என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மகளின் காதலனை கொலை செய்யத் துடிக்கும் தந்தை - சரத்குமாரின் ஆழி எப்படி இருக்கு? - திரைவிமர்சனம்
    X

    மகளின் காதலனை கொலை செய்யத் துடிக்கும் தந்தை - சரத்குமாரின் ஆழி எப்படி இருக்கு? - திரைவிமர்சனம்

    • ரண்டு கதாபாத்திரங்களின் மன மற்றும் உடல் ரீதியான மோதலை கொண்டு முழு படத்தையும் நகர்த்த முயற்சித்திருக்கிறார்

    கதை:

    மீன்பிடி படகு மெக்கானிக்காக வேலை பார்க்கும் சரத்குமார், வெளிப்படையாக சாதாரண வாழ்க்கை வாழும் மனிதராக இருந்தாலும், மறுபக்கம் போதைப் பொருள் விற்பனை மற்றும் ஆயுத கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஒரே மகளான தேவிகா சதீஷ், கல்லூரியில் உடன் படிக்கும் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார்.

    சமூக மற்றும் பொருளாதார வித்தியாசம் காரணமாக இந்த காதலை ஏற்க மறுக்கும் சரத்குமார், இளைஞனை கடத்தி ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய திட்டமிடுகிறார். உயிர் தப்பிக்க போராடும் நாயகன் தப்பித்தாரா? அல்லது கடலே அவரது முடிவை தீர்மானித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்:

    அப்பா கதாபாத்திரம் சரத்குமாருக்கு புதியது அல்ல. பாசமும் கொடூரமும் கலந்த மனிதராக வேறுபாடு காட்ட முயற்சித்திருந்தாலும், அவர் ஏற்கனவே நடித்த பல வேடங்களின் சாயல் இதில் தென்படுகிறது. தோற்ற மாற்றம் இருந்தாலும் கதாபாத்திரத்தின் தீவிரம் முழுமையாக வெளிப்படவில்லை. இருந்தாலும் அனுபவ நடிகராக தனது பங்கை நம்பகமாக செய்து முடித்திருக்கிறார்.

    இளம் நாயகனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித், உயிர் அச்சத்தில் இருக்கும் மனிதனின் பதட்டத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் சற்றே ஒரே மாதிரியான நடிப்பில் பயணிக்கிறார். சரத்குமாரின் மகளாக வரும் தேவிகா சதீஷ் குறைந்த காட்சிகளிலேயே கவனம் ஈர்த்து தனது வேலையை நிறைவு செய்திருக்கிறார்.

    இயக்கம்:

    ஆழ்கடலில் பயணிக்கும் ஒரு மீன்பிடி படகை மையமாக வைத்து, இரண்டு கதாபாத்திரங்களின் மன மற்றும் உடல் ரீதியான மோதலை கொண்டு முழு படத்தையும் நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாசன். குறைந்த கதாபாத்திரங்களுடன் தீவிரமான திரில்லர் அனுபவம் கொடுக்க முயற்சி இருந்தாலும், அதற்கான அழுத்தம் திரைக்கதையில் முழுமையாக உருவாகவில்லை.

    போதைப் பொருள் கடத்தல் போன்ற பெரிய குற்றங்களில் ஈடுபடும் மனிதன் அனைத்தையும் தனியாக செய்வது போன்ற காட்சிகள் லாஜிக் குறைகளை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் உயிர் காக்க போராடும் நாயகன், பின்னர் வில்லனை காப்பாற்ற முயல்வது போன்ற திரைக்கதை மாற்றங்களும் உணர்ச்சி தாக்கத்தை குறைக்கிறது. திடீர் காதலை விட தந்தை-மகள் பாசம் பெரியது என்பதை உணர்த்தும் காட்சி படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு:

    ஆனந்த் ஒளிப்பதிவில் படகின் உட்புறத்தில் குறுகிய இடங்களில் படமாக்கப்பட்ட சில காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும், வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசை ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது.

    மாலைமலர் ரேட்டிங் : 2.5 / 5

    Next Story
    ×