என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும்.
    ஒருநாள் அந்தப் பாட்டு அணைக்கரை தலைமை என்ஜினீயரின் காதில் கேட்டுவிட்டது.

    அதன் பிறகு நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும். ஆனால் அன்று நான் பாடத்தொடங்கிய அந்த நேரத்தில் இருந்த கொஞ்ச சத்தமும் இல்லாமல் போயிருந்தது. என் பாட்டுக்காகத்தான் இப்படி எல்லோரும் அமைதியாகி விட்டார்களோ என்ற மகிழ்ச்சியில் பாடும் சத்தத்தை அதிகரித்தேன்.

    அப்போதுதான் `ஸ்பாட் விசிட்'டுக்காக அங்கே வந்திருந்த தலைமை என்ஜினீயர் என் பாட்டைக் கேட்டுவிட்டார். அப்போதும் கூட என் குரல் குறையவில்லை. நிற்கவும் இல்லை.

    என்னை நெருங்கியவர், "ஹேய்! கம் ஹியர் மேன்' (இங்கே வா) என்றார்.

    தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த `ஓஸ் பைப்'பை மடக்கி வைத்துவிட்டு அருகில் போனேன்.

    "ஹு ஆர் ? வாட் இஸ் யுவர் நேம்? (யார் நீ? உன் பெயர் என்ன?) என்று கேட்டார்.

    "ராஜையா'' என்றேன்.

    "கொஞ்சமும் தயங்காமல் நான் பதில் சொன்னதைப் பார்த்தவர், "நீ படித்திருக்கிறாயா?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

    "எஸ் சார். எய்த் ஸ்டாண்டர்டு'' என்றேன்.

    "எய்த் ஸ்டாண்டர்டு?'' என்று ஆச்சரியமாக கேட்டவர், அரை டிராயரும், குள்ளமுமாக இருந்த என்னை ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தார். அதே வேகத்தில் "ஆபீசுக்கு வந்து என்னைப்பார்'' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

    அதன்படி ஆபீசுக்குப் போய் அவரை பார்த்தேன். "நீ நாளையில் இருந்து `ஓஸ் பைப்' பிடிக்க வேண்டாம். இங்கே ஆபீசுக்கு வந்துவிடு'' என்றார்.

    "சரி சார்'' என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். அங்கிருந்த அவரது உதவியாளரிடம், "இங்கே வந்து நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.

    அவரோ, "ஏய்! உன்னை ஆபீஸ் பையனாகப் போட்டிருக்காருய்யா.  போ! போ!'' என்றார்.

    அடுத்த நாள் சந்தோஷமாக ஆபீசுக்குப் போனேன். அங்கே நாலைந்து செகரட்டரி, கிளார்க், லெட்ஜர் கீப்பர், அக்கவுண்டண்ட் இவ்வளவு பேர்தான் மொத்தம். இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரே கட்டிடத்தில் தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட நான்கு மேஜை - நாற்காலிகள். அவ்வளவுதான்.

    ஒரு பைலை கையில் கொடுத்து, "அவரிடம் கொடு'' என்பார், ஒருவர். "இதை அவர்கிட்டே கொடுத்து கையெழுத்து வாங்கி வா!'' என்பார், இன்னொருவர். இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தேனே தவிர, மற்றபடி ஒரே போர். ஏனென்றால் பாட்டுப்பாடவே சான்ஸ்

    இல்லையே!இதுபோக மத்தியானம் ஆபீசர் கேம்பசில் இருந்த என்ஜினீயர் முரளீதரனுக்கு கேரியரில் சாப்பாடு எடுத்துப் போய் பரிமாறி வரவேண்டும். ஒரு மைல் தூரம் நடந்துதான் போய்வரவேண்டும்.

    ஒரு நாள் முன்னதாகவே போய் காத்திருப்பேன். இன்னொரு நாளோ அவர் காத்திருக்க, நான் லேட்டாகப்போய் திட்டு வாங்குவேன். சரிவரப் பரிமாறாவிட்டால், அதற்கு வேறு திட்டு.

    என்னுடைய சர்வீசில் அவருக்குத் திருப்தி இல்லாததால், என்னை மறுபடியும் அணைக்கட்டுப் பகுதிக்கு மாற்றி, `ஓஸ் பைப்' பிடிக்க அனுப்பி விட்டார்கள்.''

    இவ்வாறு கூறும் இளையராஜாவுக்குள் அணை தொடர்பான, ஒரு சோகமும் இருக்கிறது. அதுபற்றி கூறுகிறார்:

    "அப்போது பெரும்பாலும் அணையின் வேலைகள் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரம். திடீரென ஒருநாள் அரசாங்க அறிவிப்பாக தண்டோரா ஒலித்தது.

    அணையின் பின்பகுதியில் நீர் தேங்கும் இடத்தில் இருந்த ஊர்களான காமக்காபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிப்பவர்கள் அதைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விட வேண்டும். இப்படி வெளியேற கடைசிநாள்'' என்று கெடு தேதியையும் அறிவித்தார்கள்.

    அணை உச்சியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த என் கண்ணில் மக்கள் ஊரை காலி செய்துவிட்டுப் போகும் காட்சி கண்ணில் படும். கெடு நாள் நெருங்க நெருங்க, கூட்டம் கூட்டமாய் அங்கிருந்த மக்கள் வெளியேறுவதைக் காண மனம் சகிக்கவில்லை.

    அவர்கள் வாழ்வதற்கு அரசாங்கம் வேறு நிலங்கள் கொடுக்கலாம். நிலத்தோடு அவர்களுக்கிருந்த அந்த உறவின் பிரிவுக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்?''

    - இவ்வாறு மிக இளம் வயதிலேயே மற்றவர்களின் பிரச்சினைகளையும் மனதுக்குள் பதியமிட்டுக்கொண்ட இளையராஜா, ஒரு வருடம் வைகை அணையில் வேலை செய்து முடித்துவிட்டார். கையில் பணம் கொஞ்சம் சேர்ந்திருந்தது.

    "இந்த வருடம் நிச்சயம் தேவாரம் ஸ்கூலில் பணம் கட்டி சேர்ந்து ஜோதிடத்தை பொய்யாக்கி விடவேண்டும்'' என்று திட்டமிட்டார்.

    ஆனால், அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக கேரளாவில் நடந்த தேர்தலில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டி இருந்தது. அதற்காக இளையராஜாவும் கேரளா சென்றார்.

    இதுபற்றி அவரே கூறுகிறார்:

    "1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் எல்லா இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க, கேரளாவில் மட்டும் கம்யுனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரேயொரு மாகாணத்தில் (கேரளா) மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேறு கட்சி உருவானதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை.

    இதனால் அந்தத் தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில் காங்கிரசுக்கும் கம்யுனிஸ்டுக்கும் "வாழ்வா சாவா'' நிலை. எல்லா தேசியத் தலைவர்களும் அங்கே முகாமிட்டு இருந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற டென்ஷனான நிலை. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு கம்யுனிஸ்டு கட்சி சார்பில் பாவலர் அண்ணன் போயிருந்தார்.

    ஸ்கூலில் சேருவதற்கு முன் வந்த விடுமுறை நாட்களில் நானும் பாஸ்கரும் பாவலர் அண்ணனை பார்க்க மூணாறுக்கு போனோம்.

    கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் ஏகப்பட்ட கூட்டம். தேர்தல் காரியதரிசி அமர்ந்திருக்க, பல எஸ்டேட் கட்சித் தலைவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் பேசிய செயலாளர், "கம்யுனிஸ்டு தலைவர்கள் பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ராஜேஸ்வரராவ், ஜீவானந்தம் என அத்தனை பேரும் உங்கள் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து வருவார்கள்'' என்றார்.

    இதைக்கேட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரே குரலில் "தோழரே! இவர்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பாவலர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அவரை மட்டும் எங்களுடன் அனுப்பினீர்களென்றால், இந்தத் தொகுதியை நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்'' என்றார்கள்.

    இது என் கண் முன்னே நடந்த நிகழ்ச்சி.

    தொழிலாளர்கள் இப்படிச் சொன்னதும் அவர்களிடம் பேசிய செயலாளர், "பாவலர் கண்டிப்பாக வருவார். அவர் பாடியபின் கூட்டம் தலைவர்களோடு நடக்கும்'' என்றார்.

    உடனே மளமளவென வேலைகள் தொடர்ந்தன. பாவலர் அண்ணன் ஒரு ஜீப்பில் மைக்கை கட்டிக்கொண்டு ஒவ்வொரு எஸ்டேட்டாக பாடிச்சென்றதை கண்ணாரக் காணும் பாக்கியம் எனக்கும் பாஸ்கருக்கும் கிடைத்தது.
    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!
    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!

    எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்க முடியாது என்று ஊரின் பிரபல ஜோதிடர்கள் சொன்னதும், நொந்து போனார் இளையராஜா. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் ஜோதிடர்களிடம் `வார்த்தைப்போர்' செய்தார்.

    அதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    நான் எட்டாவதை தாண்டமாட்டேன் என்று என் ஜாதகத்தை கணித்து ஜோதிடர்கள் சொன்னதும், அவர்கள் சொன்னதில் நம்பிக்கை ஏற்படாமல் "சரியாக பாருங்கள். என் ஜாதகத்தில் அப்படியா இருக்கிறது?'' என்று தாஜா செய்து கேட்டேன்.

    ஆனால் ஜோதிடர்களோ என்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், "உனக்கு எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பே இல்லை'' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

    எனக்கு கோபம் வந்துவிட்டது. அவர்களிடம் வாதம் செய்யத் தொடங்கினேன். "உங்களுக்கு சிலப்பதிகாரத்தில் வரும் இளங்கோவடிகளைத் தெரியுமா? அவர் சேரன் செங்குட்டுவனுக்கு இளையவர். `மூத்தவன் இருக்க இளையவனுக்குத்தான் பட்டம் சூட்டப்படும்' என்று ஜோதிடம் சொன்னவர்களிடம் "உங்கள் ஜோதிடத்தை இப்போதே பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்றவர், அந்த நிமிடத்திலேயே துறவி ஆகிவிட்டார். அவர் துறவி ஆனதால், சேரன் செங்குட்டுவனுக்கே பட்டம் சூட்டப்பட்டது. அதேபோல் உங்கள் ஜோதிடத்தை நானும் பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்று சவால் விடுகிற தொனியில் பேசினேன்.

    எட்டாம் வகுப்பில் முழுப் பரீட்சை எழுதுவதற்கு முன்னதாக ஒரு சின்ன சோதனை. பரீட்சையை உத்தமபாளையத்தில் எழுதவேண்டும் என்றார்கள். அங்கே ஒரு ஆஸ்டலில் தங்கி மூன்று நாட்கள் பரீட்சை எழுதவேண்டும். உணவிற்காக ஒரு குறிப்பிட்ட தொகை கட்டவேண்டியிருந்தது. பணம் கட்ட வேண்டிய கடைசி நாளும் வந்தது. ஆனால் அம்மாவால் பணம் புரட்ட முடியவில்லை.

    இந்த இக்கட்டான நேரத்தில், அக்கா கமலம்தான் அவரது தாலியை விற்று பணம் கொடுத்தார்; அதுவும் அத்தானுக்கு (அக்காவின் கணவர்) தெரியாமல்.

    அக்கா தாலியை விற்றது கூட எனக்கு அந்த நேரத்தில் பெரிதாகத் தெரியவில்லை. ஜோதிடத்தை பொய்யாக்கப் போகிறோம் என்பதுதான் பெரிதாகத் தெரிந்தது.

    இப்போது நினைத்தால் அக்காவின் அன்பும், உயர்ந்த பண்பும் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. உயர்ந்த பண்புகள் கல்வியால் மட்டுமே வருவதில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அக்காவின் அன்றைய தியாகத்துக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்? எதைக் கொடுத்தாலும் ஈடாக முடியாத அந்த அன்பை வெறும் வார்த்தைகளில் விவரித்து விடமுடியாதுதான்.''

    - இப்படியாக எட்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்த இளையராஜாவுக்கு ஒன்பதாவது வகுப்பில் சேர முடியாத சோதனை ஏற்பட்டது.

    அதுபற்றி அவரே கூறுகிறார்:

    "ஒன்பதாம் வகுப்பில் சேர, தேவாரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு போனேன். பள்ளியில் சேரவேண்டுமானால் `ஸ்பெஷல் பீஸ்' 25 ரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தும் அந்த நேரத்தில் எதுவும்

    நடக்கவில்லை.பள்ளிக்கூடம் தொடங்கிவிட்டது. ஒரு மாதம் ஆனது. பணம் கிடைக்கவில்லை. இரண்டு மாதமானது. பணம் புரட்ட முடியாத அம்மாவின் முகம் எனக்குள்ளும் கவலை ஏற்படுத்தியது. இதே நிலை மூன்றாவது மாதமும் நீடித்தபோது, "சரி! இந்த வருடம் நாம் ஸ்கூலுக்குப் போக, அந்த ஸ்கூல் விரும்பவில்லை போலும்'' என்று நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்தபோதே, ஜோதிடர்கள் சொன்னதும் நினைவுக்கு வர, "இனி அந்த ஜோதிடர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்?'' என்றும் வருத்தப்படத் தொடங்கினேன்.

    இந்த நேரத்தில் அத்தானும் அக்காளும் வைகை அணையில் இருந்தார்கள். மிலிட்டரியில் இருந்த அத்தான் அங்கிருந்து வந்து வைகை அணைப் பகுதியில் டிரைவராக இருந்தார்.

    அக்கா நினைப்பு வந்ததும் ஐடியா வந்து விட்டது. வைகை அணையில் மட்டும் எனக்கொரு வேலை கிடைத்தால் ஒரு வருடம் வேலை பார்த்து, ஒரு வருட சம்பளத்தை வைத்துக்கொண்டு அடுத்த வருடமாவது படிப்பைத் தொடரலாம் என்று நினைத்தேன்.

    அம்மாவிடம் ஓடிவந்தேன். விஷயத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி, "நான் வைகை அணை போய் அத்தானைப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டேன்.

    அம்மாவுக்கும் என் ஆர்வம் புரிந்தது. படிக்க ஆசைப்படும் பிள்ளையை அதற்கொரு புதிய வழி கிடைக்கும்போது எந்தத் தாய்தான் தடுப்பார்? "போய்வா மகனே'' என்றார், அம்மா.

    என் வாழ்வைத்தேடி முதல் பயணம். வைகை அணை எப்படி இருக்குமோ என்ற கற்பனையுடன் புறப்பட்டேன். அத்தான் மூலமாக வேலை கிடைப்பதில் சிரமம் எதுவும் இல்லை.

    வைகை அணையின் கரையிலும், கீழே பூங்காவிற்கு மேலுள்ள புல்வெளிகளிலும் தண்ணீர்க் குழாயை பிடித்தபடி தண்ணீர் ஊற்ற வேண்டும். நாளொன்றுக்கு ஒரு ரூபாய் சம்பளம்! வாரா வாரம் சம்பளமாக ஏழு ரூபாய் கொடுத்து விடுவார்கள் என்றார்கள்.

    அரை டிராயர், அரைக்கை சட்டை, குள்ளமான கறுப்பு உருவம். தண்ணீர் பாய்ச்சும்போது சும்மா இருக்க முடியாது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பாட்டுப்பாடியபடியே தண்ணீர் பாய்ச்சுவேன்.

    பொதுவாகவே சத்தம் போட்டுப் பாடுவது எனக்கும் பாஸ்கருக்கும் பழக்கம். அக்கம் பக்கம் போவோர், வருவோர் என்னை வேடிக்கை பார்த்தார்கள். நானோ விடாப்பிடியாக பாடியபடியே வேலையைத் தொடர்ந்தேன்.

    ஒரு வாரம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆபீசுக்குப் போய் சம்பளம் வாங்கினேன்.

    ஏழு புத்தம் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள். மணக்க, மணக்க! அடேயப்பா, வான மண்டலத்தில் சஞ்சரித்தேன். பறந்தேன் என்று கூட சொல்லலாம்.

    ஏழு ரூபாய் கையில் கிடைத்த அந்த நொடியில் ஏற்பட்ட ஆனந்தத்தை இன்றுவரை வேறு எந்தப் பணமும் எனக்குத் தரவில்லை.

    இப்படி 25 நாட்கள் வேலை செய்தால் 25 ரூபாய் வந்துவிடும். அப்புறமாய் போய் ஸ்கூலில் சேர்ந்து விடலாமா என்று கூட யோசித்தேன்.

    ஆனால் 4 மாத பாடம் நடந்திருக்குமே, என்ன செய்வது?

    சரி! ஒரேயடியாக அடுத்த வருடம் படிப்பை தொடரலாம். எனக்குள் ஒரு முடிவுக்கு வந்து வேலையைத் தொடர்ந்தேன்.

    இப்படிச் சொன்ன இளையராஜா, ஒருநாள் தண்ணீர் பாய்ச்சும் நேரத்தில் பாடிக்கொண்டே பணியைத் தொடர அப்போது அந்த வழியாக வந்த வைகை அணையின் சீப் என்ஜினீயர் காதுக்கும் அந்தப் பாட்டு எட்டியது.
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில்  25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.

    வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து விட்டது.அதுபற்றி இளையராஜாவே தொடருகிறார்:

    "அப்பா இறந்த நேரத்தில், ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய

    25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. பண்ணைபுரத்தின் மேற்கே இருந்த குளத்தை நிலமாக மாற்றியதில், மூன்று ஏக்கர் நிலம் கைக்கு வந்தது.

    பாவலர் அண்ணனுக்கு கம்ïனிஸ்டு கட்சி மீது ஈடுபாடு ஏற்பட்ட நேரம் அது. கட்சிக்காக தன் சொந்த செலவில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். "இரு கொலைகள்'', "பாட்டாளியின் குரல்'' என்ற இந்த இரண்டு நாடகங்களுக்கும் அண்ணனே கதை, வசனம், பாடல்கள் எழுதினார். டைரக்ஷனும் அவரே. அதோடு நாடகத்தில் காமெடி நடிகர் வேஷத்தையும் அவரே செய்தார்.

    இந்த நாடகத்தில் நடிக்க உள்ளூர், பக்கத்து ஊர் என்று சிலரை தேர்ந்தெடுத்தார். இன்னும் சில நடிகர் - நடிகைகளை, மதுரையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுத்தார்.

    நாடக ஒத்திகை எங்கள் வீட்டில்தான் நடக்கும். இந்த ஒத்திகை மட்டுமே ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்தது. அத்தனை பேருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அம்மாவும், அக்கா கமலமும் சமைத்துப்போட்டார்கள். தினமும் ஆடு, கோழி, மீன் என்று சமையல்

    நாடகம் நடக்க வேண்டிய தினத்தில்தான் சோதனை. நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு `எஸ்கேப்' ஆகிவிட்டார். நாடக மேடை மைக்கில், அவர் பெயரைச் சொல்லி "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்'' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

    ஓடியவர் ஓடியவர்தான். என்றாலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன், தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்து விட்டார்.

    நாடகம் முடிந்த பிறகுதான் பிரச்சினை. நாடகம் போட்ட தியேட்டருக்கு பணம், மைக்செட், மதுரையில் இருந்து வந்த சீன் செட்டிங்ஸ் மேக்கப் மேன், டிரஸ், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், டிக்கெட், நோட்டீஸ், பிரிண்டிங் சார்ஜ், விளம்பர வண்டிக்கு வாடகை, பேண்டு செட், பின்னணி இசை, ஆர்மோனியம், தபேலா, பாடகர் - பாடகி என இத்தனை பேருக்கும் பணம் பட்டுவாடா செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அண்ணன் தனக்கே உரிய மன உறுதியுடன் பணத்தை குறிப்பிட்ட தினத்தில் தருவதாக எல்லோரிடமும் உறுதிமொழி கொடுத்தார். அவர்கள் அண்ணனை நம்பினார்கள்.

    இதில் தியேட்டர் மட்டும்தான் பண்ணைபுரம் கிராமத்துக்கு சொந்தமானது. தியேட்டர் வாடகைக்கு மட்டும் கிராமத்தினரை அழைத்து விஷயம் சொல்லி சமாளித்தார்.

    ஆனால் மற்றவர்களுக்கு? அத்தோடு நாடக சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக சமைத்துப் போட்ட கடன்?

    அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன், நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காய் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார்.

    இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு. மகன் பட்ட கடனுக்காக சொத்தை விற்று பிரச்சினையை சரி செய்தார் அம்மா.

    அந்த ஏலக்காய் தோட்டத்துக்கு அப்பா வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? அசோகவனம்.''

    இவ்வாறு குறிப்பிட்ட இளையராஜா, இசையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:-

    இன்றைக்கிருக்கும் "கரோக்கி'' சிஸ்டத்தை (திரை இசையுடன் சேர்ந்து பாடுவது) அந்தக் காலத்திலேயே பாவலர் அண்ணன் ஆரம்பித்து விட்டார். எனக்குத்தெரிய இந்த முறையைத் தொடங்கியவர் அண்ணனாகத்தான் இருக்கக்கூடும்.

    ஒரு இசைத்தட்டை ஓடவிட்டதும் மிïசிக் தொடங்கும். அதில் பாடுகிற குரல் ஒலிக்கும் நேரத்தில் மைக்கில் அண்ணன் பாடுவார். இசைத் தட்டில் இருந்து எழுகிற வால்ïமை குறைத்து வைப்பார். இதில் என்னையும் பாட வைப்பார்.

    "அமுதைப் பொழியும் நிலவே'', "உலவும் தென்றல் காற்றினிலே'', "திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்'' - இப்படி பல பாடல்களை நானும் பாடியிருக்கிறேன்.

    ஊர்த் திருவிழாக்களில், அவ்வப்போது ஆர்மோனியம் - மிருதங்கம் சகிதம் கச்சேரி செய்ய ஆரம்பித்தார், அண்ணன். இதில் ஆர்மோனியம் வாசிக்க, சாக்ராபுரம் என்ற ஊரில் இருந்து சங்கரதாஸ் என்பவர் வருவார். வீட்டில் ஒத்திகை நடக்கும்.

    அவருடைய வாசிப்பில் நானும், பாஸ்கரும் அதிகமாக ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களாகவே மாறிப்போனோம்.

    இப்படி இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாவது வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் பார்க்க விரும்பி, பழனிச்சாமி, சந்தானம் என்ற 2 ஜோதிடர்களை வரவழைத்திருந்தார்.

    அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும்.

    அந்த ஜோதிடர்கள் என் ஜாதகத்தை பார்க்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? "இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது.''

    அதிர்ந்தே போனேன். ஆனால் அதுதான் நடந்தது
    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா.
    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

    "அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

    இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.

    தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.

    அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).

    எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.

    1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)

    அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.

    அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.

    பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

    அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

    எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.

    நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

    பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.

    இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.

    அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.

    என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.

    இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.

    அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரிய வந்தது.
    தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.
    தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.

    சிவகுமாரின் முதல் படம் 1965-ல் வெளிவந்தது. அவருடைய கலை உலகப்பயணம் தொடங்கி, 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

    இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் சொன்ன பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- உங்கள் மகன் சூர்யா, இப்போது முன்னணி நடிகராகத் திகழ்கிறார். அவர் நடிகர் ஆவார் என்று நீங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தீர்களா?

    பதில்:- சூர்யா நடிகனான அதிர்ச்சி இன்னும் என்னுள் இருக்கிறது. சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்'' படித்தவன் அவன். காலையில் கல்லூரி சென்றால் மாலை வரை அவன் வகுப்பில் நாலு வார்த்தை பேசினால் பெரிய விஷயம். மவுனமாக எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கும் சுபாவமுள்ளவன்.

    சென்னையில் பிறந்து 22 வருடம் வளர்ந்த ஒரு நடிகனின் மகன், இங்குள்ள எந்த ஸ்டூடியோவிலும் அப்பாவின் ஷூட்டிங்கை பார்த்ததே இல்லை. விளையாட்டாகக் கூட அவனை ஒரு சினிமா ஹீரோவாக நாங்கள் கற்பனை செய்து பார்த்ததில்லை.

    டைரக்டர் வசந்தும், மணிரத்னமும் அவனை திரை உலகுக்கு தேர்ந்தெடுத்தது ஒரு இனிய விபத்து. `வீடியோ டெஸ்ட்' என்று அவனை அழைத்துப் போனார்கள். நான் மணிரத்னத்திற்குப் போன் செய்தேன். "சார்! அவனுக்குச் சினிமா சம்பந்தமாக எதுவும் தெரியாது. அப்படி அவனை நாங்கள் வளர்க்கவில்லை. பெரிதாக எதிர்பார்த்து நீங்கள் `டெஸ்ட்' செய்து ஏமாந்து விடக்கூடாது.

    `கார்மென்ட் எக்ஸ்போர்ட்' (ஆடை ஏற்றுமதி) கம்பெனியில் இப்போது பயிற்சி பெறுகிறான். நாளைக்குச் சொந்தமாக அவன் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது எங்காவது வேலை பார்த்து மாதம் பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ சம்பாதித்து நிம்மதியாக வாழலாம்.

    "நீங்கள் `டெஸ்ட்' செய்து ஒதுக்கிவிட்டால், அது அவன் எதிர்கால வாழ்க்கையை ரொம்பவும் பாதிக்கும். இப்போதுகூட `லேட்' இல்லை. அவனை அனுப்பி விடுங்கள்'' என்றேன்.

    `அவர் மீது 200 சதவீதம் நமëபிக்கை இருக்கிறது. கவலைப்படாதீர்கள். நாங்கள் அவரைப் பார்த்துக் கொள்கிறோம்'' என்றார், மணிரத்னம்.

    டைரக்டர் வசந்தும், மணிரத்னம் அவர்களும் "நேருக்கு நேர்'' படத்தில், `சூர்யா' என்று பெயரிட்டு அவனை அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் கலைஞர்களுக்கு நெஞ்சார நன்றி கூறுகிறேன்.

    அமெரிக்காவில் 3 ஆண்டு "இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்'' படித்து எம்.எஸ். பட்டம் பெற்று இந்தியா வந்த என் இளைய மகன் கார்த்திக், ஒராண்டுக்கும் மேலாக மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பயிற்சி பெற்றான். தற்போது `பருத்தி வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறான்.

    கேள்வி:- காதல் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் இருந்தும், அதை நீங்கள் விரும்பவில்லை. தாயாரும், குடும்பத்தினரும் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் மகன் சூர்யா, காதல் திருமணம் செய்து கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?

    பதில்:- தூய காதலுக்கு நான் எதிரி அல்ல. தான் விரும்பும் பெண்ணைத் தவிர வேறு பெண்ணை மணக்கமாட்டேன் என்ற கொள்கையில் சூர்யா உறுதியாக இருந்தால், அவர் விரும்பியபடி திருமணம் செய்ய அனுமதிப்பேன்.

    கேள்வி:- நீங்கள் நடித்த சினிமாப்படங்களில் முதன் முதலாக உங்கள் தாயார் பார்த்த படம் எது? பார்த்து விட்டு என்ன சொன்னார்கள்?

    பதில்:- கந்தன் கருணை. "முருகனையே நினைத்து வாழ்ந்து, பழனி மலைக்கு கிருத்திகை தவறாமல் போய், திருப்புகழ் - மொத்த பாட்டையும் பாடி, சாமி கும்பிட்டவரு உங்கப்பா. ஒரு கிருத்திகை அன்னிக்கு பழனிலே பாடும்போதே நாவு விழுந்து போச்சு! வந்து பத்து நாள்ளே இறந்துட்டாரு.' அவரு செஞ்ச பிரார்த்தனை, உனக்கு அந்த முருகன் வேஷம் கிடைச்சிருக்கு'' என்றார், என் தாயார்.

    கேள்வி:- 193 படங்களில் நடித்திருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்கள் எவை?

    பதில்:- கந்தன் கருணை, உயர்ந்த மனிதன், சொல்லத்தான் நினைக்கிறேன், புதுவெள்ளம், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பவுர்ணமி அலைகள், சிந்துபைரவி.

    கேள்வி:- நீங்கள் நடித்த படங்களில் உங்கள் மனைவிக்குப் பிடித்தமான படம் எது?

    பதில்:- ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்துபைரவி.

    இவ்வாறு பதிலளித்தார், சிவகுமார்.

    193 திரைப்படங்களில் நடித்து விட்ட சிவகுமாரின் கலைப்பயணம், இப்போது சின்னத்திரையில் தொடருகிறது.

    "சித்தி'', "அண்ணாமலை'', "அபிராமி'' உள்பட ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார்.

    சின்னத்திரைக்கு போனது பற்றி அவர் கூறியதாவது:-

    "ஓவியக் கலைஞனாக வாழ்க்கையைத் தொடர நினைத்த என்னை `சிவகுமார்' ஆக்கி, உலகளாவிய தமிழ் மக்கள் அறிந்திடச் செய்தது, திரை உலகம்தான். இன்றைய புகழ், பொருள், வாழ்வு எல்லாம் திரை உலகம் இட்ட பிச்சை.

    ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நடிக்கத் துவங்கி, நூற்றி இருபது படங்களை முடிக்கும் காலங்கள் வரை கூட நான் லட்ச ரூபாய் சம்பளத்தை எட்டவில்லை. தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி அதிகம் கேட்டதில்லை. காரணம், திரை உலகம் என்னைக் கைவிடாது என்ற அசாத்திய நம்பிக்கை.

    இரண்டரை மணி நேர சினிமா ஏற்படுத்துகிற தாக்கத்தை 25 வார டெலிவிஷன் தொடரில் ஏற்படுத்த முடியாது. காரணம் தொடர்ச்சி விட்டுப் போவதுதான்.

    மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும், படைப்பாளி திறமைசாலியாகவும், டெலிவிஷன் மீடியத்தை திறம்படக் கையாளத் தெரிந்தவராகவும் இருந்தால் பெயர் பெறமுடியும் என்பதற்கு கே.பாலசந்தர் உருவாக்கிய `ரயில் சிநேகம்', `கையளவு மனசு', `காதல் பகடை' தொடர்கள் சாட்சி.

    1990களில் "நீதிமான்'' தொலைக்காட்சித் தொடரில் நான் நடித்தபோது, "என்ன சார்! இத்தனை வருஷமா சினிமாவிலே ஹீரோவா நடிச்சிட்டு `டிவி'க்கு வந்திட்டீங்களே!'' என்று சில துணை நடிகர்கள் கேட்டனர். நான் சொல்லும் சமாதானம் அவர்களை திருப்திபடுத்தாது என்பதை உணர்ந்து, மவுனப் புன்னகை செய்தேன்.

    1999-ல் `சித்தி' தொடர் உருவாக ஆரம்பித்ததும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் `சித்தி' தொடரை பார்த்ததாக புள்ளி விவரங்கள் கூறின.

    "அண்ணாமலை'', உலகின் பெரிய நாடுகளில் எல்லாம் ஒளிபரப்பு ஆயிற்று.

    உலகில் எல்லாத் துறைகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழும். அந்த மாறுதல்கள், திரை உலகிலும் நிகழும். கதாசிரியன், சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டு, பேனா முனை மதிப்பு பெறும் காலம் விரைவில் வரும். அப்போது அர்த்தமுள்ள கதைகள், ஆழமான கருத்துக்கள் மீண்டும் திரை மூலம் உயிர் பெறும். அதுவரை சின்னத்திரையில் தற்காலிகமாக பவனி வருவேன்.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    சிவகுமார் - லட்சுமி தம்பதிகளுக்கு சூர்யா, கார்த்திக் தவிர, ஒரே மகள் பிருந்தா.

    பிருந்தா, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்து "பி.ஏ'' பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயரும் சிவகுமார்தான். இவர் "பி.ஈ'',"எம்.பி.ஏ'' பட்டங்கள் பெற்றவர். சென்னையில், "கிரானைடு''களை வெட்டப் பயன்படும் "டயமண்ட் டூல்ஸ்'' கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார்.

    சிவகுமார் பற்றிய தொடர் இத்துடன் நிறைவடைந்தது.
    சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.
    சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது. எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குறுநாவல் "உச்சி வெயில்.'' அதை, "மறுபக்கம்'' என்ற பெயரில் டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் படமாகத் தயாரித்தார். இந்தப் படத்துக்கு, "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்'' நிதி உதவி செய்தது. மொத்தம் ரூ.14 லட்சம் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

    வேம்பு அய்யர் என்ற வேடத்தில் சிவகுமார் நடித்திருந்தார். அவருடன் ராதா நடித்தார். 1991-ல் வெளிவந்த இப்படத்துக்கு, அகில இந்திய ரீதியில், சிறந்த படம் என்பதற்கான தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.

    பிரபலமான மூத்த கலஞர்களுடன் சேர்ந்து நடிப்பதை 1974 முதல் சிவகுமார் தவிர்த்து வந்தார். கதாநாயகனாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.

    சிவாஜிகணேசன் நடிக்க, பாரதிராஜா இயக்கிய "பசும்பொன்'' படத்தில் நடிக்க, 1995-ல் அழைப்பு வந்தது. பாரதிராஜாவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆவல், சிவகுமாருக்கு நீண்ட காலமாக இருந்தது.

    எனவே, தனது "விரத''த்தை முடித்துக்கொண்டு, 21 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிவாஜியுடன் இணைந்து நடித்தார், சிவகுமார்.

    "பசும்பொன்'' படத்தைப் பற்றி சிவகுமாரின் கருத்து:

    "பாரதிராஜாவுடன் நான் பணியாற்றிய ஒரே படம் இது. செதுக்கிச் செதுக்கி, இழைத்து இழைத்து காட்சிகளைப் படமாக்கினார்.

    எங்கோ ஓரிடத்தில் நடந்த தவறினால், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற படம் தவறிவிட்டது. எனினும், பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் பசும்பொன்னும் ஒன்று.

    ராதிகாவின் கதாபாத்திரம் `மாஸ்டர் பீஸ்.' வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார் அவர்.

    திரைக்கதையை உருவாக்க சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை உழைத்து, அதன்பின் அதை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, அதற்குப் பிறகுதான் படப்பிடிப்புக்கு செல்வார், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளரான நண்பர் எம்.பாஸ்கர்.

    தீர்ப்புகள் திருத்தப்படலாம், பவுர்ணமி அலைகள், தண்டிக்கப்பட்ட நியாயங்கள் ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் நான் நடித்தவை.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    சினிமாவில் தந்தையும், மகனும் ஒரே படத்தில் நடிப்பது விசேஷமானது.

    இந்தி நடிகர் ராஜ்கபூரின் குடும்பத்தில் இப்படி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சிவாஜிகணேசனும், அவர் மகன் பிரபுவும் சேர்ந்து நடித்துள்ளனர்.

    22-9-2000-ல் வெளிவந்த "உயிரிலே கலந்தது'' என்ற படத்தில் சிவகுமாரும், சூர்யாவும் சேர்ந்து நடித்தனர். இதில் சூர்யாவுக்கு ஜோடி ஜோதிகா.

    1997-ல் வெளிவந்த "காதலுக்கு மரியாதை'' படத்தில் இளம் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்தார், சிவகுமார்.

    இந்தப்படத்தில், இந்து மதத்தைச்சேர்ந்த விஜய்யும், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஷாலினியும் காதலிப்பார்கள். காதலுக்கு மதம் தடையாக இருந்தாலும், இருவரும் பெற்றோர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, காதல் வெற்றி பெறும்.

    இந்தப் படத்தில் நடித்தது பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "காதல் இயற்கையானது. தவிர்க்க முடியாதது. மனித இனம் தோன்றிய காலம் தொட்டு நிகழ்வது.

    ஆனால், 25 வயது வரை பெற்று வளர்த்து ஆளாக்கி, வாழ்க்கையைக் கொடுத்த பெற்றோரை உதாசீனப்படுத்தி விட்டு புது உறவுடன் ஓடிப்போகலாமா? அது தவறு. போராடி, பெற்றோர் சம்மதத்தைப் பெற்று வாழ்க்கையில் ஒன்று சேருங்கள் என்ற உயர்ந்த படிப்பினையைச் சொன்ன படம் "காதலுக்கு மரியாதை.''

    நானும், ஸ்ரீவித்யாவும் விஜய்க்கு பெற்றோர்களாக நடித்தோம்.

    பாசில் உருவாக்கிய மிகச்சிறந்த படங்களில் இந்தப்படமும் ஒன்று.''

    இவ்வாறு கூறினார், சிவகுமார்.

    திரை உலக அனுபவங்கள் பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

    "நான் நடித்த மொத்த படங்கள் 193.

    152 தயாரிப்பாளர்களுடனும், 98 டைரக்டர்களுடனும் பணியாற்றியுள்ளேன். என்னுடன் நடித்த கதாநாயகிகள் 87 பேர்.

    எனக்குப் பிறகு திரைப்படங்களில் அறிமுகமாகி, எனக்கு ஜோடியாக அதிகப்படங்களில் நடித்தவர்கள் லட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, சுஜாதா, சரிதா, அம்பிகா, ராதிகா ஆகியோர்.

    மூன்று நான்கு படங்களில் இணையாக நடித்தவர்கள் ஸ்ரீவித்யா, ஜெயசுதா, ஸ்ரீதேவி, ராதா, சுஹாசினி ஆகியோர்.

    கதாநாயகியாக வளர்ந்து கொண்டிருந்த கட்டத்தில் "கவிக்குயில்'', "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு'', "மச்சானைப் பாத்தீங்களா'' என்ற மூன்று படங்களில் ஸ்ரீதேவி என்னுடன் இணைந்து நடித்தார். துரதிர்ஷ்டவசமாக மூன்றுமே வெற்றிபெறத் தவறிவிட்டன.

    என்னுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமி. மிகுந்த தைரியசாலி. சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், அவற்றால் துவண்டு விடாமல், தன் நடிப்பாற்றலைக் கொண்டு, வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுபவர். புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்.

    "சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் அவர் ஏற்ற வேடம், அவரது அன்றைய வயதுக்கும், அனுபவத்துக்கும் மீறிய ஒன்று. ரொம்பவும் `மெச்சூர்டாக' அந்தப் பாத்திரத்தில் நடித்து, "ஊர்வசி'' விருது வாங்கினார்.

    தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகம் ஆகும்போதே சுஜாதாவின் தோற்றத்தில் `மெச்சூரிட்டி' இருந்தது. அதனால், குடும்பத் தலைவி, வக்கீல், டாக்டர், பழி வாங்கத் துடிக்கும் நடுத்தர வர்க்கத்துப்பெண்... என்று குணச்சித்திர வேடங்கள் அவருக்கு ரொம்பவும் கை கொடுத்தன. உணர்ச்சிகரமான கட்டங்களில், நீண்ட தமிழ் வசனங்களை சுத்தமான உச்சரிப்புடன் பொரிந்து தள்ளுவதில் வல்லவர்.

    சரிதா ரொம்பவும் திறமை சாலியான நடிகை. அவருடைய கண்களே ஆயிரம் கதைகள் பேசும்.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.
    சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.
    சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.

    1970 முதல் 7 ஆண்டுகள் மேஜர் சுந்தர்ராஜனுடன் நாடகங்களில் நடித்து வந்தார், சிவகுமார். "அப்பாவி'' என்ற நாடகம், ஆயிரம் தடவை மேடை ஏறியது. 1000-வது நாடகத்துக்கு சிவாஜி தலைமை தாங்கினார்.

    நாடகத்தைப் பார்த்தபின் சிவகுமாரிடம், "கவுண்டா! இத்தனை நாள் எங்கேடா ஒளிச்சு வச்சிருந்தே இம்புட்டுத் திறமையை! கல்யாணம் பண்ணினதும் வீரம் வந்துடுச்சா?'' என்று தமாஷாகக் கூறினார்.

    சிவகுமார் குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் "இனி ஒரு சுதந்திரம்.'' இது 1987-ல் வெளிவந்தது. சிவகுமாரின் 154-வது படம்.

    இந்தப்படம் சிவாஜிக்குப் போட்டுக் காட்டப்பட்டது. படம் பார்த்து முடிந்து வெளியே வந்த சிவாஜி, "படத்தைப் பார்த்தேன். பிரமாதமா பண்ணி இருக்கே. `கப்பலோட்டிய தமிழன்'லே உயிரைக் கொடுத்து நடித்தேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்குக் குழச்சிக்கிட்டு இருக்காங்க'' என்று சிவகுமாரிடம் சொன்னார்.

    "சிவாஜி சொன்னது மாதிரி எனக்கும் நாமம் போடப்பட்டது'' என்று கூறுகிறார், சிவகுமார்.

    சிவாஜியுடன் பழகிய சில நாட்களை நினைவு கூர்ந்த சிவகுமார் நெஞ்சம் நெகிழ கூறியதாவது:-

    "உறுதிமொழி படப்பிடிப்பு. நானும் பிரபுவும் தேக்கடியில் நடித்துக் கொண்டிருந்தோம். அங்கே ஒரு நாள் சிவாஜி குடும்பத்துடன் வந்திருந்தார். எங்கள் வீட்டிலிருந்து என் மனைவி, குழந்தைகள் எல்லாம் வந்திருந்தனர். சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்படியே என் தோள் மீது கைபோட்டபடி தனியே நடந்த சிவாஜி, "கவுண்டரே! சிவாஜிகணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேண்டா'' என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.

    "அண்ணே, என்ன பேச்சு பேசுறீங்க! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுலதான் நாங்க விளையாடுகிறோம். எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிச்சிட முடியாது'' என்றேன்.

    "அப்படியா நினைக்கிறே?''

    "இது என் தாய் மேல் சத்தியம்! தொழில் மேல் சத்தியம்'' என்றேன்.

    "எல்லாரும் அப்படி நினைப்பாங்களா?'' சிவாஜியின் கேள்வி என்னைக் கலங்கச் செய்து விட்டது.

    தேக்கடியில் ஓட்டல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள், என் மகள் பிருந்தா. அப்போது அங்கே சிவாஜி வந்தார். "குட் மார்னிங் அங்கிள்'' என்று சொன்னாள்.

    "நான் உனக்கு அங்கிள் இல்லம்மா. உங்கப்பன் என் தம்பி! நான் உன் பெரியப்பன்'' என்றார். அது முதல் சிவாஜியை பிருந்தா, "பெரியப்பா'' என்றுதான் அன்போடு அழைப்பாள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் சிவாஜி மயங்கி விழுந்து விட்டார். "ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் ஊசலாடுகிறது'' என்றும், ஒரு கட்டத்தில் "சிவாஜி இறந்து விட்டார். உடல் விமானத்தில் வருகிறது'' என்றெல்லாம் செய்திகள். எனக்கு இதயமே ஒரு நொடி நின்று விட்டதுபோல் ஆகிவிட்டது. "பெரியப்பா சாகமாட்டாருப்பா! அவர் கம்பீரமாகத் திரும்பி வருவார் பாருங்க'' என்றாள், பிருந்தா.

    "மகளே, உன் வாய் முகூர்த்தம் பலிச்சுட்டா, ஒரு பூச்செண்டு தர்றேன், அதை உன் கையாலேயே பெரியப்பாவுக்குக் கொடுத்துடு'' என்றேன்.

    அதேபோல் புது ரத்தம், புதுப்பொலிவுடன் ஒரு மாத ஓய்வுக்குப் பின் திரும்பி வந்தார். குடும்பத்துடன் போய்ப் பார்த்தேன். அவர் அருகில் ஒரு நாற்காலி - உட்காரச் சொன்னார். நான் தரையில் அமர்ந்தேன். என் தலையைத் தடவிவிட்டபடி சிவாஜி சொன்னார்:

    "நாமெல்லாம் `முன்னொருகால நடிகர்கள்'டா சிவா! எல்லாம் முடிஞ்சுப் போச்சு. நம்மை யாரு ஞாபகம் வச்சிருக்கா? சிங்கப்பூர்ல பாரு, அஞ்சாயிரம் பேர் கூடியிருக்காங்க. இருபது அடிக்கு முப்பது அடி திரையில் கட்டபொம்மன் காட்சியைப் போடுறான். அஞ்சாயிரம் பேரும் அடிக்கிறான் விசில்.

    "தங்கப்பதுமை... `ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' போட்டா... அவனவன் சாமி ஆடறான். `தங்கப்பதக்கம்' அரங்கமே குலுங்குது!

    "சிவா! வாட் ஏ பைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் ஏன்டா அப்ப சாகல? எதுக்காகடா உயிரோட வந்தேன்?''

    இப்படி சொல்லும்போது சிவாஜிக்கும் எனக்கும் கண்களில் நீர் முட்டித் தளும்பியது.

    நூறு வயது வாழணும்னு ஆசை இருந்தா கூட, ஒரு கலைஞனுக்கு எப்படி முடிவு வரவேண்டும் என்று அவர் கற்பனை செய்து வைத்திருந்தார்.

    1981-ல் முத்துராமன் ஊட்டியில் இறந்தபோது, அவரது உடலை நானும் திருப்பூர் மணி படக்குழுவும் சென்னைக்கு எடுத்து வந்தோம். அதிகாலை 4 மணி. முத்துராமன் வீட்டு வாசலில் சிவாஜியும் முன்னாள் டி.ஜி.பி. பரமகுருவும் காத்திருந்தார்கள். "கவுண்டரே, தேவனுக்கு (முத்துராமன்) நல்ல சாவுடா! கொஞ்ச நாளா படமில்லாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். ஷூட்டிங் போன இடத்துல உடற்பயிற்சிக்காக ஓடிக்கிட்டிருக்கும்போது உயிர் போறது வீர மரணம். உனக்குத் தெரியுமா? நம்ம நடிக ஜாதியில ஒருத்தர், விஸ்வநாததாஸ் - மேடையில முருகன் வேஷம் கட்டி மயில்மேல் வள்ளி தெய்வானைக்கு நடுவுல உட்கார்ந்திருக்கும்போது செத்துப் போயிட்டார். எவ்வளவு கொடுத்து வைத்த சாவு. சாவுன்னா, அப்படி வரணும்'' என்றார்.

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!

    மனிதர்கள் பிறக்கலாம், இறக்கலாம். ஆனால், தமிழ் உள்ளளவும் தமிழ் சினிமா உள்ளளவும் அந்த ஒரு உலக மகா கலைஞனின் சாதனையை யாரும் மறந்திட முடியாது!''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    கலைஞர் மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "1980-களின் கடைசியில், "பாசப்பறவைகள்'', "பாடாத தேனீக்கள்'' என்று இரண்டு படங்களில் கலைஞர் அவர்களின் வசனங்களைப் பேசி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தக் காலக்கட்டங்களில், அடுக்கு மொழி வசனம், இரண்டு வரி வசனமாகச் சுருங்கிவிட்டது.

    படத்தின் வெற்றி விழாக்களில், சிவாஜிக்கு அவர் எழுதிய நீண்ட வசனங்களை பேசிக்காட்டி மகிழ வைத்திருக்கிறேன்.

    துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோருடன் கலைஞர் என் இல்லம் வந்து 90 நிமிடங்கள் என் ஓவியங்களை கண்டு களித்திருக்கிறார்.

    என் புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார். நான் ஓட்ட என் காரில் அவர் சவாரி செய்திருக்கிறார்.

    அவரது தமிழ்ப்பற்றும், நினைவாற்றலும் எப்போதும் என்னை பிரமிக்க வைக்கும்.''

    இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டார்.
    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார்.
    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி,
    திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

    ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.

    நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.

    அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.

    வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.

    ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.

    பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.

    அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலியூர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.

    வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.

    முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.

    திருச்சியில் "கோமதிராணி பிக்சர்ஸ்'' என்ற சினிமா கம்பெனியை ராஜ்குமார் என்பவர் தொடங்கி, வாலியின் நாடகம் ஒன்றை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அது வெற்றி பெறவில்லை.

    ராஜ்குமார் மூலமாக வாலிக்கு எம்.ஏ.ராஜாராம் என்ற திரைப்பட இயக்குனர் அறிமுகமானார். அவர் அவ்வப்போது சென்னையில் இருந்து வாலிக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த வாலி, சென்னைக்கு ரெயிலில் சென்று, ராஜாராம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்து விட்டு வருவார்.

    அப்போது (1956) சில பாடல்களையும் வாலி எழுதினார். அவற்றை சி.என்.பாண்டுரங்கன் இசை அமைப்பில் ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சூரமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாட, ரேவதி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

    (ராஜாராம் படம் எடுக்க இயலாததால், இந்தப்பாடல்கள் அப்போது பயன்படுத்தப்படவில்லை. எனினும், பிற்காலத்தில் அவர் தயாரித்த "புரட்சி வீரன் புலித்தேவன்'' என்ற படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.)

    1956-ம் ஆண்டு தீபாவளிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "பாசவலை'' படம் வெளியாயிற்று.

    அந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்'' என்ற பாடலில், மனதைப் பறிகொடுத்தார், வாலி.

    அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

    "குணங்குடி மஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்தனையோ தத்துவப் பாடல்களை, அடியேன் அந்த நாளிலேயே அறிவேன். ஆயினும், பாசவலை படப்பாட்டில், பாமரனுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை ஒரு ஞானக்கோவையை சாறு பிழிந்தெடுத்து, வெள்ளித்திரை மூலம் ஊருக்கெல்லாம் விநியோகித்தது போலிருந்தது.

    இந்தப் பாடல்களை எழுதியிருந்தவர் பட்டுக்கோட்டை. அடேயப்பா! சவுக்கெடுத்து சொடுக்கி விட்டது போல என்ன சொல் வீச்சு? அசந்து போனேன். அன்றைய படவுலகுக்குப் புதிய வரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையும் அறியாமலே காதலாகி கசிந்துருகிப்போனேன்.

    பாசவலை படத்தை, பத்து தடவை பார்த்தேன்; பாடல்களுக்காகத்தான்!

    பட்டுக்கோட்டையின் பாடல், என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம் வரையும் ஆசை, நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒருசேர ஒரே நாளில் கழுவி விட்டது.

    பாடல்கள் எழுத வேண்டும், அதுவும் படப்பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது.''

    இவ்வாறு வாலி எழுதியுள்ளார்.

    "பாசவலை'' படத்தில் எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், இளம் கதாநாயகனாக நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.

    அவர் நடிப்பு வாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை பாராட்டி கடிதம் எழுதினார். அதற்கு கோபாலகிருஷ்ணன் பதில் எழுதினார்.

    கடிதப் போக்குவரத்து, அவர்கள் இடையே நட்புறவை வளர்த்தது. இந்த நட்புறவு, வாலியின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.
    10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.
    10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.

    அந்த படங்களின் விவரம் வருமாறு:-

    1. கலியுகக் கண்ணன்

    2. ஒரு கொடியில் இரு மலர்கள்

    3. முத்தான முத்தல்லவோ

    4. சிட்டுக்குருவி

    5. பெண்ணை சொல்லிக் குற்றமில்லை

    6. கடவுள் அமைத்த மேடை

    7. சாட்டையில்லாத பம்பரங்கள்

    8. வடை மாலை

    9. ஒரே ஒரு கிராமத்திலே

    10. மகுடி

    11. பெண்கள் வீட்டின் கண்கள்

    12. அவள் ஒரு அதிசயம்

    13. அதிர்ஷ்டம் அழைக்கிறது

    14. பெண்ணின் வாழ்க்கை

    15. என் தமிழ் என் மக்கள்

    16. புரட்சி வீரன் புலித்தேவன்.

    இவற்றில் "வடைமாலை'', வாலியும், ஒளிப்பதிவாளர் மாருதிராவும் இணைந்து டைரக்ட் செய்த படமாகும். ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படம், 1982 மார்ச் மாதம் 12-ந்தேதி வெளிவந்தது.

    வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், "சிறந்த படம்'' என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தமிழக அரசின் 1 லட்ச ரூபாய் விருதையும் பெற்றது.

    "என் தமிழ், என் மக்கள்'' என்ற படம், சிவாஜிகணேசன் நடித்து, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்ததாகும்.

    "புதுக்கவிஞர்கள் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-

    "என்னுடைய சினிமாத் துறையில், பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே கிடையாது.

    காரணம், இன்னொரு கவிஞன் வந்து என் இடத்தைப் பிடித்துக்கொண்டு விடுவான் என்கின்ற அற்ப சிந்தனையெல்லாம் என் மனதில் அரும்பியதில்லை. எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாதென்று சொல்ல? அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்.

    அதனால், தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே என்னுடைய அன்புத்தம்பி வைரமுத்து, ஒரு பேட்டியில் கீழ்க்கண்டவாறு சொன்னார்: "கண்ணதாசனுக்கும் நான் பாட்டெழுதுவது பற்றி கவலையில்லை; வாலிக்கும் என் வருகையில் வருத்தமில்லை'' என்று.

    இன்னும் சொல்லப்போனால், நான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்ட பொழுது, "இது தமிழுக்குக் கிடைத்த பெருமை'' என்று என்னை வாழ்த்திக் கடிதம் எழுதிய முதல் நபரே, தம்பி வைரமுத்துதான்.

    ஏவி.எம்.சரவணனோடு சேர்ந்து எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தியதும் அவரே.

    இப்படியெல்லாம் அனைவரது அன்பையும் ஒரு சேரப் பெற்றிருக்கும் நான், இன்றைய சினிமாப் பாடல்களைப் பற்றி அன்றைய சினிமாப் பாடல்களோடு ஒப்பிட்டு, ஏதேனும் கருத்துச் சொல்லப்போனால், என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் உள்ளங்கள் வருத்தப்படுமோ என்று அஞ்சி மவுனம் காத்து வந்திருக்கின்றேன்.

    இவ்வாறு வாலி கூறினார்.

    "பாட்டு எழுதி அதற்கு மெட்டமைப்பது நல்லதா? அல்லது மெட்டு போட்டு விட்டு, அதற்கு பாட்டு எழுதுவது நல்லதா?'' என்ற கேள்விக்கு பதில் அளித்து வாலி கூறியதாவது:-

    "என்னைப் பொறுத்தவரையில், இரண்டுமே சரியான வழிகள்தாம். போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன?

    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையிலும் சரி, இசைஞானி இளையராஜா இசையிலும் சரி, நான் எத்துணையோ பொருட்செறிவு மிகுந்த பாடல்களை அவர்கள் கொடுத்த மெட்டுக்கு எழுதியிருக்கிறேன்.

    உதாரணமாக இரண்டைச் சொல்கிறேன்:

    விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் வரும் "உலகம் ஒரு பெண்ணாகி'' என்ற பாடல்.

    இளையராஜாவின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "தாய் மூகாம்பிகை'' படத்தில் வரும் "ஜனனீ... ஜனனீ...'' என்ற பாட்டு.

    இந்த இரண்டு பாட்டுகளும் தரமாக இல்லையா என்ன? தமிழ் சிதிலப்பட்டிருக்கிறதா, என்ன?

    ஒரு மெட்டுக்கான சிறந்த பாட்டை எழுதுவது எப்பொழுதும் சாத்தியமான காரியம்தான். ஆனால் அதற்குரிய கால அவகாசம், இன்றைய அவசர சினிமாவில் கிடைப்பதில்லை. இதுதான் உண்மையான நிலை.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இசையமைப்பாளர் என் வீட்டிற்கு வந்தார். அவர் இசையமைக்க இருக்கும் ஒரு படத்திற்கு பாட்டெழுத நான் ஒப்பந்தமாகியிருந்தேன். ஒரு மரியாதை நிமித்தம், என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தார் அந்த இசையமைப்பாளர்.

    அவர் தந்தையை நான் பல்லாண்டுகளுக்கு முன்பே நன்கறிந்து பழகியவன். அதையும் எனக்கு நினைவுபடுத்தி, தன்னை அவருடைய மகன் என்று தெரிவித்துக் கொண்டார், அந்த இளம் வயது இசையமைப்பாளர்.

    "என்ன தம்பி! டிïன் கொண்டு வந்திருக்கியா?'' என்று நான் அன்போடு வினவினேன்.

    "இல்லை சார்! எனக்கு டிïன் போட்டு உங்ககிட்டக் கொடுக்க ரொம்ப நாழி ஆகாது. இருந்தாலும், எனக்கு என் டிïனைவிட, உங்க வார்த்தைகள்தான் முக்கியம். நீங்க எழுதிக் கொடுங்க... நான் நாலஞ்சு விதமா டிïன் போட்டு, உங்ககிட்ட காட்டுகிறேன்...'' என்றார் அந்த இளைஞர்.

    உடனே நான் சொன்னேன்: "தம்பி! இது ஒரு சிச்சுவேஷன் சாங் இல்லை. பசங்க ஜாலியாப் பாடுற பாட்டு. இதுக்கு ரிதம்தான் முக்கியம். அதனாலே நீ டிïன் போட்டு, அதற்கு நான் பாடல் எழுதினால்தான் நல்லாயிருக்கும். டிïனைப் போட்டு நாளைக்கு அனுப்பு. நான் பாட்டு எழுதி வைக்கிறேன். இருந்தாலும், `பாட்டெழுதி அதுக்கு டிïன் போடணும். வார்த்தைதான் முக்கியம்' அப்படின்னு நீ சொன்னதுக்கு என்னுடைய பாராட்டுகள்'' என்று சொல்லி, அந்த இசையமைப்பாளரை வாழ்த்தி அனுப்பினேன்.

    பிறகு, அந்த இளம் வயது இசையமைப்பாளரிடமிருந்து மறுநாள் டிïன் வந்தது... நான் பாட்டெழுதிக் கொடுத்து அனுப்பினேன்.

    பாட்டு பயங்கரமாக பாப்புலர் ஆனது.

    அந்த இளம் வயது இசையமைப்பாளர்தான், என் நண்பர் சேகரின் மைந்தன், ஏ.ஆர்.ரகுமான்.

    அப்போது நான் எழுதிக் கொடுத்ததுதான் "ஜென்டில்மேன்'' படத்தில் வருகிற "சிக்குபுக்கு ரயிலு'' பாடல்.''

    இவ்வாறு வாலி கூறினார்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு வாலி எழுதிய பாடல்கள்

    ஒரே காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் வாலி பாடல்கள் எழுதினார். அவர் பாடல் எழுதிய எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் விவரம் வருமாறு:-

    எம்.ஜி.ஆர். படங்கள்

    1. நல்லவன் வாழ்வான் 2. தாயின் மடியில் 3. தெய்வத்தாய் 4. படகோட்டி 5. ஆசை முகம் 6. ஆயிரத்தில் ஒருவன் 7. எங்க வீட்டுப்பிள்ளை 8. கலங்கரை விளக்கம் 9. தாழம்பூ 10. பணம் படைத்தவன் 11. அன்பே வா 12. சந்திரோதயம் 13. தாலி பாக்கியம் 14. நாடோடி 15. நான் ஆணையிட்டால் 16. பெற்றால்தான் பிள்ளையா 17. அரச கட்டளை 18. காவல்காரன் 19. ஒளிவிளக்கு 20. கணவன். 21. கண்ணன் என் காதலன் 22. குடியிருந்த கோயில் 23. ரகசிய போலீஸ் 24. அடிமைப்பெண் 25. நம் நாடு 26. என் அண்ணன் 27. எங்கள் தங்கம் 28. மாட்டுக்கார வேலன் 29. தலைவன் 30. தேடிவந்த மாப்பிள்ளை 31. ஒரு தாய் மக்கள் 32. குமரிக்கோட்டம் 33. நீரும் நெருப்பும் 34. ரிக்ஷாக்காரன் 35. இதயவீணை 36. அன்னமிட்டகை 37. நான் ஏன் பிறந்தேன் 38. ராமன் தேடிய சீதை 39. உலகம் சுற்றும் வாலின் 40. நேற்று இன்று நாளை. 41. சிரித்து வாழவேண்டும் 42. உரிமைக்குரல் 43.இதயக்கனி 44. நினைத்ததை முடிப்பவன் 45. நாளை நமதே 46. ஊருக்கு உழைப்பவன் 47. உழைக்கும் கரங்கள் 48. நீதிக்கு தலைவணங்கு 49. இன்றுபோல் என்றும் வாழ்க! 50. நவரத்தினம் 51. மீனவநண்பன் 52. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.

    சிவாஜி படங்கள்

    1. அன்புக்கரங்கள் 2. மோட்டார் சுந்தரம் பிள்ளை 3. செல்வம் 4. பேசும் தெய்வம் 5. இரு மலர்கள் 6. நெஞ்சிருக்கும் வரை 7. உயர்ந்த மனிதன் 8. கலாட்டா கல்யாணம் 9. அஞ்சல் பெட்டி 520 10. எங்க மாமா 11. எதிரொலி 12. சுமதி என் சுந்தரி 13. தேனும் பாலும் 14. பாபு 15. தவப்புதல்வன் 16. பாரத விலாஸ் 17. மனிதரில் மாணிக்கம் 18. சிவகாமியின் செல்வன் 19. அன்பே ஆருயிரே 20. டாக்டர் சிவா. 21. மன்னவன் வந்தானடி 22. என்னைப்போல் ஒருவன் 23. பைலட் பிரேம்நாத் 24. ஜஸ்டிஸ் கோபிநாத் 25. நான் வாழவைப்பேன் 26. விசுவரூபம் 27. அமரகாவியம் 28. சத்தியம் சுந்தரம் 29. மாடி வீட்டு ஏழை 30. மோகனப்புன்னகை 31. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 32. ஊரும் உறவும் 33. தியாகி 34. துணை 35. பரீட்சைக்கு நேரமாச்சு 36. வா கண்ணா வா 37. ஹிட்லர் உமாநாத் 38. இமைகள் 39. சந்திப்பு 40. சுமங்கலி 41. நீதிபதி 42. மிருதங்க சக்ரவர்த்தி 43. வெள்ளை ரோஜா 44. இரு மேதைகள் 45. சரித்திர நாயகன் 46. சிம்ம சொப்பனம் 47. தாவணிக்கனவுகள் 48. வம்ச விளக்கு 49. நாம் இருவர் 50. நீதியின் நிழல் 51. படிக்காத பண்ணையார் 52. பந்தம் 53. படிக்காதவன் 54. ராஜரிஷி 55. ஆனந்தக் கண்ணீர் 56. சாதனை 57. தாய்க்கு ஒரு தாலாட்டு 58. விடுதலை 59. தாம்பத்தியம் 60. வீரபாண்டியன். 61. என் தமிழ் என் மக்கள் 62. ஞானப்பறவை 63. சின்ன மருமகள் 64. தேவர் மகன் 65. நாங்கள் 66. மன்னவரு சின்னவரு
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.

    1977-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரானார்.

    தேர்தலில் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர். நடித்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' என்ற படம் முடிவடையும் தருணத்தில் இருந்தது. மீதியிருந்த இரண்டொரு காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு, முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். அதன்பின் நடிக்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், 1978-ல் அவர் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். அதுபற்றி, கவிஞர் வாலி எழுதியிருப்பதாவது:-

    `அக்கரைப்பச்சை', `இளைய தலைமுறை' முதலிய படங்களைத் தயாரித்த என் நண்பர் ஜி.கே.தர்மராஜ் அவர்களும், புகழ் வாய்ந்த ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களும் ஒரு நாள் இரவு என் வீட்டிற்கு வந்தார்கள்.

    "நான் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நண்பர் மாருதிராவும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். நíங்கதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதணும்'' என்று வந்த விஷயத்தை சுருக்கமாக விளக்கினார், தர்மராஜ்.

    ``இப்போது என் கைவசத்தில் எந்தக் கதையும் இல்லையே...'' என்று நான் தயங்கியவாறே சொல்லிவிட்டு, "யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார்?'' என்று தர்மராஜை வினவினேன்.

    "யார் ஹீரோவா நடிக்கப்போகிறார்ங்கறதை அப்புறம் சொல்றேன். ஆனால் அந்த ஹீரோதான் உங்ககிட்ட கதையை வாங்கி, வேலையை ஆரம்பிக்கச் சொல்லி எங்களை இங்கே அனுப்பினார்...'' என்று மாருதிராவ் ஒரு சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.

    "அவருக்கு எப்படிக் கதை எழுதணும்னு, உங்களுக்குத்தான் தெரியும்னு அவரே சொன்னாருங்க. அவர் வீட்லேருந்துதான், அவர் சொல்லி அனுப்பித்தான் நாங்க நேர உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்...'' என்று புன்னகைத்தார், தர்மராஜ்.

    நான்தான் கதை வசனம் எழுத வேண்டுமென்று என் எழுத்தில் அவ்வளவு ஆர்வம் கொண்டு, இவர்களை என் வீட்டிற்கு அனுப்பிய ஹீரோ யாராக இருக்கக்கூடும் என்று நான் வியப்பும், மகிழ்வும் விழிகளில் குமிழியிட ஒரு வினாடி சிந்தனையில் ஆழ்ந்தேன்.

    பிறகு, தர்மராஜிடம், "உங்களை என்கிட்ட அனுப்பிச்ச ஹீரோ யாரு சார்? அதெ முதல்ல சொல்லுங்க...'' என்று விடாப்பிடியாகக் கேட்டேன்.

    அவர் யாரென்று, தர்மராஜ் சொன்னதும் நான் திகைத்துப்போனேன். இது கனவா? நனவா? என்று நான் கிள்ளிப் பார்க்காத குறைதான்.

    "நிஜமாவா சொல்றீங்க?'' என்று நான் மாருதிராவிடமும், தர்மராஜிடமும் மாறி மாறிக்கேட்டேன்.

    "உங்களுக்கு சந்தேகமிருந்தா, நீங்க வேணும்னா அவர்கிட்டயே, போன் பண்ணிப் பேசுங்க...'' என்றார் தர்மராஜ்.

    "அதுக்குக் கேக்கலீங்க. அவர் சினிமாவில் நடிக்க முடியாதே... அப்படியிருக்கும்போது எப்படி உங்ககிட்ட நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாரு? சாத்தியமில்லாத விஷயத்தைச் சொல்றீங்களே சார்!'' என்று சொன்னேன் நான்.

    தர்மராஜ் மெல்லிய புன்னகையை இதழோரம் இழையவிட்டவாறே, "இந்தப் பத்தாயிரம் ரூபாயை அட்வான்சா வாங்கிக்கங்க. அப்புறம் அண்ணனோட நீங்களே பேசி, அவர் நடிக்கிறார்ங்கற விஷயத்தை உறுதி பண்ணிக்கிட்டு, கதை எழுத ஆரம்பியுங்க...'' என்று என் கையில் காசோலையைத் திணித்துவிட்டு மாருதிராவுடன் காரில் ஏறிப்போய்விட்டார்.

    மறுநாள் அதிகாலையிலேயே நானே என் காரை ஓட்டிக்கொண்டு அன்புக்குரிய என் அண்ணனை அவர் இருப்பிடத்தில் சந்தித்து, "நீங்க படத்திலே நடிக்க ஒத்துக்கிட்டு, என்னைக் கதையெழுதச் சொல்லி தர்மராஜையும், மாருதிராவையும் என் வீட்டுக்கு அனுப்பிச்சீங்களாண்ணே!'' என்று ஒரே மூச்சாகப் பேசி முடித்தேன்.

    "ஆமாம். நான் நடிக்கப்போகிறேன்... சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. ஏப்ரல் 14-ந்தேதி பூஜை!'' என்று அவர் சொன்னதும் நான் வியப்பால் வாயடைத்துப்போனேன்.

    ஏனெனில் என்னிடத்தில் படத்தில் நடிக்கப்போவதாகச் சொன்னவர், அப்போது முதல்-அமைச்சராகக் கோட்டையில் கொலுவிருந்த என் அன்பு அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள்.

    "ஏண்ணே, நீங்க முதல்-அமைச்சரா இருந்துக்கிட்டு சினிமாவில் நடிக்கறது...'' என்று நான் சொல்வதற்குள், "சாத்தியமான்னு கேக்குறீங்களா? சாத்தியமா இருக்கத் தொட்டுத்தான் உங்களைக் கதை எழுதச் சொல்றேன்'' என்று பாசத்தோடு என் கன்னத்தை வருடினார் எம்.ஜி.ஆர்.

    நான் வீடு வந்து சேர்ந்தேன். இரவு பகலாக உட்கார்ந்து எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக ஒரு கதையை உருவாக்கினேன்.

    10 நாட்கள் கழித்து, `கதை தயார்' என்று எம்.ஜி.ஆருக்கு டெலிபோன் செய்தேன்.

    அன்று இரவு, அண்ணன் எம்.ஜி.ஆரின் நெருங்கிய உறவினரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான குஞ்சப்பன், என் வீட்டிற்கு வந்தார்.

    "நாளைக் காலை 6 மணி விமானத்தில் சி.எம். கூட நீங்களும் மதுரைக்குப் போறீங்க. விமானப் பயணத்திலேயே கதையைக் கேட்டுக்கறேன்னு சொன்னாரு. அடுத்த நாள் விமானத்தில் நீங்க மதுரையிலிருந்து மெட்ராசுக்குத் திரும்பிடலாம். அதுக்கும் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கறேன்'' என்று குஞ்சப்பன் தான் வந்த விஷயத்தை விளக்கிச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    விமானத்திலேயே எம்.ஜி.ஆருக்குக் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. திருநெல்வேலிக்கும் என்னை உடன் அழைத்துச் சென்றார். அன்று இரவு நெடுநேரம், நானும் அவரும் அந்தக் கதையைப் பேசிப் பேசி மெருகேற்றினோம்.

    படத்திற்கு, "உன்னை விடமாட்டேன்'' என்று தலைப்பு வைத்தால் நன்றாயிருக்கும் என்று சொன்னேன். எம்.ஜி.ஆர். பொன்னிறம் மின்னப் புன்னகைத்தார். அவர், புன்னகைத்தால் `சம்மதம்' என்று அர்த்தம்.

    சென்னை வந்த பிறகு திரைக்கதையை எழுதும் பணியில் நான் ஈடுபட்டாலும், `ஒரு மாநில முதல்-அமைச்சர் சினிமாவில் நடிப்பதை, மத்திய அரசு எப்படி ஒத்துக்கொள்ளும்' என்கிற சந்தேகம் என் சிந்தனை ஓட்டத்தை அவ்வப்போது தடை செய்து கொண்டுதானிருந்தது.

    ஓரிரு வாரங்கள் கழித்து ஒருநாள் அதிகாலையில் தொலைபேசியின் மணி, என் துயிலைக் கலைத்தது.

    ரிசீவரை எடுத்து, `ஹலோ!' என்றேன்.

    `வாழ்க!' என்று சொல்லிவிட்டு, "காலை பேப்பர் பார்த்தீங்களா? உடனே எடுத்துப் பாருங்க'' என்றார் எம்.ஜி.ஆர். உடனே போனை வைத்துவிட்டார்.

    "மாநில முதல்-அமைச்சராக இருந்து கொண்டு, தன் கடமைகளுக்கு குந்தகம் வராமல் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை'' என்று பொருள்பட பத்திரிகையாளர்களிடம் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் சொல்லியிருந்த விஷயம், பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.

    பிறகென்ன! இரவு பகலாக திரைக்கதையை எழுதி முடித்தேன். படத்தின் இயக்குனராக கே.சங்கரை அமர்த்திக் கொள்ளும்படி எம்.ஜி.ஆர். என்னிடத்திலும், தயாரிப்பாளர் தர்மராஜிடமும் சொன்னார்.

    "யாரை இசையமைப்பாளராகப் போடுவது?'' என்று தர்மராஜ் கேட்டார்.

    "புதுசா ஒரு பையன் வந்திருக்கிறாரே! அந்தப் பையனைப் போட்டுக்கலாம். பாட்டெல்லாம் கேட்டேன். நல்லாயிருக்கு'' என்றார், எம்.ஜி.ஆர்.

    "நீங்க, இளையராஜாவைச் சொல்றீங்களா?'' என்றேன் நான்.

    "ஆமாய்யா!'' என்றார் எம்.ஜி.ஆர்.

    பிறகு என்னைப் பார்த்து, "நீங்கபோயி பூஜைக்கு தலைமை தாங்க வரச்சொல்லி, கவர்னரைக் கூப்பிடுங்க. தர்மராஜையும் அழைச்சுக்கிட்டுப் போய், நான் சொன்னேன்னு சொல்லுங்க...'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதன் பேரில், நானும், தர்மராஜ×ம் கவர்னர் மாளிகைக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்ள அழைத்தோம்.

    `என்ன கதை? என்ன மாதிரிப்படம்?' என்றெல்லாம் கவர்னர் என்னிடம் கேட்டறிந்து கொண்டு, வருவதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

    பிறகு, சில காரணங்களை முன்னிட்டு கவர்னர் வருகை தவிர்க்கப்பட்டது.

    பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவுடன், எம்.ஜி.ஆர். அவர்களும், ஏனைய அமைச்சர்களும் கலந்து கொள்ள படத்தின் பூஜைக்கான அழைப்பிதழ்கள் அச்சாகிக் கொண்டிருந்தன.

    விழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக அண்ணன் எம்.ஜி.ஆர். என்னைத் தொலைபேசியில் அழைத்து, "படத்துவக்க விழாவிற்கு, நாஞ்சில் மனோகரனைத் தலைமை தாங்கச் சொல்லி கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வரவேற்புரையை நிகழ்த்துங்கள்'' என்று என்னைப் பணிந்தார்.

    பூஜை, குறிப்பிட்ட நாளில் கோலாகலமாக நடந்தது. இளையராஜாவின் இசையில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, எம்.ஜி.ஆர். முன்னிலையில் பாடல் ஒலிப்பதிவாயிற்று.

    அந்நாளில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்து கொண்டே, படத்திலும் நடிக்கப் போகிறார் என்னும் செய்தியை, அன்றாடம் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துக் கொண்டு வந்தன.

    ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, படத்தில் நடிப்பதை, என்ன காரணத்திற்காகவோ எம்.ஜி.ஆர். மறுபரிசீலனை செய்து தவிர்த்து விட்டார்.

    காரணத்தை நானும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்
    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

    இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    "அடிமைப்பெண்'' படத்துக்காக, "அம்மா என்றால் அன்பு'' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

    "வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    "ரொம்ப சந்தோஷம்'' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

    "அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது'' என்றேன்.

    "எப்படி? எப்படி?'' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

    `அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

    அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

    `என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

    - இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, "வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்'' என்றார்.

    "அம்மா என்றால் அன்பு'' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, "அடிமைப்பெண்'' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.''

    இவ்வாறு வாலி கூறினார்.

    ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

    1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

    "என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?'' என்று கேட்டார், வாலி.

    "நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்'' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

    "என்ன சந்தோஷ சமாசாரம்?'' என்று வாலி கேட்டார்.

    "நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!'' என்று கூறிய எம்.ஜி.ஆர்., "உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை'' என்றார்.

    கண் கலங்கி விட்டார், வாலி.

    எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, "கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?'' என்ற கேள்வி எழுந்தது.

    கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

    அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

    "உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

    "நினைத்தேன் வந்தாய், நூறு வயது!'' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

    "நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...'' என்று "எங்க வீட்டு பிள்ளை''யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

    "அன்னமிட்ட கை'' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.''

    - இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

    "அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது'' என்றார்.

    அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., "என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை'' என்றார்.

    எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

    பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

    "எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, "அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது'' என்று கூறினார்.

    மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

    எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.
    புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார்.
    புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!

    ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.

    அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.

    பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.

    நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.

    இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

    திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.

    இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

    "நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.

    இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.

    அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், "எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.

    டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.

    "கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.

    குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

    கதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.

    "குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''

    இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

    திருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விருமëபினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.

    சகுனத் தடைகள்

    திருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி.

    கோபாலகிருஷ்ணன்தான் காரை ஓட்டினார்.

    அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

    "ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.

    குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, "குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்'' என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.

    "வாலி! இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே! மெட்ராசுக்கே திரும்பிடலாமா...?'' என்று கோபி என்னிடம் கேட்டார்.

    "ஏன்? இதனால் என்ன?'' என்றேன் நான்.

    "கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே'' என்றார் கோபி.

    "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை'' என்றேன் நான்.

    கோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது.

    அதன் மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புகள்.

    "சகுனம் சரியில்லை... வாங்க, வாலி! ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்'' என்றார், கோபி.

    வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.

    "இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு'' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.

    "கோபி! எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ந்தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்'' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.

    "ஏப்ரல் 7-ந்தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...?''

    "அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.''

    என் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.

    கோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை. ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

    திருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.

    "ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி? கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...'' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.

    "டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்'' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.

    திருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:

    "எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ந்தேதி காலியாயிருக்கு...''

    உடனே நான் கோபியிடம், "இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது!'' என்றேன்.

    1965 ஏப்ரல் 7-ந்தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், "புலித்தேவன்'' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்றியில் நான் திலகம் இட்டேன்.

    திருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.

    நான் ஆண்டவனிடத்தில் நம்பிக்கையுடையவன்.

    சகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    தன் திருமணம் பற்றி யாருக்கும் வாலி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், மறுநாள் பத்திரிகைகளில் "வாலி ரகசிய திருமணம்'' என்று செய்தி வெளியாகிவிட்டது.

    அதைப் பார்த்துதான், எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.வி. ஆகியோருக்கு வாலியின் திருமண தகவலே தெரிந்தது.

    இதனால் அவர்கள் வாலியிடம் கோபித்துக்கொண்டாலும், வாலி பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்த்து பெற்றார்.
    ×