என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.


இந்நிலையில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலமானார். ஆனால் தற்போது தான் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.


அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாயை முதலமைச்சரிடம் வழங்கினார். நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் ரூபாய் 25 லட்சம் கொடுத்தார். தற்போது இயக்குனர் ஷங்கர் ரூபாய் 10 லட்சம் வழங்கி இருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் உயிரிழந்துள்ளார்.
சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த், குட்டி ரமேஷ் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.


இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு இயக்குனர் பொன்ராம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என்று ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதனிடயே, இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் பூர்ணா, பவர் பிளே என்னும் படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.
நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த அவர், தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் திரிஷ்யம்-2 ரீமேக்கில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பவர் பிளே என்னும் படத்தில் பூர்ணா வில்லியாக நடித்துள்ளார். பணம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையில் அதிகாரம் எப்படி விளையாடுகிறது என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தை விஜயகுமார் கொண்டா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கி இருக்கிறார். இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடித்துள்ளார். கோட்டா சீனிவாச ராவ் வில்லத்தனத்தில் பூர்ணாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளனர். மற்றும் ஹேமா லிங்கலே, பிரின்ஸ், அஜய், சத்யம் ராஜேஷ், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, கேதார் சங்கர், ரவிவர்மா, தன்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
அமேசானில் தெலுங்கிலும் இந்தியிலும் வெளிவந்த இப்படம் இப்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய்யின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கொரோனா ஊரடங்கினால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள். சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள குற்றமே குற்றம் என்ற படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்தது.

தற்போது ஓ.டி.டி.யில் குற்றமே குற்றம் படம் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ரிலீசாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் திவ்யா நாயகியாக நடித்துள்ளார். சும்ருதி வெங்கட, ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் ஆகியோரும் உள்ளனர்.

விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், ஹன்சிகா நடித்துள்ள மஹா, திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
தமிழில் சித்து பிளஸ்-2, பில்லா பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சாந்தினி ஊரடங்கும் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவி நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆனாலும் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பொறுப்பற்று சுற்றுவதாக விமர்சனங்கள் கிளம்பின.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு 2 வாரங்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் ஊரடங்கை மீறி கார், மோட்டார் சைக்கிள், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சாதாரண நாட்களைப்போல் பலர் சுற்றுவதாகவும், இதனால் ஊரடங்கு போட்டும் பயன் இல்லை என்றும் பலர் கண்டித்து வருகிறார்கள்.
சினிமா படப்பிடிப்புகளையும் தொடர்ந்து நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சித்து பிளஸ்-2 படத்தில் நாயகியாக அறிமுகமாகி பில்லா பாண்டி, கவண், பாம்பு சட்டை, நய்யாண்டி, வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சாந்தினி கண்டித்து உள்ளார்.

“ஊரடங்கு என்பது முழுமையானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அதை மீறி சென்னையில் பல படப்பிடிப்புகள் மறைமுகமாக எப்படி நடந்து வருகின்றன. மக்களின் உயிர் முக்கியம். கொரோனா பரவலை தடுக்க வேண்டியது அவசியம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதனால் திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்காக பெப்சி யூனியனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித். இதை பெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகர் அஜித், கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பாதியில் நிறுத்தப்பட்டு இருப்பதால் இயக்குனர் ஷங்கருக்கு, இந்தி தெலுங்கு படம் இயக்க தடை விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பாதியில் நிறுத்தி விட்டு இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி உள்ளார். இதுபோல் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளதாகவும் அறிவித்து உள்ளார்.

இதனை எதிர்த்து இந்தியன் 2 பட தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வற்புறுத்தி உள்ளது. இந்த பிரச்சினையில் இருதரப்புக்கும் இடையே நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.
கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஷங்கருக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் தெலுங்கு, இந்தி திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த கடிதத்தில் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷங்கருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தெலுங்கு, இந்தி படங்களை இயக்க அங்குள்ள திரைப்பட வர்த்தக சபையினர் ஷங்கருக்கு தடை விதிக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மலையாளத்தில் 68-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பி.சி.ஜார்ஜ், போலீஸ் அதிகாரியாக இருந்து சினிமாவுக்கு வந்தவர்.
மலையாள திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் பி.சி.ஜார்ஜ்.
மலையாளத்தில் 68-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ள பி.சி.ஜார்ஜ் கொச்சியில் வசித்து வந்தார். சமீபத்தில் பி.சி.ஜார்ஜூக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உறவினர்கள் அவரை கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இறந்து போன பி.சி.ஜார்ஜ், போலீஸ் அதிகாரியாக இருந்து சினிமாவுக்கு வந்தவர். சாணக்கியம், அர்தவம், இன்னலே உள்ளிட்ட படங்களில் இவர் நடித்த வேடங்கள் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
சங்ககம் படத்தில் இவரது நடிப்புக்கு பெரும் பாராட்டு கிடைத்தது. இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்த நட்டி நட்ராஜ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
கொரோனா 2வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நட்டி நடராஜன் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுக்களை பெற்ற கர்ணன் படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்து இருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.
சமூக வலைத்தளத்தில் ஒருவர் படுக்கைக்கு அழைத்த நிலையில் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நடிகை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சௌந்தர்யா. இவர் ஒரு சில படங்களிலும் சின்னத்திரை மற்றும் குறும் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சௌந்தர்யாவிடம் ஒருவர் படுக்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதில் அவர் ஆபாசமாகவும் பதிவு செய்துள்ளார்.

இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ள நடிகை செளந்தர்யா, அந்த நபரை பிளாக் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






