிடுகிறார்கள். விடியும் நேரத்தில் வீட்டிற்கு சம்யுக்தாவின் அப்பா வந்துவிடுகிறார். 

    விமர்சனம்

    அடுத்து, 2020ல் மனைவி ஸ்மிருதி வெங்கட் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் அசோக் செல்வன். ஒரு நாள் ஸ்மிருதி வெங்கட் குழந்தையுடன் வெளியில் சென்றவுடன், தற்செயலாக வீட்டிற்கு வரும் ரியா சுமனுடன் இணைந்து தவறு செய்து விடுகிறார். மறுநாள் காலை ஸ்மிருதி வெங்கட் வீட்டிற்கு வந்துவிடுகிறார்.

    2010ல் சம்யுக்தா ஹெக்டேவின் வீட்டில் இருந்து அசோக் செல்வன் எப்படி தப்பித்தார்? 2020ல் தன் வீட்டில் இருந்து ரியா சுமனை எப்படி வெளியேற்றினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், காதல், பாசம், ரொமான்ஸ், பரிதவிப்பு, என நடிப்பில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். முதல் பாதியில் ரொமான்ஸ், இரண்டாம் பாதியில் காமெடி, நக்கல், ஆக்‌ஷன் என்று ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக சம்யுக்தா ஹெக்டே வீட்டில் சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சியில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

    விமர்சனம்

    நாயகியாக சம்யுக்தா ஹெக்டே மற்றும் ரியா சுமன் இருவரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். அழகாக வந்து அளவான நடிப்பை ஸ்மிருதி வெங்கட் கொடுத்திருக்கிறார். 

    இயக்குனர் வெங்கட் பிரபு, இந்த படத்திற்கு மன்மத லீலை என்று பெயர் வைத்திருந்தாலும், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், அதிக கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் கதையை நகர்த்தி இருப்பது சிறப்பு. இரு வேறு காலகட்டங்களுக்கு பயணிக்கும் கதையை புரியும்படி திரைக்கதை அமைத்த இயக்குனர் வெங்கட் பிரபுக்கு பாராட்டுகள். இரண்டாம் பாதியில் இருந்த சுவாரஸ்யம் முதல் பாதியிலும் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். 

    பிரேம்ஜியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதுபோல், தமிழ் அழகனின் ஒளிப்பதிவும் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. இரண்டு கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் ஒளிப்பதிவு செய்து கவனிக்க வைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘மன்மத லீலை’ ரசிக்கலாம்.
    ஜே.கே.விக்கி இயக்கத்தில் மிர்ச்சி ரமணா, ஹம்சினி நடிப்பில் வெளியாகி இருக்கும் பூ சாண்டி வரான் படத்தின் விமர்சனம்.
    ஆவிகள் பற்றியும், அதைச்சார்ந்த உண்மை சம்பவங்கள் பற்றியும் ஆராய்ந்து கட்டுரை எழுதி வருகிறார் நாயகன் மிர்ச்சி ரமணா. இவர் மலேசியாவில் நடந்த அமானுஷ்ய சம்பவங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்காக மலேசியா செல்கிறார். அங்கு மூன்று நண்பர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டில் நடந்த அமானுஷ்ய சம்பவம் பற்றி ரமணா தெரிந்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

    நண்பர்களான தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பொழுதுபோக்கிற்காக இரவில் ஆவிகளிடம் பேசும் முயற்சியில் மூன்று பேரும் ஈடுபடுகிறார்கள். அப்போது மல்லிகா என்ற ஆவி அவர்களிடம் பேச தொடங்குகிறது. தான் எப்படி இறந்தேன் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளும் மல்லிகா ஆவி, திடீரென்று மூவரில் ஒருவரை பயமுறுத்துகிறது. 

    இதனால், அந்த ஆவியிடம் பேசுவதை மூன்று பேரும் நிறுத்துவிட, திடீரென்று மூவரில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இந்த கதையை கேட்கும் ரமணா, மூன்று பேரில் ஒருவர் மட்டும் கொலை செய்யப்பட்ட காரணத்தை தேடி செல்கிறார். 

    இறுதியில் மிர்ச்சி ரமணா, கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.


    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் மிர்ச்சி ரமணா, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை கேட்கும் போது, அதற்கு கொடுக்கும் ரியாக்‌ஷன் மற்றும் மல்லிகா ஆவி பற்றிய ரகசியத்தை தெரிந்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு அவரே பிரச்சனையில் சிக்கிக்கொள்வது என படம் முழுவதும் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

    மலேசிய நடிகர்களான தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் மூன்று பேரும் படத்தின் முதல் பாதி திரைக்கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், சிறு சிறு மோதல்கள், ஆவியுடனான அனுபவம் என்று அனைத்துக்காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். மல்லிகா வேடத்தில் நடித்திருக்கும் ஹம்சினி பெருமாள், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். 

    ஒளிப்பதிவாளர் அசல்இசம் பின் முகமது அலி சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மற்றும் திகில் படத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசையில் மிரட்டியிருக்கும் இசையமைப்பாளர் டஸ்டின் ரிதுவன் ஷா. 

    வித்தியாசமான முயற்சியில் ஒரு திகில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே.கே.விக்கி. வரலாற்று சம்பவத்தை பின்னணியாக கொண்ட ஒரு திகில் கதையை தற்போதைய காலக்கட்டத்தோடு பயணிக்க வைத்து, ரசிக்க வைத்திருக்கிறார். பல திருப்பங்களோடு திரைக்கதையை நகர்த்தி இருப்பது படத்திற்கு பலம். 

    மொத்தத்தில் ‘பூ சாண்டி வரான்’ தைரியசாலி. 
    ராம்பாலா இயக்கத்தில் சிவா, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இடியட்’ படத்தின் விமர்சனம்.
    ராஜா காலத்தில் அவர்களை ஏமாற்றி சொத்துக்களை தன்வசம் படுத்திக்கொள்பவர்கள் ஸ்மிதாவின் (நிக்கி கல்ராணி) முன்னோர்கள். கதாநாயகியாக வரும் ஸ்மிதா மனநல மருத்துவராக இருக்கிறார். மறுபுறம் வீரபாண்டியன் என்ற கிராமத்தில் ஊர் தலைவராக இருக்கும் ராசு (ஆனந்தராஜ்) அவருடைய மகன் சின்னராசு (சிவா) மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

    ஒரு சிறிய விபத்தில் சின்னராசு மனநலம் பாதிக்கப்பட்டவராக மாறிவிடுகிறார். அச்சமயத்தில் அவருக்கு சிகிச்சை கொடுக்க ஸ்மிதா பணிபுரியும் மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அப்பொழுது சின்னராசுவிற்கு ஸ்மிதா மீது காதல் ஏற்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் தன் காதலனை உயிர்ப்பிக்க ஸ்மிதாவின் உயிரை எடுப்பதற்காக நீலகண்டி (அக்ஷரா கவுடா) என்ற சூனியக்காரி வலம் வருகிறாள். 

    விமர்சனம்

    அதேபோன்று 4 அடியாட்களுடன் வில்லன் ரவிமரியா, ஸ்மிதாவை கடத்திச்சென்று பணம் பறிக்க முயற்சி செய்கிறார். இவர்கள் அனைவரும் ஒரு பழைய பங்களாவில் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கிருந்து எப்படி தப்பித்து செல்கிறார்கள்? நீலகண்டி தன் நோக்கத்தை அடைய ஸ்மிதாவின் உயிரை எடுத்தாளா? காதலியை சின்னராசு கரம் பிடித்தாரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

    வழக்கம் போல் பேய் படங்களுக்கு உரித்தான பழைய பங்களாக்களில் நடக்கும் கதை என்பதால் பெரிதாக ஸ்வாராசியம் இல்லை. தில்லுக்கு துட்டு படங்களில் இடம்பெற்ற காமெடிகளை எதிர்ப்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே. இயக்குனர் ராம்பாலா முந்தைய படைப்புகளை போன்ற நகைச்சுவை கொடுக்காதது படத்தின் சரிவு. ஆரம்பத்திலிருந்தே படம் அதன் நிலைப்பாட்டில் இருந்து விலகி எங்கெங்கோ செல்கிறது. கதையிலும் திரைக்கதையிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதே மக்களின் கருத்து.

    விமர்சனம்

    கதாநாயகனாக வரும் சிவா அவருடைய எதார்த்த காமெடி கலந்த இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இருந்தும் படத்தின் காமெடிகள் சாதாரணமாக இருந்ததால் படத்தில் பயணிக்க சிரமமாக இருந்தது. கதாநாயகிகளாக வரும் நிக்கி கல்ராணி, அக்ஷரா கவுடா இருவரும் அவர்களுடைய பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். ஆனந்த்ராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து, ரவிமரியா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றுள்ளனர்.

    ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசர்ஜி தன் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். காட்சியமைப்பின் மூலம் படத்தின் விறுவிறுப்பை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார். விக்ரம் செல்வா இசை மற்றும் பிண்ணனி இசை அதிகம் ஈர்க்கவில்லை.

    மொத்தத்தில் ‘இடியட்’ ஏமாற்றம்.
    மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, டி.ஜி.குணாநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் செல்ஃபி படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஜி.வி.பிரகாஷ், தந்தை வாகை சந்திரசேகர் கட்டாயத்தின் பெயரில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து விருப்பமில்லாமல் இன்ஜினீயரிங் படிக்கிறார். படிக்கும் போதே பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரியில் மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலை பார்க்கிறார். முதலில் சிறியதாக சம்பாதிக்கும் ஜி.வி.பிரகாஷ், பின்னர் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். 

    இறுதியில் ஜி.வி.பிரகாஷ் சிக்கலில் இருந்து விடுபட்டாரா? இல்லையா? சிக்கலை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரி மாணவனாக கனல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். நட்பு, அப்பா பாசம், காதல், சண்டைக்காட்சி, என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக அப்பா வாகை சந்திரசேகரிடம் கோபித்துக் கொள்வது.. பின்னர் அவரைப் பற்றி தெரிந்தவுடன் வருந்துவது என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். இறந்து போன நண்பனின் அம்மாவிடம் கலங்கிப்போய் நிற்கும்போதும், கோபத்தைக் காட்டும் போதும் கைதட்டல் பெற்றிருக்கிறார்.

    கல்லூரியில் இடம் வாங்கித்தரும் தரகராக ரவி வர்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கவுதம் மேனன். அசத்தலான வில்லன் வேடத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகி வர்ஷா பொல்லம்மா ஜி.வி.பிரகாஷுக்கு உறுதுணையாக நடித்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் டி.ஜி.குணாநிதி, நடிப்பில் கண்கலங்க வைத்திருக்கிறார். இவருக்கு முதல் படமே சிறப்பான அறிமுகம். 

    விமர்சனம்

    கல்லூரி அதிபராக ஈஸ்வரமூர்த்தி கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன் நல்ல தேர்வு. தந்தையாக வரும் வாகை சந்திரசேகர் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். குணாநிதியின் தாயாக நடித்திருக்கும் ஸ்ரீஜா யதார்த்த நடிப்பை கொடுத்து மனதில் பதிந்திருக்கிறார். தங்கதுரை, சாம் பால் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    தனியார் கல்லூரிகளில் சீட் பெறுவதற்குத் தரகர்கள் மூலம் நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது செல்ஃபி படம். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகளை தைரியமாக சொல்லியிருக்கும் மதி மாறனுக்கு பாராட்டுகள். தெளிவான திரைக்கதை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகள் என்று கட்டிப்போடுகிறார் இயக்குனர் மதி. பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ்குமார். விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு காட்சிகளைப் பதிய வைக்கிறது.

    விமர்சனம்

    ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிய அளவு எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு கைகொடுத்திருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டலாக உள்ளது. தெளிவான திரைக்கதை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகள் என்று கட்டிப்போடுகிறார் இயக்குனர் மதி. போலியான பெற்றோர்கள் காட்சி நல்ல திருப்பமாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் மதிமாறன்.

    ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். அதுபோல் போஸ்மேன் என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் நேர்த்தியான ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘செல்ஃபி’ கல்வி மாஃபியா.
    ×