search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாஸ்டல்"

    விடுதிக்குச் சென்றதும் நம் அறை நண்பராக யாரைப் பெறுகிறோம் என்பது முக்கியம். நம்மினும் அறிவாளியாக, உழைப்பவராக, உன்னதப் பழக்கங்கள் உள்ளவராக அமைந்தால் அது நற்பேறு.
    வீட்டிலிருந்து விடுதிக்குப் புலம் பெயர்ந்த இளம் நண்பர்களே,

    எனக்கு சோர்வு ஏற்படும்போதெல்லாம் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து அவர்கள் உற்சாகத்தில் உரசி புதுப்பித்துக்கொள்கிறேன். இந்தப் பதின்மப் பருவம் ஆற்றல்களின் அணிவகுப்பு, ஊக்கத்தின் ஊற்று, நம்பிக்கையின் நாற்றங்கால், வசந்தங்களின் வரவேற்புக்கூடம்.

    நான் கண் பார்க்க மலர்ந்திருக்கும் அத்தனை மொட்டுக்களும் மலராக பூத்துக் குலுங்க வேண்டும், அவற்றின் நறுமணம் நான்கு திசைகளிலும் வீசி நாசிகளை மகிழ்விக்க வேண்டும் என எண்ணுபவன். இந்தப் புல்லாங்குழல்கள் அனைத்தும் இனிய இதழ்களில் இசையை அரங்கேற்ற வேண்டும் என்று ஆசைப்படுபவன். இந்த அத்தனை திறமைகளும் சிந்தாமல் சிதறாமல் சிகரத்தை அடைய வேண்டும் என்று எதிர்பார்த்து ஏங்குபவன்.

    இதனால் ஏற்படும் ஏக்கத்தின் காரணமாகவும், எல்லை கடந்த அன்பின் காரணமாகவும் என் எழுதுகோலிலிருந்து உனக்கான கடிதங்கள் கசிந்து கொண்டேயிருக்கின்றன. நான் ஓடிச்சென்று உயர்ந்த பரிசை அடைந்த எக்காளத்தில் எழுபவை அல்ல அவை. தாவிக்குதித்துச் சென்று தடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட காயங்களின் காரணமாக உண்டான அனுபவத்தால், உனக்கு அப்படி அடிபடக் கூடாது என்கிற அனுசரணையே அவற்றை எழுதத் தூண்டுகின்றன. என் தழும்புகள், நீ பெறும் தங்கப் பதக்கங்களுக்கு அச்சாரமாகட்டும் என்ற அக்கறையே இந்த மடலுக்குக் காரணம்.

    வீடு என்பது கூடு என்பது புரியாமல் கூண்டு என நினைத்து விடுதிக்குச் சென்றதும் வானமே கிடைத்ததைப்போல மயக்கம் ஏற்படுவது இயல்பு. எங்களுக்கும் அது தொடக்கத்தில் ஏற்பட்டது. விழிப்புணர்வு இருந்திருந்தால் வானம் என்பது கண்களுக்குத் தெரியாத கணக்கற்ற கூடுகளின் மஞ்சம் என்கின்ற புரிதல் நிகழ்ந்திருக்கும்.

    அது புரியாத காரணத்தால் கைகளில் கிடைத்த சுதந்திரத்தை கால்களின் அடியில் போட்டு மிதித்த அனுபவம் எங்களுக்குண்டு. இழந்தவற்றைப் புரிந்துகொள்வதற்குள் காலம் நம்மை கடந்து சென்று விடுகிறது. தொடக்கத்திலேயே எங்கள் தோள்மீது கை போட்டு தோழமையுடன் யாரேனும் எச்சரித்திருந்தால், அந்த விடுதி வாழ்க்கையும் சடுதியில் முடிந்து விடும் என்று தெரியாமல் வீணாக்கியிருக்க மாட்டோம்.

    விடுதி வாழ்க்கை அற்புதமான வாய்ப்பு. விடுதியில் தங்கும்போது சுயக்கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்கிறோம். கட்டுப்பாட்டுக்கும், கட்டுப்படுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. போக்குவரத்துக் காவலர் இருக்கிறார் என்பதால் சமிக்ஞையில் காத்திருப்பது கட்டுப்படுவது. இல்லாவிட்டாலும் பச்சை விளக்குக்காக நிதானிப்பது கட்டுப்பாடு. அனைத்துப் புறக் கட்டுப்படுதல்களும் மீறக் கூடியவை.

    நாமே நமக்கு அரணமைத்துக்கொள்ளும் அகக்கட்டுப்பாடே தூய்மையின் துலாபாரம். அதற்கு முதிர்ச்சி தேவை. அதை விடுதி வாழ்க்கை கற்றுத் தரும்.

    விடுதியில் இணைந்ததும் சிறகுகள் முளைத்ததைப்போல சிந்தனை ஏற்படுவது உண்டு. அந்தச் சிறகுகள் இமயத்தை அளக்க வலம் வருவதற்கா அல்லது இருட்டுக் குகைக்குள் அழுகிய எலும்புகளைப் பொறுக்கித் தின்பதற்குத் தேடிச் செல்வதற்கா என்கிற வரையறையே விடுதி வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

    விடுதிக்குச் சென்றதும் நம் அறை நண்பராக யாரைப் பெறுகிறோம் என்பது முக்கியம். நம்மினும் அறிவாளியாக, உழைப்பவராக, உன்னதப் பழக்கங்கள் உள்ளவராக அமைந்தால் அது நற்பேறு. மல்லிகைக்கருகில் வைக்கும் மண்ணுருண்டையும் மணப்பதைப்போல அத்தகைய நண்பரின் சமீபம் நம்மை மெருகேற்றி விடும். தூக்கம் கண்களைத் தழுவினாலும் அவர் படிப்பதைப் பார்த்து முகத்தைக் கழுவி விழிகளை அகல விரித்து புத்தகங்களுக்குள் புகுந்து கொள்வோம். அவர் வாசிக்கும் புத்தகங்கள், நம்மையும் பாடத்தைத் தாண்டி அறிவுலகத்தை விசாரிக்கத் தூண்டும்.

    அவர் அறையில் மாட்டி வைத்திருக்கும் உலக வரைபடம் நம்மையும் நாடுகளின் இருப்பிடத்தை நன்றாக அறிய வைக்கும். அவர் மேற்கொள்ளும் பொழுதாக்கம் நாமும் ஒன்றைக் கையகப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தைத் தோற்றுவிக்கும். நமக்குப் புரிந்த பாடத்தை அவருடன் கலந்துரையாடும்போது அது மேகமூட்டம் விலகிய வெண்ணிலவாய் வெளிச்சத்தை அளிக்கும்.

    நல்ல நண்பர்கள் அறையில் கிடைத்தால் அவர்கள் நம்மை செதுக்கும் சிற்பியாய் இருந்து விடுகிறார்கள். நம்மிடம் இருக்கும் மேன்மையைப் புரிய வைக்கிறார்கள். அவர்கள் சொல்லாமலேயே நம் பலவீனங்கள் நமக்குப் புலப்படத் தொடங்குகின்றன. நம் பலம் தெரிந்தால் பலவீனங்கள் தாமாகவே தென்படத் தொடங்கும். ஒத்துக்கொள்கிற பலவீனங்கள் நம்மிடமிருந்து ஒதுங்கிக்கொள்ள முயற்சி செய்கின்றன.



    விடுதிக்குச் சென்றதும் பெறுகிற மற்ற நண்பர்களும் முக்கியம். அவர்கள் நம் வாழ்க்கையை வடிவமைக்கிறார்கள். வகுப்புக்குச் செல்லாமல் ஊர் சுற்றுபவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தால் நாமே நமக்கு மேதாவியாகத் தெரியத் தொடங்குவோம். தீய பழக்கங்களுடன் திரிபவர்களை நண்பர்களாகப் பெற்றால் அது அழுகிய ஓர் உருளைக்கிழங்கு, கூடையிலிருக்கும் மற்றவற்றையும் அழுகச் செய்வதுபோல, நம் அத்தனை நற்குணங்களையும் தீய்த்து விடும்.

    வசதியான நண்பர்களைப் பெறுபவன் அவர்களோடு போட்டிபோடத் தொடங்குகிறான். அவன் கவுரவத்திற்காக கடன் வாங்குகிறான். நோட்டுப் புத்தகம் வாங்குவதாகச் சொல்லி நோட்டுகளை வீட்டிலிருந்து வாங்கி வருகிறான். அவன் நன்றாகப் படிக்கட்டும் என்று பெற்றோர் இன்னும் அதிகமாய் வியர்வையைச் சிந்துகிறார்கள்.

    நீ உன் வசதிக்கேற்ப நண்பர்களைத் தேர்ந்தெடு. வீண் செலவு செய்கிறவர்கள் உன்னை ஊதாரியாக்கி விடுவார்கள். நாளைய வருமானத்தில் செலவு செய்பவன் ஊதாரி. நாளை என்பது இல்லவே இல்லை. அது வருகிறபோது இன்றாகவே இருக்கிறது.

    விடுதி வாழ்க்கையில் நேரம் விரயமாக வாய்ப்பு அதிகம். அதையே நேர முதலீடாக மாற்றவும் முடியும். வைராக்கியம் என்கிற வைரம் இருந்து விட்டால் அந்த ஊசியால் எந்தத் தடைகளையும் அறுத்தெறிந்து விடலாம். வீட்டில் எழுப்புவதற்குப் பெற்றோர், குளிக்கச் சொல்ல ஒருவர், சாப்பிட வற்புறுத்தத் தாய், படிப்பைக் கண்காணிக்கத் தந்தை, அவ்வப்போது தேநீர் தயாரித்துக் கொடுக்கவும் உற்சாகமூட்டவும் இல்லத்தினர். இவையெல்லாம் விடுதியில் சாத்தியமில்லை. நம்மை நாமே கண்காணித்துக்கொள்ள வேண்டும். அத்தகைய நெறியை மேற்கொண்டால் உழைப்பது சுகமாகி விடும். படிப்பது தவமாகி விடும். பண்போடு இருப்பது பண்டிகையாகி விடும். நேர்மையுடன் இருப்பது உடலின் அம்சமாகி விடும்.

    விடுதி வாழ்க்கையில் சுத்தமும், சுகாதாரமும் மிகவும் முக்கியம். நாங்கள் விடுதியிலிருக்கும்போது சில மாணவர்கள் மாதமொரு முறை குளியலறைக்குச் சுற்றுப்பயணம் செய்வதுண்டு. இன்னும் சிலரையோ பொறுக்க முடியாமல் மற்ற மாணவர்கள் வலுக்கட்டாயமாக குளியலறையில் தள்ளுவதுண்டு. தினமும் இரு முறை குளிப்பது அவசியம். கழிவறைகளைப் பயன்படுத்தும்போது நன்றாகச் சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்து. கைகளை உண்பதற்கு முன்பும், காலைக்கடன்களைக் கழித்த பிறகும் தூய்மை துலங்க சுத்திகரிப்பது அவசியம்.

    சில மாணவர்கள் இளங்கலைப் படிப்பு முடிக்கும்வரை படுக்கை விரிப்பைத் துவைக்காமல் இருப்பதுண்டு. அது உடலில் பூஞ்சான் தொற்றுகளை ஏற்படுத்தி விடும். இன்னும் சிலரோ சோம்பலின் காரணமாக உள்ளாடைகளைக்கூட சலவைக்குப் போடுவதுண்டு. அது பொது இடத்தில் துவைக்கப்படுவதால் தொற்று நோய்கள் நம் உடலில் பற்று வைக்க வாய்ப்பு ஏற்படுத்தி விடும். அன்றைய உள்ளாடைகளை அன்றே கசக்கு. காலையிலும், இரவு படுக்கச் செல்லும் முன்பும் பற்களைத் துலக்கு.

    சிலர் தாமதமாக எழுவதால் காலையில் குளிக்காமல் வகுப்புகளுக்குச் செல்வதுண்டு. இரவு எப்போது படுப்பது என்பதற்குத் திட்டவட்டமாக நேரத்தை முடிவு செய்து பிசகாமல் பின்பற்று. ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். தூக்கத்தில் படித்தவை திடப்படுகின்றன. கனவுகளில் செய்முறைகள் வலுவாகின்றன. சரியாகத் தூங்காவிட்டால் நீ படித்தவை பாதியிலேயே போக்குவரத்து மறியல் செய்து விடும் என்பதைப் புரிந்துகொள்.

    பல விடுதி மாணவர்கள் இரவு வெகு நேரம் விழித்திருந்து கேளிக்கைகளிலும், அரட்டைகளிலும் நேர விரயம் செய்வார்கள். நேரம் கழித்து எழுந்து அவசர அவசரமாக வகுப்புக்கு விரைவார்கள். அந்தப் பரபரப்பில் பலர் காலைச் சிற்றுண்டியைத் தவற விடுவார்கள். காலை உணவு உடலுக்கு முக்கியம். நம் மூளை நாம் உண்பதில் 20 சதவீதத்தை முதலில் கிரகித்துக்கொள்கிறது. அதற்கு தொடர்ந்து குளுகோஸ் தேவை. அதை சுயநல மூளை, என்று சொல்வார்கள். உடல் செயல்படவே அது சுயநலமாக நடந்து கொள்கிறது.

    காலை உணவைத் தவற விட்டால் மூளை சோர்வடைந்து படிப்பவையும், கவனிப்பவையும் வழிதவறி விடுகின்றன. காலை உணவை உண்ணாமல் மதியம் உண்டால் உடல் பருமனாகி விடும் அபாயமும் இருக்கிறது. குறிப்பாக, மாணவிகள் காலை உணவை முறையாக அணுகுவதில்லை. சிற்றுண்டியில் நிறைய மாவுச்சத்தும், புரதச்சத்தும் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதை மனதில் வைத்து ஒருபோதும் காலை உணவைத் தவிர்க்காதே.

    பணக்கார மாணவர்கள் பகட்டுக்காக கல்விபெற வருவார்கள். அவர்கள் கைகளில் ஐநூறு ரூபாய்க் கட்டு தாராளமாகப் புழங்கும். அதைப் பார்த்து சூடுபோட்டுக் கொண்ட பூனையாய் இருந்து விடாதே.

    நீ ஒவ்வொரு ரூபாயைச் செலவழிக்கும்போதும் ஒரு முறை பெற்றோரைக் காட்சிப்படுத்து. அவர்கள் கண்ணீரை நினைத்துப் பார். ரத்தம் சுண்டி அவர்கள் அனுப்பும் பணத்தை பொறுப்புடன் செலவழிப்பதே நல்ல மகனுக்கு இலக்கணம்.

    சில மாணவர்கள் தங்கள் படிப்பைப் படிக்கும் நண்பர்களுடன் மட்டுமே பழகுவார்கள். நீ அப்படி இருக்காதே. நீ அறிவியல் படித்தால் ஆங்கில இலக்கியம் படிக்கிறவர்களையும் நண்பர்களாகக் கொள். அவர்களிடம் மில்டனைப் பற்றியும், ஷேக்ஸ்பியரைப் பற்றியும், ஷெல்லியைப் பற்றியும் அறிந்து கொள். அவற்றில் ஓரிரண்டு இலக்கியங்களை உபரி நேரத்தில் வாசித்து மகிழ். தமிழ் இலக்கியச் சான்றோர்களையும் நட்பாக்கு. அவர்கள் மூலம் கம்பரையும், இளங்கோவையும், பாரதியையும் பயில். மனவியல் நண்பர்களிடம் பழகி நடத்தையைச் சீரமைக்கக் கற்றுக்கொள். நீ அயல் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் அறிவுக்கூடமாய்க் கட்டமைத்தால், உன்னிடமிருந்து வீரிய விதைகள் தெறித்து விழும்.

    விடுதியில் சேர்ந்ததும் உன் வாழ்க்கைக்கான நோக்கத்தை நிர்ணயித்துக்கொள். படித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதே. உனக்கான பணி எது என்பதை வரையறை செய். உன் தேடலைத் தொடங்கு.

    போட்டித் தேர்வு எழுத வேண்டுமென்றால் முதலாண்டில் இருந்தே முனைப்புடன் மூழ்கு. உன் கல்லூரி நூலகம் உன் விடுதி அறையின் நீட்சியாக இருக்கட்டும். உன் பேராசிரியர்கள் காட்டும் பேரொளியில் உன் சந்தேக இருள் விலகும். உன் அறிவுச் சுடர் இன்னும் பிரகாசமாக ஒளி வீசும்.

    விடுதி வாழ்க்கையிலிருக்கும்போதே உலகின் தலைசிறந்த நிறுவனங்களுக்கு எவ்வாறு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதை அறிந்துகொள். ஆங்கிலம் வரவில்லை என முடிவு செய்யாதே. தினமும் ஐந்து சொற்களை நன்றாகக் கற்று பயன்படுத்து. இணையத்தில் ஆங்கில உரைகளைக் கேள். சம ஆர்வமுள்ள நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேசு.

    இன்று உலகின் பொது மொழியாக ஆங்கிலம் உருவாகி விட்டதை மறுதலிப்பதால் நமக்கே நஷ்டம். ஆனால், அதற்காக தாய்மொழியாம் தமிழை உதாசீனப்படுத்தாதே. பண்பாட்டை ஆழமாகப் பயில, வரலாற்றை உணர, வீரத்தைக் கற்க, விருந்தோம்பலைப் பேண, துணிச்சலை வளர்த்துக்கொள்ள தமிழிலக்கியத்தைப் பயில். ஆங்கிலம் என்கிற வெளிநாட்டுக் குடையை வேண்டியபோது விரித்துக்கொள்ளவும், தமிழ்க் கூரையின் அடியில் தங்கவும் பழகு.

    விடுதி வாழ்க்கையில் விருந்தினர்கள், வீட்டுப் பணிகள் போன்ற கவனச் சிதறல்கள் இல்லை. நமக்கான நேரம் நமக்கு மட்டுமே. அதை முழுமையாகப் பயன்படுத்து. என்னதான் கைபேசி வந்தாலும் அது கடிதத்திற்கு ஈடு இணை ஆகாது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பெற்றோருக்கு மறக்காமல் முத்துமுத்தான கையெழுத்தில் கடிதமெழுது. அவர்கள் அதை முப்பது முறை வாசித்து மகிழ்வார்கள் என்பதை மறக்காதே.

    தினமும் இரவு, அன்று நாள் முழுவதும் என்ன செய்தோம் என்ற குறிப்புகளை எழுது. அது உன்னை இன்னமும் மேன்மைப்படுத்த உதவும். கல்லூரியில் படிக்கும்போது கைப்படத் தயாரிக்கும் குறிப்புகளைத் தூக்கியெறிந்து விடாதே. அவற்றைப் பத்திரப்படுத்து. பின்னர் அவை போட்டித் தேர்வுகள் எழுத மிகவும் உதவியாக இருக்கும்.

    சகல நேரமும் பாடமே வாழ்வென இருக்காமல் தினமும் உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கு. விடுதிச் சாப்பாடு வீணாகக் கூடாது என போட்டி போட்டு சாப்பிடாதே. அளவான சாப்பாடு வளமான வாழ்க்கைக்குத் திறவுகோல் என்பதைத் தெரிந்து கொள்.

    விடுதி முடிந்து வருகிறபோது முதிர்ச்சியடைந்த, ஞானம் பெற்ற மனிதனாக உன் வீட்டிற்கு நீ வர வேண்டும் என்பதற்கே இந்த கண்டிப்புக் கடிதம்.
    ×