என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்: நடிகர் அஜித்

அஜித்குமாரின் கருத்து வைரலாகி பெரும் கவனம் பெற்றது. ஒரு தரப்பு விஜய்க்கு ஆதரவாக உள்ளது என்றும் இன்னொரு தரப்பு விஜய்க்கு எதிராக உள்ளது என்றனர்.
என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்: நடிகர் அஜித்
Published on

சென்னை:

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,''கரூர் சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் அதிக கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி எதுவும் நடப்பதில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

அஜித்குமாரின் இந்தக் கருத்து வைரலாகி பெரும் கவனம் பெற்றது. ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாக பேசினார் என்றும், இன்னொரு தரப்பினர் விஜய்க்கு எதிராக இந்தக் கருத்து உள்ளது என விமர்சனங்களும், விவாதங்களும் எழுந்தன.

இந்நிலையில், நடிகர் அஜித்குமாரே இன்று விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அஜித்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது.

இதற்கு முன்பு ஆந்திரா சினிமா தியேட்டரில் நடந்துள்ளது. பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது. பல நாடுகளில் நடந்துள்ளது.

பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் நான் உள்பட அனைவருக்கும் பொருந்தும்.

எனது இந்த கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படாது என்று நம்புகிறேன். ஒரு சிலர் ரசிகர்கள் மீது பழியை சுமத்துகிறார்கள்.

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது.

என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன்.

எல்லாருமே அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com