என் மலர்
சினிமா செய்திகள்

நட்பிற்கில்லை மொழி பேதங்கள்.. மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் குறித்து பார்த்திபன் உருக்கம்
- நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
- மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார்.
நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பெற்றவர் ஆவார். 69 வயதான இவர் கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டத்தின் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியப் நடிகர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை , ஒரு சிறிய தூக்கம் லேசாய் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ?
துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க ,அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனயின் உடல் உணராது என்பதும் சுட்டது.
அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்முட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார்.
ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!!நட்பிற்கில்லை மொழி பேதங்கள்" என்று தெரிவித்துள்ளார்.






