search icon
என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    ஒவ்வொரு தீபாவளிக்கும் சிவாஜி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்புகளை மும்பையில் இருந்தபடியே லதா மங்கேஷ்கர் அனுப்பி வைப்பதை வழக்கமாகவே வைத்து இருந்தார்.
    இந்திய திரை உலகில் ‘இசைக்குயிலாக’ திகழ்ந்த லதா மங்கேஷ்கரின் மரணம் திரை உலக பிரபலங்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. தமிழில் சில பாடல்களை மட்டுமே அவர் பாடியிருந்த போதிலும், என்றென்றும் அவை மனதில் நிற்பவையாகவே உள்ளன.

    இளையராஜா இசையில் கமல் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை கலகல கலவென’ என்ற பாடல் இப்போதும் காதலர்களின் சங்கீத கீதமாகவே ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இப்படி தனது பாடல்கள் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு இருந்த லதா மங்கேஷ்கர், தமிழ் திரை உலகின் அரசனாக வாழ்ந்து மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்துள்ளார்.

    சிவாஜி கணேசனும், லதா மங்கேஷ்கரும் அண்ணன்-தங்கையாகவே பாசமழை பொழிந்து இருக்கிறார்கள். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘பாசமலர்’ திரைப்படம் இப்போதும் அண்ணன்-தங்கை பாசத்தை பிரதிபலிக்கும் மிகச்சிறந்த காவியமாகவே திகழ்கிறது.

    அந்த படத்தில் இடம் பெற்றது போன்ற பாசமலர் தங்கையாகவே லதா மங்கேஷ்கர் வாழ்ந்து இருக்கிறார். சிவாஜி கணேசனும், அவர் மீது உடன் பிறந்த சகோதரியை போன்று அளவுகடந்த பாசத்தை காட்டி உள்ளார்.

    1960-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பை பார்த்து வியந்த லதா மங்கேஷ்கர், தனது சகோதரிகளுடன் சென்னை வந்து அன்னை இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போதுதான் முதல்முறையாக சிவாஜியை நேரில் பார்த்து பேசி நட்பு பாராட்டி இருக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவரும் அன்பை பொழிந்து பேசி இருக்கிறார்கள்.

    அப்போது லதா மங்கேஷ்கர், சிவாஜியிடம் ‘‘என்னை உங்கள் தங்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார். அதனை சிவாஜியும் ஏற்றுக்கொண்டு அன்புத்தங்கையாகவே அவரை உபசரித்து இருக்கிறார்.

    இந்த அண்ணன்-தங்கை பாசம் சிவாஜி மரணம் அடையும் வரையில் தொடர்ந்துள்ளது. சிவாஜியின் மரணத்திற்கு பிறகும் அவரது அன்னை இல்ல குடும்பத்தினரோடு லதா மங்கேஷ்கர் தொடர்பிலேயே இருந்துள்ளார்.

    சிரித்து பேசிக்கொண்டிருக்கும் சிவாஜி கணேசன் - லதா மங்கேஷ்கர்

    ஒவ்வொரு தீபாவளிக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்புகளை மும்பையில் இருந்தபடியே லதா மங்கேஷ்கர் அனுப்பி வைப்பதை வழக்கமாகவே வைத்து இருந்தார். லதா மங்கேஷ்கர்-சிவாஜிக்கு இடையேயான இந்த உறவு மாநிலம், மொழியை கடந்து நட்புக்கு இலக்கணம் வகுத்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

    சிவாஜி கணேசனின் குடும்பத்தில் ஒருவரான பிறகு லதா மங்கேஷ்கர் சென்னைக்கு வரும் போதெல்லாம் அன்னை இல்லத்துக்கு தவறாமல் சென்று வந்துள்ளார். ஆரம்பத்தில் சென்னை வந்தபோது ஓட்டல்களிலேயே லதா மங்கேஷ்கர் தங்கி உள்ளார்.

    ஆனால் ஓட்டல் உணவு அவருக்கு பிடிக்காமல் போனது. இதுபற்றி சிவாஜியிடம் ஒருமுறை அவர் கூறி இருக்கிறார். உடனே சிவாஜி, ‘‘அதற்கு என்னம்மா? நான் வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்து விடுகிறேன்’’ என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து லதா மங்கேஷ்கர் சென்னை வரும்போதெல்லாம் சாப்பாடு பற்றிய கவலையின்றி வந்து சென்றுள்ளார். சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து விதவிதமான உணவு அவர் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் லதா மங்கேஷ்கரிடம் சிவாஜி, ‘‘சென்னை வரும்போதெல்லாம் ஏன் வெளியில் தங்குகிறாய்? இனி எனது வீட்டில்தான் தங்கவேண்டும்’’ என கூறி உள்ளார்.

    இதற்கு தயங்காமல் லதா மங்கேஷ்கரும் ‘‘சரி அண்ணா’’ என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

    இதனை தொடர்ந்து அன்பு தங்கைக்காக அன்னை இல்லத்திலேயே சிறிய பங்களா ஒன்றையும் சிவாஜி கணேசன் கட்டி உள்ளார். இதன் பிறகு லதா மங்கேஷ்கர் சென்னை வந்த போதெல்லாம் அன்னை இல்லத்துக்கு சென்று அண்ணின் அன்புக் கட்டளையை ஏற்று அந்த பங்களா வீட்டிலேயே தங்குவதை வழக்கப்படுத்திக் கொண்டார்.

    இந்த பங்களா வீட்டை 2 மாதத்தில் சிவாஜி கட்டி இருக்கிறார். லதா மங்கேஷ்கர் அங்கு தங்கி இருந்த போதெல்லாம் சிவாஜியின் குடும்பத்தினருக்காக சமைக்கப்பட்ட உணவுகள் லதா மங்கேஷ்கருக்கும் பரிமாறப்பட்டுள்ளன.

    சிவாஜி கணேசனின் மகனான பிரபு திரை உலகில் நடித்துக் கொண்டிருந்தபோது, ‘‘தனது மகனுக்காக நீ ஒரு பாடல் பாட வேண்டும்’’ என சிவாஜி கணேசன் லதா மங்கேஷ்கரிடம் கேட்டுள்ளார். அதற்கு தயங்காமல் ‘‘கண்டிப்பாக நான் பாடுகிறேன் அண்ணா’’ என்று லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார். இதன்படி பிரபு நடிப்பில் வெளியான ‘ஆனந்த்’ திரைப்படத்தில் ‘‘ஆராரோ ஆராரோ.. நீ வேறோ நான் வேறோ’’ என்கிற பாடலை இளையராஜா இசையில் லதா மங்கேஷ்கர் பாடி உள்ளார். அப்போது பட்டிதொட்டி எங்கும் இந்த பாடல் ‘ஹிட்’ அடித்து இருந்தது. இப்போதும் இந்த பாடலை பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பாடலை பாடி முடித்த பிறகு அதற்காக லதா மங்கேஷ்கர் சம்பளம் வாங்கவில்லை.

    சிவாஜி கணேசன் - லதா மங்கேஷ்கர்

    ‘‘என் பிள்ளைக்காக நான் பாடி இருக்கிறேன். எனக்கு இந்த பாட்டுக்கு பணம் எதுவும் வேண்டாம்’’ என்று கூறி உள்ளார். இதனை கேட்டு சிவாஜி கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வைத்து இருந்த அளவு கடந்த பாசத்தை இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

    சிவாஜி கணேசனின் மரணத்துக்கு பிறகும் லதா மங்கேஷ்கர், அவரது குடும்பத்தினரோடு வாட்ஸ் அப்பில் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

    கடவுள்களின் புகைப்படங்களை சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினர்களின் செல்போன்களுக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இப்படி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரையில் கூட லதா மங்கேஷ்கரின் செல்போனில் இருந்து அன்பான வார்த்தைகளுடன் ஆண்டவனின் புகைப்படங்கள் வந்து விழுந்துள்ளன.
    இப்படி தனது கடைசி மூச்சு இருக்கும் வரையில் சிவாஜி கணேசனின் குடும்பத்தினரோடு நெருங்கிய தொடர்பில் இருந்து அவர்களுடன் அனுதினமும் பேசிக் கொண்டே இருந்துள்ளார் லதா மங்கேஷ்கர். ஒட்டுமொத்த திரை உலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ள அவரது மரணம், சிவாஜி கணேசன் குடும்பத்தினரையும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    சிவாஜி கணேசன்-லதா மங்கேஷ்கரின் அண்ணன்-தங்கை பாசப்பிணைப்பு காலத்தை கடந்தும் நம் அனைவரின் நெஞ்சங்களிலும் நிலைத்து இருக்கும் என்றால் அது மிகையாகாது.
    இசைக்கு மயங்காத இதயங்கள் எதுவுமே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அந்த இசை என்ற மாபெரும் உலகத்துக்கு, இனம், மதம், நாடு, மொழி என்ற எல்லைகள் எதுவுமே இல்லை.
    இளையராஜாவின் குரலை கேட்டதும் அந்த வெளிநாட்டு பெண் அசையாமல் அப்படியே நின்று விட்டார்.

    மகாபலிபுரத்தில் ஒரு மாலை நேரத்தில் நடந்த விஷயம் இது.

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி அவர். மகாபலிபுரம் சிற்பங்களை பார்த்து ரசித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்திருந்தார்.

    அந்த விடுதியில்தான் இளையராஜாவும் தங்கி இருந்தார்.

    ‘ரிஷிமூலம்‘ என்ற சிவாஜி படத்திற்கான பாடல் கம்போசிங் நடந்து கொண்டிருந்த நேரம். அதற்காகத்தான் அந்த மகாபலிபுரம் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்கள் படக்குழுவினர். மூன்று நாட்களாக இடைவிடாமல் இசை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. 

    ‘ரிஷிமூலம்‘ படத்தில் ஒரு பாடல்.

    “நேரமிது நேரமிது 
    நெஞ்சில் ஒரு பாட்டெழுத...”

    இந்தப் பாடலுக்கான மெட்டை இளையராஜா விதம்விதமாக பாடிக் காட்டினார். படக் குழுவினர் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

    மகாபலிபுரத்தின் மாலை நேரத்து ரம்மியமான சூழலில் இளையராஜாவின் குரல் வழக்கத்தைவிட இனிமையாக ஒலித்தது.
    இப்படி அவர் மெட்டுப் போட்டு பாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான், தற்செயலாக அந்த பிரான்ஸ் நாட்டு பெண், இளையராஜா குழுவினர் தங்கியிருந்த அறையை கடந்து சென்றார். 

    அப்போது மெல்லிய குரலில்  இளையராஜா பாடிக் கொண்டிருக்க...

    அந்தக் குரலைக் கேட்டதும் அந்தப் பெண் நடப்பதை நிறுத்திவிட்டு அசையாமல் அப்படியே நின்றார்.

    அறைக்குள்ளிருந்து இளையராஜாவின் குரல் தொடர்ந்து வர,  அறைக்கு வெளியே அந்தப் பெண் மகாபலிபுரம் சிலைபோல மணிக்கணக்காக நின்றுகொண்டிருந்தார்.

    வெகுநேரம் பாடிக்கொண்டிருந்த இளையராஜா, தன் குரலுக்கு சற்று ஓய்வு கொடுக்க...  அப்போதுதான் அந்தப் பெண் தன் சுயநினைவுக்கு வந்தார்.

    இந்த நேரத்தில் இளையராஜா தன் அறையிலிருந்து மெல்ல வெளியே எட்டிப் பார்த்தார். 

    யார் அந்த பெண் ? வெகு நேரமாக அந்த இடத்திலேயே அசையாமல் நிற்கிறாரே !

    அதே நேரம் அந்தப் பெண்ணும் இளையராஜா அறைக்கு அருகே மெல்ல வந்து, ‘நான் உள்ளே வரலாமா’ என சைகையிலேயே அனுமதி கேட்க, இளையராஜா உடன் இருந்தவர்கள் அவரை உள்ளே வரச் சொல்ல,

    அந்தப் பெண் மெல்ல மெல்ல அடியெடுத்து அறைக்குள் நுழைந்தார். அந்த அறையைச் சுற்றிலும் பார்த்தார். எல்லோரும் விரிப்பை விரித்து தரையில் அமர்ந்திருந்தார்கள்.

    ‘உட்காருங்கள்’ என இளையராஜா சொல்ல, அந்தப்பெண் இளையராஜாவுக்கு எதிரே பணிவோடு தரையில் அமர்ந்தார்.

    கண்களை இமைக்காமல்  இளையராஜா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    இளையராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேர மௌனத்துக்குப் பின் அந்த பிரான்ஸ் பெண் மெல்லிய குரலில் இளையராஜாவை நோக்கிக் கேட்டார்..

    “இப்போது நீங்கள் பாடிக் கொண்டிருந்தீர்களே. அந்த பாடலை இன்னும் ஒருமுறை எனக்காக பாட முடியுமா ?”

    “அதனாலென்ன, பாடுகிறேன்” என்று சொன்ன இளையராஜா மீண்டும் ஒருமுறை மெல்லிய குரலில் அந்த ‘நேரமிது’ பாடலை பாட ஆரம்பிக்க, எதிரில் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.

    பாட்டை முடித்துவிட்டார் இளையராஜா.

    ஆனால் அதன் பிறகும் கூட அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் வழிவது நிற்கவில்லை.

    இளையராஜாவும் மற்றவர்களும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

    இளையராஜா புரிந்துகொண்டார். இசை செய்யும் மாயங்கள் ஜாலங்கள்  அவருக்கு நன்றாகவே தெரியும்.

    ஜாதி இனம் மொழி எல்லாவற்றையும் கடந்தது இசை.  இப்போது, தான் பாடிய அந்த இசையின் ஏதோ ஒரு வடிவம் அந்தப் பெண்ணை கவர்ந்திருக்கிறது என்பதை இளையராஜா புரிந்துகொண்டார்.

    சிறுது நேரத்துக்கு பின் அந்த பெண் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னார்..

    “நீங்கள் பாடிய இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்.’’

    இளையராஜா மௌனமாக புன்னகைத்தார்.

    அந்தப் பெண் தொடர்ந்து கேட்டார். “எனக்காக நீங்கள் ஒன்று செய்ய முடியுமா ? எனக்கு பியானோ வாசிக்க தெரியும். அதில் நான் இசைப்பதற்காக, இப்போது நீங்கள் பாடினீர்களே, அந்த மியூசிக் நோட்ஸை எழுதி தர முடியுமா ?”

    எதுவும் சொல்லாமல் தன் முன்னால் இருந்த ஒரு பேப்பரை எடுத்து, தான் பாடிய பாடலுக்கான இசைக்குறிப்புகளை எழுதிக்கொடுத்தார் இளையராஜா.

    மிகுந்த மரியாதையோடு கை குவித்து வணங்கி வாங்கிக் கொண்டார் அந்தப் பெண்.

    மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க இளையராஜாவை வணங்கி விட்டு அந்தப் பெண் சொன்னார்.

    இளையராஜா

    “நான் புறப்படுகிறேன். இதற்கு முன்னால் எத்தனையோ முறை இந்தியாவுக்கு வந்து இருக்கிறேன். ஆனால் இந்த தடவை வந்ததை என் வாழ்நாளில் ஒருபோதும் நான் மறக்கவே மாட்டேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றி.”

    இளையராஜாவும் கை குவித்து வணங்கி வழி அனுப்பினார்.

    வாசல் வரை சென்ற அந்தப் பெண் திரும்பிப் பார்த்து சொன்னார்.. “ஒருவேளை உங்களை நான் சந்திப்பதற்கும், இந்த இசைக் குறிப்புகளை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காகவும்தான் இந்த முறை இந்தியாவுக்கு வந்தேனோ என்னவோ! போய் வருகிறேன்.”

    அந்தப் பெண் புறப்பட்டு போன பின்னரும் கூட, வெகுநேரம் அந்த அறையில் அமைதி நிலவியது.  ஆனால் அந்த மௌனத்தில் கூட ஏதோ ஒரு இசை கலந்திருந்தது.

    இசைக்கு மயங்காத இதயங்கள் எதுவுமே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அந்த இசை என்ற மாபெரும் உலகத்துக்கு, இனம், மதம், நாடு, மொழி என்ற எல்லைகள் எதுவுமே இல்லை. -ஜான்துரை ஆசிர் செல்லையா
    சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.
    "சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.

    புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள்.

    இவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், சொக்கலிங்கம் பிள்ளை தாசில்தாராக வேலை பார்த்ததால், ஊர் ஊராகப் போகவேண்டியிருந்தது.

    இந்நிலையில், கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலிïரில், 1906-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி புதுமைப்பித்தன் பிறந்தார்.

    புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதானபோது, தாயார் பர்வதம் அம்மாள் காலமானார்.

    அதன்பின், சொக்கலிங்கம் பிள்ளை மறுமணம் செய்து கொண்டார்.

    புதுமைப்பித்தன் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

    சொக்கலிங்கம் பிள்ளை 1918-ல் ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடியேறினார்.

    புதுமைப்பித்தன், திருநெல்வேலி யோவான் கல்லூரியிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் படித்து 1931-ல் "பி.ஏ'' தேறினார்.

    மகன் அரசாங்க உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொக்கலிங்கம் பிள்ளை விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    1931 ஜுலை மாதத்தில், புதுமைப்பித்தனுக்கும், திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா அதிகாரியாக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கமலாவுக்கும் திருமணம் நடந்தது.

    புதுமைப்பித்தன் நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். ஆனால் மகன் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக சொக்கலிங்கம் பிள்ளை நினைத்தார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறுகள்  ஏற்பட்டன.

    இந்தச் சமயத்தில், கே.சீனிவாசன் "மணிக்கொடி'' என்ற இலக்கியப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். டி.எஸ்.சொக்கலிங்கம், "வ.ரா'' ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

    "மணிக்கொடி''யில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதினார். மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் "காந்தி'', சங்கு சுப்பிரமணியத்தின் "சுதந்திரச் சங்கு'' ஆகிய பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசுரமாயின.

    புதுமைப்பித்தனின் சிறுகதைகள் புதிய கோணத்தில், தனித்தன்மையுடன் திகழ்வதை "வ.ரா''வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பாராட்டி, புதுமைப்பித்தனுக்குக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்கள்.

    புதுமைப்பித்தனுக்கு இருந்த இலக்கிய மோகம் அவரைச் சென்னைக்கு இழுத்துச் சென்றது. "மணிக்கொடி''யில் எழுதியதுடன், ராய.சொக்கலிங்கத்தின் "ஊழியன்'' பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணியையும் கவனித்தார். எனினும், அந்தப்பதவியில் அவர் அதிக காலம்

    நீடிக்கவில்லை."மணிக்கொடி''யில் எழுதி வந்த புதுமைப்பித்தன், பின்னர் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அழைப்பின் பேரில், "தினமணி'' நாளிதழின் துணை ஆசிரியர் பொறுப்பில் சேர்ந்தார்.

    "தினமணி'' ஆண்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு மலர்களைச் சிறந்த இலக்கியப் பெட்டகங்களாகப் புதுமைப்பித்தன் கொண்டு வந்தார். "நாசகாரக்கும்பல்'' போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள், "தினமணி'' ஆண்டு மலரில் வெளிவந்தவைதான்.

    1943-ல் டி.எஸ்.சொக்கலிங்கம் "தினமணி''யை விட்டு விலகி, "தினசரி''யைத் தொடங்கினார். புதுமைப்பித்தனும் "தினசரி''யில் சேர்ந்தார். பிறகு சொக்கலிங்கத்துடன் மனத்தாங்கல் ஏற்பட்டு, தினசரியை விட்டு விலகினார்.

    "தினமணி''யில் புதுமைப்பித்தனுடன் பணியாற்றிய சிலர் சினிமாத்துறையில் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். "இளங்கோவன்'' என்ற புனைப்பெயர் கொண்ட ம.க.தணிகாசலம், சினிமா வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறந்தார். "மணிக்கொடி'' ஆசிரியராக இருந்த பி.எஸ்.ராமையா சினிமா டைரக்டராக உயர்ந்திருந்தார். "மணிக்கொடி'' துணை ஆசிரியர் கி.ரா. (கி.ராமச்சந்திரன்) ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.

    எனவே சினிமா துறையில் நுழைய விரும்பினார், புதுமைப்பித்தன். "காமவல்லி'' என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அதற்குக் கணிசமான பணமும் கிடைத்தது.

    "அவ்வையார்'' படத்தைத் தயாரிக்க முதன் முதலாக ஜெமினி திட்டமிட்டபோது, கி.ரா.வும், புதுமைப்பித்தனும் சேர்ந்து வசனம் எழுதினார்கள். (பின்னர் கே.பி.சுந்தரம்பாள் நடிக்க, ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் புதுமைப்பித்தனின் வசனம் இடம் பெறவில்லை)

    1945-ம் ஆண்டைப் பொறுத்தவரை புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சொந்தத்தில் சினிமாப்படம் எடுக்கத் தீர்மானித்து, தன் தாயார் பெயரில் "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்'' என்ற படக் கம்பெனியையும் தொடங்கினார். குற்றாலக் குறவஞ்சி கதையை "வசந்தவல்லி'' என்ற பெயரில் படமாக்க வேண்டும் என்பது, அவரது திட்டம்.

    இதில், கதாநாயகனாக நாகர்கோவில் மகாதேவன் நடிப்பதாக இருந்தது. மகாதேவனை, சில நண்பர்கள் புதுமைப்பித்தனிடம் அழைத்து வந்தனர். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து முடிந்தது.

    "கதாநாயகனுக்கு அட்வான்ஸ் கொடுங்கள்'' என்று ஒருவர் கூற, புதுமைப்பித்தன் தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அட்வான்சாகக் கொடுத்தார்!

    அதன்பின், சில பத்திரிகைகளில் "வசந்தவல்லி'' பற்றி விளம்பரங்கள் வெளிவந்தன. படம் தயாரிக்கப்படவில்லை.

    அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி, சட்டத்துடன்

    2ஷி ஆண்டு காலம் போராடி, 1947 ஏப்ரலில் விடுதலையானார்.

    அவருடைய மகத்தான வெற்றிப்படங்களான "ஹரிதாஸ்'', "சிவகவி'', "அசோக்குமார்'', "அம்பிகாபதி'' முதலான படங்களுக்கு வசனம் எழுதியவர் இளங்கோவன். அவருடன் மனத்தாங்கல் கொண்டிருந்த பாகவதர், விடுதலைக்குப்பின் சொந்தமாகத் தயாரித்த ''ராஜமுக்தி'' படத்துக்கு வசனம் எழுத புதுமைப்பித்தனை அழைத்தார்.

    படப்பிடிப்பு முழுவதும், புனாவில் அகில இந்தியப் புகழ் பெற்ற பிரபாத் ஸ்டூடியோவில் நடந்தது. புனாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி வசனம் எழுதினார், புதுமைப்பித்தன்.

    வசனம் எழுதும் பணி முடிவடையும் தருணத்தில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

    காசநோய் காரணமாக, அவர் உடல் நிலை வரவர மோசம் அடைந்தது. 1948 மே மாதம் முதல் வாரத்தில் மனைவி கமலா தங்கியிருந்த திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தார். நடக்க முடியாமல் கம்பு ஊன்றி நடக்க வேண்டிய அளவுக்கு, அவர் உடல்நிலை மோசமடைந்திருந்தது.

    "ராஜமுக்தி''க்கு வசனம் எழுதியதில் ஓரளவு பணம் கிடைத்திருந்த போதிலும், முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த காரணத்தாலும், தந்தையுடன் சுமுக உறவு இல்லாததாலும், புதுமைப்பித்தன் இறுதிக்காலத்தில் வறுமையுடன் போராட வேண்டியிருந்தது.

    மனைவி கமலாவையும், ஒரே மகள் தினகரியையும், தமிழ்  இலக்கிய உலகையும் தவிக்க விட்டு, 30-6-1948 அன்று புதுமைப்பித்தன் காலமானார்.

    புதுமைப்பித்தன் வரலாற்றில் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி:

    தமிழ் இலக்கியத்துக்கு இணையற்ற சேவை செய்த புதுமைப்பித்தன் வறுமையுடன் போராடி தமது 42-வது வயதில் காலமானார். இதற்கு 20 ஆண்டுகளுக்குப்பின், தமிழக அரசு லாட்டரியில் அவர் மனைவி கமலாவுக்கு ரூ.2 லட்சம் பரிசு கிடைத்தது.

    அந்த சமயத்தில், புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரிக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. "மகள் திருமணத்துக்கு, தந்தை கொடுத்த சீதனமாக இந்த பணத்தைக் கருதுகிறேன்'' என்றார், கமலா விருதாசலம்.

    தினகரி திருமணம் சிறப்பாக நடந்தது. கணவர் பெயர் சொக்கலிங்கம். இவர் என்ஜினீயர்.

    புதுமைப்பித்தன் நூல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

    புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
    சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.
    சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.

    "மனோரஞ்சிதம்'' திரைப்படம் வெளிவராமல் போனதால் மணிசேகரன் மனம் வருந்தினார் என்றாலும், சினிமா மோகம் அவரை  விடவில்லை.

    கீதையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய "யாகசாலை'' என்ற நாவலை சொந்தமாக படமாக்க எண்ணினார். 1,200 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் இது.

    "இலக்கிய உலகில் பேரும் புகழுமாக இருக்கிறீர்கள். சினிமா நமக்குத் தேவையா?'' என்று மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லை.

    வேகமாக வசனங்களை எழுதி முடித்தார்.

    இவருடைய நாவல்களில் மனதைப் பறிகொடுத்து, இவருக்கு நண்பரானவர் ஜெமினிகணேசன். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுக்கத் தீர்மானித்தார்.

    இதன்பின் நடந்தது பற்றி மணிசேகரன் கூறியதாவது:-

    "யாகசாலை நாவலைப் படித்துப் பாராட்டியவர், எம்.ஜி.ஆர். நான் அந்த நாவலைப் படமாக்கப்போகிறேன் என்பதை அறிந்து `இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று கூறினார்.

    நான் கேட்கவில்லை. அதாவது, என் விதி, அவர் அறிவுரையைக் கேட்க மறுத்து விட்டது!

    படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தன.

    இந்தப் படத்தின் கதாநாயகி, நல்ல குடும்பத்தில் பிறந்து, விதி வசத்தால் கற்பை இழக்க, பிறகு அதுவே தொழிலாய் போய்விட, கடைசியில் நோய்வாய்படுகிறாள்.

    இந்தக் காலக்கட்டத்தில் "சிவப்பு ரோஜாக்கள்'' படத்தில் அறிமுகமாகியிருந்த வடிவுக்கரசிக்கு, கதாநாயகி வேடம் கொடுத்தேன்.

    படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், கீதையில் வரும் கண்ணன் பாத்திரத்துக்கு ஒப்பானவர். அந்தக் கண்ணன் தேர் ஓட்டினான். இந்த கண்ணன் குதிரை ஓட்டுபவன். இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் அமையவில்லை. பலபேரை பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை.

    இன்று திரை உலகிலும், அரசியலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜயகாந்த், அப்போதுதான் திரைப்பட உலகுக்கு வந்திருந்தார். அவரை என்னுடைய `கண்ணன்' கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில், விதி விளையாடியது.

    என் கையில் போதிய பணம் இல்லை. படப்பிடிப்புக்கு செல்ல, மேலும் ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது ஒரு புதுமுக நடிகர் என்னிடம் வந்தார். நல்ல கதாபாத்திரம் கொடுத்தால் ரூ.30 ஆயிரம் `பைனான்ஸ்' செய்வதாகக் கூறினார். இதனால் நான் விஜயகாந்தை இழக்க நேரிட்டது. அன்று நான் அவரை பயன்படுத்தி இருந்தால், ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தவனாக இருந்திருப்பேன். விதியின் சதியால், அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிற்று.

    படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் வெளிப்புறக் காட்சிகளை எடுக்கத் தீர்மானித்தேன். மதராந்தகத்தின் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன், கே.நட்ராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர்.

    மேற்கொண்டு, ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபோது, மீண்டும் பணமுடை ஏற்பட்டது. அப்போது, இப்ராகிம் என்ற தயாரிப்பாளர் என்னை நாடி வந்தார். என்னுடைய "அகிலா'' என்ற நாவல், நடிகை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அவர் சொல்லி, அக்கதையை என்னுடைய இயக்கத்தில் படமாக்க விரும்பி, இப்ராகிம் வந்திருந்தார்.

    வெளிப்படங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதை அவரிடம் தெரிவித்து, "வேண்டுமானால் கதையை வாங்கிக் கொண்டு, நீங்களே தயாரியுங்கள். கூடுதலோ, குறைவோ, ஒரு தொகையை தவணை முறையில் கொடுக்காமல் மொத்தமாக கொடுத்துவிடவேண்டும்'' என்று தெரிவித்தேன்.

    அதன்படி அவர்கள் ஒரே `செக்' கொடுத்தார்கள். அந்தத் தொகை, "யாகசாலை'' படத்தை தொடர்ந்து உருவாக்க உதவியது.

    யாகசாலை தயாராகிக் கொண்டிருந்தபோதே, "அகிலா'' கதை "மீண்டும் பல்லவி'' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. `கதை: கோவி.மணிசேகரன்' என்று டைட்டிலில் போட்டார்கள்.

    "யாகசாலை'' 95 சதவீதம் முடிந்து விட்டது. ஜெமினிகணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் பாக்கி. இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பாத்திரத்தில் பூரணம் விஸ்வநாதனை நடிக்க வைத்தேன். அவரும் நன்றாக நடித்தார்.

    படம் ரிலீஸ் தேதியை நெருங்கியபோது, ஒரு கடன்காரர் வந்து மென்னியைப் பிடித்தார். படத்தை, "அவுட்ரைட்'' முறையில் நான் விற்று விட்டதால், படம் வெளியான பின்னர் பணம் வராது என்று அவர் நினைத்து விட்டார் போலும்!

    வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த நிலத்தை விற்று, கடனை அடைத்தேன்.

    "யாகசாலை'' ரிலீஸ் ஆகியது. நான்கே நாளில் ரிசல்ட் தெரிந்து விட்டது. படம் "அவுட்!'' சென்னை எமரால்டு தியேட்டரில் மட்டும் நான்கு வாரம் ஓடியது.

    அன்றே சினிமாவுக்கு தலைமுழுகத் தீர்மானித்தேன். ஒரு சனிக்கிழமையன்று, எண்ணை வாங்கி வரச்செய்து, தலைமுழுகினேன்!

    என்னிடம் புகழ்வாய்ந்த - உறுதியான பேனா இருந்ததால், என் வாழ்க்கை தப்பியது. இல்லையென்றால், `நடுத்தெரு நாராயணன்' ஆகியிருப்பேன். நான் வணங்கும் சக்தி என்னைக் காப்பாற்றினாள்.

    தொடர்ந்து இலக்கியப்பணிகளில் ஈடுபட்டேன்.

    சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து நான் தயாரித்த "ஊஞ்சல் ஊர்வலம்'' என்ற தொடர், பெரிய வெற்றி பெற்றது.

    அதன் பிறகு திரிசூலி, அக்னிப் பரீட்சை முதலான தொடர்களும் வெற்றி பெற்றன.

    பெரிய திரையில் வெற்றி பெறாமல் போன நான், சின்னத்திரையில் வெற்றி கண்டேன்.

    சினிமாவில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் கவனம் செலுத்தியதால், 3,571 பாடல்கள் கொண்ட "கோவி.ராமாயண''த்தை என்னால் எழுத முடிந்தது.

    நான் விதி பற்றி பல முறை குறிப்பிட்டேன். நமக்கு நல்ல வாய்ப்பு வரும்போது, விதி குறுக்கிட்டு கெடுத்து விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்.

    இந்நாளைய இணையற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1973-ல் சினிமா உலகில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த சிவாஜிராவ். நான் பாலசந்தரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, சினிமா தயாரிக்கலாம் என்று இருந்த நேரம்.

    ரஜினியுடன் நடிப்பு பயின்ற கோபால் என்ற நண்பர், ரஜினிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார். படம் தொடங்கும்போது நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று கூறினேன்.

    ரஜினி என் வீட்டுக்கு வருவார். சிகரெட் வித்தைகளை பிள்ளைகளிடம் காட்டி மகிழ்விப்பார்.

    இதற்கிடையே ரஜினி, "அபூர்வராகங்கள்'' படத்தில் அறிமுகம் ஆகிவிட்டார். ஏராளமான படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.

    "தென்னங்கீற்று'' படம் ஆரம்பம் ஆனதும், ரஜினியிடம் பேசினேன். "குரு! இருபது நாட்களுக்கு என்னை விட்டு விடுங்கள். அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் வந்து உங்கள் மனதைக் குளிரச் செய்கிறேன்'' என்றார்.

    ஆனால், படத் தயாரிப்பாளரோ இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே, மற்ற நடிகர் - நடிகைகளிடம் பெற்ற `கால்ஷீட்'படி உடனே படத்தைத் தொடங்க வேண்டும் என்றார். இதனால் என் படத்தில் ரஜினி இடம் பெறவில்லை. இதை விதி என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்வது?

    சினிமா உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞர்களும், இளம் நங்கையர்களும் ஏராளம். அவர்களுக்கு ஒன்று

    சொல்வேன்:`சினிமா என்பது பல ரசவாத வித்தைக் தெரிந்த ஒரு அழகான மாயமோகினி. அந்த மோகினியிடம் சென்றால், மீள்வது அரிது. அந்த மோகினியின் வித்தையில் பாதியேனும் தெரிந்தவர்கள் தப்பித்து திரும்பி வரலாம்; அல்லது மோகினியை அடிமைப்படுத்தி, அவளைக் காதலிக்கச் செய்யலாம். அந்த வித்தை தெரியாதவர்கள் நுழைந்து விட்டால், அந்த மோகினி நம் ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாகத்தான்

    துப்புவாள்!''இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

    மணிசேகரன் - சரசுவதி தம்பதிகளுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்ற மூன்று மகன்கள். பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்று ஐந்து மகள்கள்.

    மூத்த மகன் அம்பிகாபதி, இளம் வயதில் காலமாகிவிட்டார். மற்ற 7 பேரும் படித்து, பட்டம் பெற்றவர்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது
    முதல்வன் படப்பிடிப்பின்போது, திடீரென்று கலவரம் மூண்டது. சரமசப் பேச்சு நடத்தி வெற்றி கண்டார், விஜயகுமார்.
    டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ. முதல் படத்தில் நடித்ததில் இருந்தே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகுமாருக்குமான நட்பு நீடித்து வருகிறது.

    எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில், விஜயகுமாரால் மறக்க முடியாத படம் "செந்தூரப்பாண்டி.'' இந்தப்படத்தில் விஜயகாந்த் அண்ணனாகவும், விஜய் தம்பியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களின் அப்பாவாக விஜயகுமார் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் விஜயகாந்த் -விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைத்தார்.

    எஸ்.ஏ. சந்திரசேகரின் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-

    "டைரக்டர் வி.சி.குகநாதனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் நடிப்பு ஆர்வமும் இருந்தது. அதனால் குகநாதன் இயக்கிய "ஒளிமயமான எதிர்காலம்'' படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் நடித்தார். 

    டைரக்டராக வேண்டும் என்று முடிவு செய்தபோது, முதல் படத்தை சொந்தமாகவே தயாரித்து இயக்கினார். இதற்காக என்னை சந்தித்தவர், "அவள் ஒரு பச்சைக்குழந்தை'' என்றொரு படம் இயக்கி தயாரிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று கேட்டார்.

    புது இயக்குனர்களை ஊக்குவிப்பது என்பது எப்போதுமே என் இயல்பாக இருந்தது. எனவே, `நிச்சயம் நடிக்கிறேன்' என்றேன். எனக்கு ஜோடியாக பவானி என்றொரு புதுமுகம் நடித்தார்.

    முதல் படத்தையே சரியான பட்ஜெட் போட்டு அந்த பட்ஜெட்டுக்குள் முடித்தார், எஸ்.ஏ.சந்திரசேகர். படம் ரிலீசானபோது டைரக்டராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார்.

    தொடர்ந்து விஜயகாந்தை வைத்து சில படங்களை இயக்கியவர், மகன் விஜய்யை "நாளைய தீர்ப்பு'' என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார், தொடர்ந்து ரசிகன், தேவா என்று விஜய்க்கு ஏற்ற கதையை உருவாக்கி தயாரித்து இயக்கினார்.

    அவர் இயக்கிய "செந்தூரப்பாண்டி'' படத்தில் விஜயகாந்த் அண்ணன். விஜய் தம்பி. அவர்களின் அப்பாவாக நான் நடித்தேன். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் பிணமாக நடித்த அனுபவம் மறக்க முடியாது. செத்துப்போகிற மாதிரி நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், கண்களை திறந்தபடி உயிர் விட்டது போல் நடித்தேன்.

    சிலருக்கு உயிர் பிரியும்போது, கண் திறந்தபடி இருக்கும். அதை மனதில் வைத்து, கண்ணை திறந்தபடி உயிர் போனதாக அந்த கேரக்டரில் நடித்தேன். ஆனால்  அந்தக் காட்சியில் அடுத்தடுத்து நடக்கப்போகிற விஷயங்கள் எனக்குத் தெரியாது. பிணத்துக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டினார்கள். எண்ணைப் பிசுக்கு போக, அரப்பு போட்டு குளிக்க வைத்தார்கள். கண்ணை திறந்தபடி இருந்ததால் கண்ணில் எண்ணையும் அரப்புமாக விழுந்து, மகா எரிச்சல். என்றாலும் கேரக்டருக்காக தாங்கிக் கொண்டேன்.

    இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில்தான் ரசிகர்களை சமாளிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

    சென்னை டெலிவிஷன் நிலையத்துக்கு அருகில் உள்ள அண்ணா அரங்கில் விழா நடந்தது. விஜயகாந்த், விஜய் என படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.

    விழாவில் விஜய் பேச ஆரம்பித்தபோது, ரசிகர்கள் பக்கமிருந்து பலத்த கூக்குரல்கள். விஜய் பேச்சை தொடர முடியவில்லை. விழாவுக்கு வந்திருந்த இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் கூச்சல் போட தொடங்கினார்கள். இதை அப்படியே விட்டால் விபரீதமாகி விடும் என்று தெரிந்து, உடனே நான் எழுந்து `மைக்'கை பிடித்தேன். "முதலில் பேச விடுங்கள்.

    ஒரு ஹீரோ பேசும்போது உங்களிடம் இருந்து உற்சாகமான கரகோஷம்தான் வரவேண்டும். அதற்குப்பதிலாக கூச்சல் போடுவது நாகரீகமல்ல. நீங்கள் உங்கள் அபிமான ஹீரோவை ஆதரிக்கும் விதத்தில் இவரை எதிர்ப்பதாகவே இது தெரியும். விஜயகாந்த் சார் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார். நீங்கள் விஜய் பேசும்போது எழுப்பும் கூக்குரல், விஜயகாந்த் சாரை கஷ்டப்படுத்துவதாக அமையும். கலைஞர்களுக்குள்ளான ஒற்றுமையை உங்களைப்போன்ற ரசிகர்களின் செயல் மாறுபடுத்தி விடக்கூடாது என்று பேசினேன்.

    ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு அமைதி என்றால் அமைதி. அப்படி ஒரு அமைதி. முழு விழாவும் உற்சாகமாய் நடந்து முடிந்தது. விழா முடிவில் நடிகர் விஜயகாந்தும், விஜய்யின் அப்பா சந்திரசேகரும் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், இதே மாதிரியான ஒரு சம்பவம் ஷங்கர் இயக்கிய "முதல்வன்'' படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் நடந்திருப்பதாக தெரிவித்தார்.

    அதுபற்றி அவர் கூறியதாவது:-

    "டைரக்டர் ஷங்கர் பிரமாண்டத்துக்கு பெயர் போனவர். அவரது இயக்கத்தில் "முதல்வன்'' என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்.

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு குற்றாலம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நடந்தது. அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால் சுற்றுவட்டார கிராமமே கிளம்பி வந்திருந்தது. இந்த அதிகபட்ச கூட்டம் படப்பிடிப்புக்கு இடைïறாக இருக்கக்கூடாது என்பதற்காக போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். 

    ஆனால், திரண்டிருந்த கூட்டம் போலீசுக்கு கட்டுப்படுவதாக இல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை. இதில் சிதறி ஓடிய கூட்டத்தில் கீழே விழுந்த ஒருவரின் கை உடைந்து விட்டது. இந்த விஷயம் `காட்டுத்தீ' போல் பரவி, பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆவேசமாக திரண்டு வந்துவிட்டார்கள்.

    ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக மாலை 5 மணிக்கு டைரக்டர் ஷங்கர் சென்னைக்கு கிளம்பி விட்டார். அன்றைய காட்சியுடன் அவுட்டோர் படப்பிடிப்பு முடிவடைவதால் எடுக்கவேண்டிய மீதிக்காட்சிகளை தனது அசோசியேட் டைரக்டர் மாதேஷிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார்.

    இந்த நேரத்தில்தான் அடிதடி, கை முறிவு என பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விட்டது. கூட்டத்தில் இருந்த 4 பேர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசி, "எங்களுக்கு நஷ்டஈடு தராவிட்டால் கேமராவை பிடுங்குவோம். படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம்'' என்று வரிந்து கட்டுகிறார்கள்.

    இந்த மாதிரி இடங்களில் நாமும் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லப்போனால் நிலைமை இன்னும் விபரீதமாகி விடும். அதனால் நான் முன்வந்து அந்த 4 பேரிடமும் பேசினேன். "அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை, நஷ்டஈடு எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்றேன். மொத்தக் கூட்டமும் என் வார்த்தையை நம்பி அமைதியானது.

    ஆனால் இந்த நால்வர் அணி மட்டும் நான் சொன்னதை கேட்பதாக தெரியவில்லை. இதனால் "வாங்க! பேசலாம்'' என்று சொல்லி அந்த 4 பேரையும் நாங்கள் படப்பிடிப்புக்காக தயார் செய்திருந்த `டெண்ட்'டுக்கு அழைத்து வந்தேன். அதே நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனை அழைத்து, "நான் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் சண்டைக்காட்சியை எடுத்து முடித்து விடுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.

    மறுபடி படப்பிடிப்பு தொடங்கியது. கும்பலாக நின்ற பொதுமக்களுக்கு தெரியும். 4 பேரிடமும் நான் தனியாக பேசிக்கொண்டிருந்ததால், அவர்கள் அனுமதித்தே படப்பிடிப்பு நடப்பதாக எண்ணி அமைதியாக இருந்தார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் நால்வர் அணியிடம் நான் நடந்த சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பேசி முடித்தேன். கடைசியில் `நஷ்டஈட்டுக்கு நானாச்சு' என்பதை ஏற்று கலைந்து சென்றார்கள்.

    எல்லாம் முடிந்து சென்னை வந்தபோது டைரக்டர் ஷங்கர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். "சார்! நான் அங்கில்லாத அன்றைய சூழலில் பிரச்சினையை மிக அருமையாக கையாண்டு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உதவியிருக்கிறீர்கள். உங்களைப் பற்றி மாதேஷ் ரொம்பவே பெருமையாக என்னிடம் சொன்னார்'' என்று சொல்லி நன்றியும் தெரிவித்துக் கொண்டார். 

    பதிலுக்கு நான் ஷங்கரிடம், "நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தானே. அதனால்தான் அந்த மக்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது'' என்றேன்.

    ஒரு நடிகரை எப்படி கணிக்கிறார் என்பது சுரேஷ் கிருஷ்ணா விஷயத்தில் ஆச்சரியமாக இருக்கும். இவரது இயக்கத்தில் "பாட்ஷா'', "சங்கமம்'', "ஆஹா'' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். `ஆஹா' படத்தில் ஒரு காட்சியை என் மீது நம்பிக்கை வைத்து ஒரே ஷாட்டில் எடுத்தார். இதற்கென ஆயிரம் அடி பிலிமை பயன்படுத்தினார்.

    மகள் திருமணத்தின்போது மூத்த மகன் இறந்து விட்டதாக இளைய மகன் என்னிடம் சொல்கிற அந்த காட்சி, படத்துக்கே மகுடமாக அமைந்தது. இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தபோது, தெலுங்கிலும் என்னை அதே கேரக்டரில் நடிக்க வைத்தார்.

    அர்ஜூனை நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். அவர் சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கதாசிரியர், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டரும்கூட. தமிழ்ப் படங்களில் வசனங்களை எப்படிச் சொன்னால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அவர் சொல்லித் தருவது தனியழகு. இந்த இடத்தில் இந்த டயலாக்குக்கு ரசிகர்களின் கரகோஷம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லி விடுவார். அவர் சொன்ன அதே காட்சிக்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள்.

    டைரக்டராக ஆசைப்பட்டு நடிகரானவர் பார்த்திபன். நடிப்பிலும், டைரக்ஷனிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு காட்சியை இவர் படமாக்குவதை பார்த்தாலே இவரது திறமையை தெரிந்து கொண்டுவிடமுடியும்.

    இளைய தலைமுறையில் என்னைப் பெரிதும் கவர்ந்த இன்னொருவர் லிங்குசாமி. இவர் அறிமுகமான "ஆனந்தம்'' படத்தில் எனக்கு சின்ன கேரக்டர். ஆனாலும் படத்தில் அதையும் பேசப்படும் கேரக்டராக உருவாக்கியிருந்தார். காட்சிகள் இயற்கையாக வரவேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெடுவார். இவர் இயக்கிய `ஜி' படத்திலும், தயாரித்த `தீபாவளி' படத்திலும்கூட எனக்கு நல்ல கேரக்டர். தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு உன்னத இடம் இருக்கிறது.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    மனோரஞ்சிதம் படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது. மனோரஞ்சிதம் படப்பிடிப்பின் போது எஸ்.வி.சுப்பையா கோபம்
    "மனோரஞ்சிதம்'' படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.

    அதுபற்றி கோவி.மணிசேகரன் கூறியதாவது:-

    "மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.

    ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!

    எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.

    4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்!

    "ரத்தக்கண்ணீர்'' படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!

    10 முறை படம் எடுத்தும் காட்சி "ஓகே'' ஆகவில்லை.

    நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். "ஒன் மோர் டேக்'' என்றேன்.

    சுப்பையாவோ, "சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே'' என்றார்.

    நான் விடவில்லை. "அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!'' என்றேன்.

    ஆனால் சுப்பையா, தன் "விக்''கை கழற்றி எறிந்தார். "பிரேக்'' என்று கூறிவிட்டார்.

    படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் "பிரேக்'' என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.

    "மிஸ்டர் சுப்பையா! `பிரேக்' சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!'' என்றேன்.

    சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு

    நடைபெறவில்லை.சிவாஜிகணேசன் தீர்ப்பு

    நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.

    அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.

    இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.

    பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, "நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்' என்று நீங்கள் சொன்னது தவறு'' என்றார்.

    ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.

    "வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்'' என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

    நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.

    அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, "சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!'' என்றார்.

    சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.

    சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

    படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.

    மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.

    சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.

    மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.

    அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.

    நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். "முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?'' என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.

    மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை

    சுற்றியது."கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது'' என்று கிருஷ்ணன் - பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.

    பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்?

    சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

    மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!''

    இவ்வாறு மணிசேகரன் கூறினார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.

    "சினிமாவில் ஹீரோவாக, இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்'' என்று அப்பா விடம் கூறிவிட்டு சென்னைக்கு வந்த விஜயகுமார், தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார். 6 வருட இடைவெளியில் எஸ்.வி.எஸ்.குழுவினர் நாடகங்கள்நடத்துவது குறைந்து விட்டதால், நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.

    நாடகம் இல்லாத நாட் களில் மறுபடியும் சினிமா வாய்ப்புக்கு முயலுவார்.போகிற கம்பெனிகளில் எல்லாமே சொல்லி வைத்தது போல் `பார்க்கலாம்'என்பதே பதிலாக இருந்தது.

    இப்படியே 11 மாதம் ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஊருக்குப் போகவேண்டியதுதான். இதனால் கடைசி ஒரு மாதத்தில் வாய்ப்பு தேடும் முயற்சியை தீவிரமாக்கினார்.

    அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-

    "சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் சிவாஜி சார் நடித்த படத்தை மேட்னி ஷோ பார்க்கச் சென்றிருந்தேன். படம் முடிந்ததும், அறைக்குத் திரும்புவதற்காக சாந்தி தியேட்டரை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மாலை 6 மணி இருக்கும்.

    திடீரென என்னையே கூர்மையாக பார்த்தபடி வந்த ஒருவர், "தம்பி, எங்கே இருக்கிறீங்க?'' என்று கேட்டார்.

    சினிமாவுக்கு கதை எழுதும் கதாசிரியர் பாலமுருகன்தான் அவர். ஏற்கனவே வாய்ப்பு கேட்டுப் போனதில் அவரிடமும் நான் அறிமுக மாகியிருந்தேன். ரொம்பவும் அக்கறையாக என்னை விசாரிப்பார். என் முயற்சி நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்று மனதுக்குள் தன்னம் பிக்கை

    விதைப்பார்.அப்படிப்பட்டவர் என்னிடம் வந்து விசாரித்ததும் என் மனதிலும் கொஞ்சம் சந்தோஷம். "நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதோடுசினிமா வாய்ப் புக்கும் முயன்று கொண்டிருக் கிறேன்'' என்றேன்.

    அவர் உடனே ரொம்பவே உரிமையுடன் "ஏன் தம்பி என்னை வந்து பார்க் காமல் இருந்தீர்கள்? டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், "தம்பி! நாளைக்கு காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் இருக்கும் மாதவன் சார் கம்பெனிக்கு வந்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார். முகவரியையும் கொடுத்தார்.

    பாலமுருகன் சொன்னபடி மறுநாள் காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை ஆபீசுக்கு போனேன். அங்கே டைரக்டர் பி.மாதவன், கேமராமேன் பி.என்.சுந்தரம் ஆகியோர் இருந்தார்கள்.

    நான் போயிருந்த நேரத்தில் கதாசிரியர் பாலமுருகனும் வந்துவிட்டார். நேராக என்னை டைரக்டர் பி.மாதவனிடம் அழைத்துச் சென்று, "சார்! நம்ம கதைக்கு 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோவுக்கு இவர் சரியா இருப்பார். சிவகுமார்னு பேரு'' என்றார்.

    டைரக்டர் பி.மாதவன் என்னை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை அழைத்தவர்,  "ஒரு டெஸ்ட் எடுத்திடுங்க'' என்றார்.

    மறுநாளே டெஸ்ட்! ஏவி.எம். 6-வது மாடிக்கு வரச்சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். முடிவு டைரக்டர் பி.மாதவனுக்கு திருப்தியாக இருந்ததால், "தம்பி! வசனம் பேசிக் காட்டுங்க'' என்றார். பேசிக்காட்டினேன்.

    பிறகு, "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் சிவாஜி சார் நடிக்கும்போது பயன் படுத்திய உடைகளை எனக்கு தந்து நடிக்கச் சொன்

    னார்கள்.நான் நடிக்கும்போது, அதை படமாக்கினார்கள்.

    அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் பி.மாதவன், "தம்பி! நம்ம படத்தில் நீங்க நடிக்கிறீங்க'' என்றார்.

    "கந்தன் கருணை'' படத்தில் முருகன்வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ, அதே சிவகுமாரும் நானும் இந்தப் படத்தில் இரட்டை நாயகர்கள். அந்தப்படம்தான் "பொண்ணுக்கு தங்க மனசு.''

    "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சார் சாதாரண கிராமத்து இளைஞன் ராமனாக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. நடிகராகும்போது அவருக்கு பெயர் விஜயகுமார். அதனால் அதுவரை சிவகுமாராக இருந்த எனக்கு `விஜயகுமார்' என்ற பெயரை சூட்டினார், டைரக்டர் பி.மாதவன்.

    பஞ்சாட்சரம், சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.

    நடிகர் விஜயகுமாருக்கு ஒரே ஆண் வாரிசு அருண்குமார். சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அதனால் "எம்.பி.ஏ.'' படிக்க அமெரிக்காவுக்கு போக இருந்த திட்டத்தை கைவிட்டு, முழுநேர நடிகராகி விட்டார், அருண்குமார்.

    மகன் அருண்குமார் சினிமாவுக்கு வந்தது பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அருண்குமார் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருந்தார். அவரது பள்ளி வாழ்க்கையே, பல பள்ளிகளில் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நாடு விட்டு நாடும் தொடர்ந்தது.

    ஆரம்பப் படிப்பு சென்னை டான்போஸ்கோவில் தொடங்கியது. அதன் பிறகு `சோ'வின் சகோதரர் நடத்தி வரும் "லா சாட்டலின்'' பள்ளி. அதன் பின்னர் அமெரிக்காவில்

    2 வருடம் என உலகம் சுற்றியது. நான் நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் 2 வருடம் ரெஸ்டாரெண்ட் நடத்திய நேரத்தில், அருண் 2 வருடமும் அமெரிக்காவில் படித்தார். அதன் பிறகு சென்னை வந்தபோது மறுபடியும் `லா சாட்டலின்' பள்ளியில் படிப்பு.

    அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்குத்தான் பெற்றோர்களின் டிரான்ஸ்பரை பொறுத்து, இப்படி ஊர்ஊராய் பள்ளிகளில் மாறி மாறி படிக்க வேண்டியிருக்கும். அருணுக்கும் இந்த மாதிரியான அனுபவம் கிடைத்தது.

    பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு கூட, அருணுக்குள் சினிமா ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. அந்த வாய்ப்பை தேடி வந்து ஏற்படுத்திக் கொடுத்தவர் தயாரிப்பாளர் `அன்பாலயா' பிரபாகரன்.

    அருண் "பி.காம்.'' இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர்ந்த நேரத்தில் `அன்பாலயா' பிரபாகரன், என்னை வந்து சந்தித்தார். அவரது படத்தில் நான் நடிப்பது தொடர்பாகத்தான் பேச வந்திருக்கிறார் என்று எண்ணினேன். அவரோ வந்ததும் வராததுமாக, "ஒரு நல்ல லவ் ஸ்டோரி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உங்க மகன் அருணை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.

    எனக்கு அதிர்ச்சி. சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் எந்த எண்ணமும் இல்லாத மகனுக்குள் வலுக்கட்டாயமாக சினிமாவை திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் அவரிடம், "பையன் பி.காம். முடித்து விட்டு, அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க இருக்கிறான். அதனால் சினிமா வேண்டாமே'' என்று தவிர்க்கப்பார்த்தேன்.

    ஆனால் நடந்ததை தனது அம்மா மூலம் தெரிந்து கொண்ட அருண், "நான் நடிக்கிறேன். தயாரிப்பாளர் கிட்ட `சரி'ன்னு சொல்லும்படி அப்பாகிட்ட சொல்லுங்க'' என்று கூறியிருக்கிறார்.

    மகனின் விருப்பம் அதுவென தெரிந்த பிறகு தடைபோட விரும்பவில்லை. அதோடு லவ் ஸ்டோரி, ஏ.ஆர்.ரகுமான் இசை என்று தயாரிப்பாளர் பிரமாண்டம் காட்டி விட்டுப் போவதால், "சரி; நடிக்கட்டும்'' என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் படத் தயாரிப்பு தாமதித்துக் கொண்டே போனது. தயாரிப்பாளரைக் கேட்டால், "ஏ.ஆர்.ரகுமான் 3 பாட்டுக்கு டிïன் தந்துவிட்டார். இன்னும் 2 பாட்டுக்கு டிïன் தந்து விட்டால் படத்தை முழு வீச்சில் தொடங்கி முடிக்க ஏதுவாக இருக்கும்'' என்று சொன்னார்.

    எனக்கு நம்பிக்கை குறைந்தது. அவசரப்பட்டு சரி சொல்லிவிட்டோமோ என்று கூட நினைத்தேன்.

    இந்த நிலையில் திடுமென ஒரு நாள் வந்து நின்றார், தயாரிப்பாளர். ரகுமான் இசை தாமதமாவதால் வேறு ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன். சுந்தர் சி. இயக்குகிறார். படத்துக்கு "முறை மாப்பிள்ளை'' என்று பெயர் வைத்திருக்கிறேன். முதலில் அருண் இந்தப் படத்தில் நடிக்கட்டும். அடுத்து ரகுமான் பாட்டை முடித்துக் கொடுத்ததும் `லவ் ஸ்டோரி' எடுக்கலாம்'' என்றார்.

    சரி! நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சினிமாவுக்குள் அருண் காலெடுத்து வைத்தாயிற்று. இனி பின்வாங்கினால் சரியாக இருக்காது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்றபடி "முறை மாப்பிள்ளை'' படத்துக்கு அருணை ஹீரோவாக்க சம்மதித்தேன்.

    படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் நடந்தது. நண்பர் ரஜினி வந்து அருணுக்கு பொட்டு வைத்து வாழ்த்தி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "என் இனிய நண்பர் விஜயகுமாரின் மகன் அருண் சினிமாவுக்கு வருவதை வாழ்த்துகிறேன். அவர் நல்லா வரவேண்டும். நல்லா வருவார்'' என்று வாழ்த்தினார்.

    அவர் வாழ்த்து பலித்தது. "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் அருண் நிலையான ஹீரோ ஆனார். தொடர்ந்து "பிரியம்'', "காத்திருந்த காதல்'', "கங்கா கவுரி'', "துள்ளித்திரிந்த காலம்'', "கண்ணால் பேசவா'', "அன்புடன்'', "பாண்டவர் பூமி'', "முத்தம்'', "இயற்கை'', "ஜனனம்'', "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'' என தொடர்ந்து இப்போது ரிலீசான "தவம்'' வரை நடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இப்போதும் "வேதா'', "துணிச்சல்'' என திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களும் உண்டு.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், நடிகர் அர்ஜ×ன், அருணை வைத்து தயாரித்த "தவம்'' படம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து
    கொண்டார்.

    "அர்ஜ×ன் சார் என்னிடம் அடிக்கடி அருண் பற்றி கேட்பார். "நன்றாக நடிக்கவும் செய்கிறார். `பைட்'டும் சூப்பரா போடறார். பிறகு ஏன் விஜய், அஜித் மாதிரி இன்னும் அருண் பேசப்படவில்லை?'' என்று கவலை தெரிவிப்பார்.

    "எல்லாத்துக்குமே நேரம்னு ஒண்ணு இருக்கே'' என்பேன் நான்.

    ஒருநாள் திடுமென என்னை சந்தித்த அர்ஜ×ன், "அருண் விஷயத்தில் நீங்கள் சொன்ன `நேரம்' இப்போது வந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். நான் அருணை ஹீரோவாகப்போட்டு ஒரு படம் தயாரிக்கிறேன். `தவம்' என்பது படத்துக்கு பெயர்'' என்றார்.

    எனக்கு ஆனந்த அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் ஒரு முதல் தர நடிகர்; `ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் மாதிரி ஹீரோக்கள் தொடர்ந்து படம் எடுத்து தங்களை வளர்த்துக் கொள்ளவே நினைப்பார்கள். மாறுபட்டு என் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்கப்போகிறேன் என்று சொல்கிறாரே! இப்படியும் ஒரு அபூர்வ மனிதரா?'' என்ற வியப்புதான் ஆனந்த

    அதிர்ச்சியாகியிருந்தது.சொன்னபடியே `தவம்' படத்தை தயாரித்து ரிலீஸ் பண்ணி அருணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்த தயாரிப்பாளராகவும் எனக்குள் நிலைத்து விட்டார்.

    படத்தில் அருணை வித்தியாசமான கதைக் களத்தில் நடிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தற்கொலைக்கு முயலும் கதாநாயகியை, "எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு'' என்று அருண் கேட்கிறபோது, அருணின் அப்பா, ஒரு நடிகர் என்பதையெல்லாம் நான் மறந்து ஒரு ரசிகனாக அந்தக் காட்சியில் அருணின் நடிப்போடு ஒன்றிவிட்டேன்.

    அருண்குமார் இந்தப்படம் முதல் `அருண் விஜய்' என்று, பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். புதிய பெயரில் வெற்றியும் அவரோடு கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை.

    அர்ஜ×ன் என் மகன் அருண் விஜய்யை ஹீரோவாக்கியது என்னை ரொம்பவே நெகிழ்ச்சியாக்கி விட்டது. இதன் விளைவு `தவம்' பட பாடல் கேசட்டு வெளியீட்டு விழாவின்போது என்னில் எதிரொலித்தது. அந்த விழாவில், "இனி நானும் வருஷம் 2 படம் தயாரிப்பேன். அதில் ஒரு படத்தில் அருண் விஜய் நடிப்பார். அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு தொடங்கும்'' என்று கூறினேன். சொன்னபடி அடுத்த ஆண்டு படத்தயாரிப்பு தொடர்பான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டேன்.

    அருண் விஜய்யிடம் நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் `பிரஷ்' ஆகவே இரு! எந்தப்படம் பண்ணினாலும் அதை முதல் படமாக நினைத்து சிரத்தையோடு பண்ணு! உழைப்பு இருக்கிறது; தொழில் அக்கறை இருக்கிறது. இதோடு முழு ஈடுபாடும் கலந்து கொள்ளும்போது வெற்றியும் உன்னுடன் பின்னிப் பிணைந்திருக்கும்'' என்பதுதான்.

    சினிமா மீதான அவரது `தவம்' தொடர்ந்து நல்லவிதமாகவே கைகூடும் என்பது அவரது அப்பாவாக என் நம்பிக்கை.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.
    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.

    விஜயகுமார் நடிகராகப் புகழ் பெற்ற பிறகு, அவர் காதலித்து மணந்தவர் நடிகை மஞ்சுளா.

    விஜயகுமார் -மஞ்சுளா தம்பதிகளுக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்று 3 மகள்கள்.

    ஸ்ரீதேவி தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். மற்ற 5 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    தனது குடும்பம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அப்பா வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். `கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளரானார்' என்றொரு பாடல் உண்டு. இந்த வழியில் வந்த சமூகம் எங்களுடையது. பட்டுக்கோட்டையை சுற்றிலும் உள்ள 32 கிராமங்களில் எங்கள் சமூகத்தவர்தான் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஏ.யின் வெற்றி இந்த 32 கிராமங்களில் உள்ளவர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    இந்த சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தில் இருந்தே திருமணம் நடந்தது. மனைவி முத்துக்கண்ணு நான் நடிக்க வரும் முன்னரே எனக்கு மனைவி ஆனவர். என் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர்.

    கலையுலகுக்கு வந்த பிறகு எனக்கு மனைவியான மஞ்சுளா, பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மனைவியர் இருவருமே சொந்த சகோதரிகள் போல் அன்பு செலுத்துகிறார்கள்.

    மஞ்சுளா பற்றி சொல்ல வேண்டும். திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி என முன்னணி கலைஞர்களுக்கு ஜோடியாக நடித்தவர். ஆந்திராவில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடனும் கதாநாயகியாக நடித்தவர். இவர் கலை மூலம் வெளிப்பட்டாலும் இவரது பூர்வீகம் மற்ற துறைகளில் பிரபலமானவர்களைக் கொண்டிருக்கிறது.

    மஞ்சுளாவின் கொள்ளுத்தாத்தா சர் டி.பி.முத்துசாமி அய்யர் சென்னை ஐகோர்ட்டின் முதல் நீதிபதியாக பணியாற்றியவர். அதை நினைவுபடுத்தும் வகையில் சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு மார்பளவு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

    மஞ்சுளாவின் தாத்தா சர்.டி.ஏகாம்பரம் அய்யர், தமிழ்நாட்டின் முதல் வருமான வரி ஆணையராக இருந்தவர். அப்பா பானிராவ் ரெயில்வேயில் ஐ.ஜி.யாக இருந்தவர். இவர் ஆற்றிய பணி குறித்து இப்போதும் தென்னக ரெயில்வேயில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.

    மூத்த மகள் கவிதா திருமணமாகி கணவர் ரவிசங்கருடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறாள்.

    அடுத்த மகள் டாக்டர் அனிதாவின் கணவர் கோகுலகிருஷ்ணா. இவர்கள் துபாயில் இருக்கிறார்கள்.

    அடுத்தடுத்த மகள்கள் வனிதாவும், பிரீதாவும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களை மணந்து கொண்டிருக்கிறார்கள்.

    வனிதா மணந்து கொண்ட ஆகாஷ், நடிகர். பிரீதாவின் கணவர் ஹரி, சினிமா டைரக்டர்.

    மகன் அருண் விஜய்க்கு கடந்த ஆண்டு திருமணமானது. மனைவி பெயர் ஆர்த்தி.

    பிள்ளைகள் திருமண விஷயத்தில் நான் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்ற கண்ணோட்டத்தில் நடந்து கொண்டேன். ஜாதி மத பேதமின்றி ஒரு இந்தியனாக இருந்து காட்டவேண்டும் என்பது என் முடிவான எண்ணம். கலைத்துறைக்குள் வந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, `என்னை ரசிக்கிற நேசிக்கிற இத்தனை மக்களும் என்னை சொந்தம் கொண்டாடியபோதே, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' சிந்தனைக்குள் வந்துவிட்டேன்.

    கோடிக்கணக்கில் நான் சம்பாதிக்காவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர் இதயங்களில் இருக்கிறேன். ஒரு கலைஞனான எனக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்? இந்த வகையில் என்னை கலை மூலம் அடையாளம் காட்டிய கலைத்தாய்க்கும் என் நன்றி.

    என்னை இந்த பூமிக்குத் தந்த என் பெற்றோரையும் நான் கொண்டாடி மகிழ்கிறேன். அப்பா எம்.என்.ரெங்கசாமி என் தன்னம்பிக்கைக்கு ஆணிவேராக இருந்தார். அவர் மட்டும் எனது சினிமா கனவுக்கு உயிர் கொடுக்காதிருந்தால், `நிச்சயம் நீ ஜெயிப்பாய்' என்று வாழ்த்தி சென்னைக்கு அனுப்பாதிருந்தால், பஞ்சாட்சரம் என்ற பெயருடன் கிராமத்தில் சாதாரண பிரஜையாகத்தானே இருந்திருப்பேன்.

    இந்த வகையில் கலை மூலம் என்னை உலகறியச் செய்த அப்பாவுக்கு எங்கள் ஊரில் 1995-ம் ஆண்டு ஒரு சிலை எழுப்பியிருக்கிறேன். அப்பா ரைஸ் மில் நடத்திய இடத்தில் தம்பி சக்திவேல் `எம்.என்.ஆர்' என்ற பெயரில் ஒரு திருமண மண்டபம் கட்டியிருக்கிறார். ரைஸ் மில் இருந்த இடத்தில் என் பங்குக்கான பகுதியில் அப்பாவுக்கு சிலை வைத்திருக்கிறேன்.

    என் தாயாருக்கும் சிலை வைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். அப்பா  95 வயதிலும், அம்மா 90 வயதிலும் இறைவனடி சேர்ந்தார்கள். அது உலகப்பிரகாரம். என் இதயப் பிரகாரம் எப்போதும் என்னுடன் சிலையாக மட்டுமின்றி நிலையாகவும் இருந்து கொண்டிருப்பார்கள்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

    விஜயகுமார் இப்போது நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
    நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
    நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.

    விஜயகுமார், அப்போது மிகவும் `பிசி'யான நட்சத்திரம். இரவும் பகலுமாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் வீட்டுக்கே போக முடியாத அளவுக்கு ஸ்டூடியோவிலேயே குட்டித் தூக்கம் போட்டு விட்டு, அடுத்த படப்பிடிப்புக்கு போய் விடுவார்.

    சொந்த ஊரில் இருந்து மனைவி முத்துக்கண்ணுவை அழைத்து வந்து விட்டார். 1970-ல் மகள் கவிதா, 1973-ல் அடுத்த மகள் அனிதா, 1976-ல் மகன் அருண்குமார் என மூன்று வாரிசுகள்.

    1976-ல் ஏ.பீம்சிங் டைரக்ஷனில் ``உன்னிடம் மயங்குகிறேன்' படத்தில் நடித்த போதுதான் நடிகை மஞ்சுளாவையும் திருமணம் செய்து கொண்டார். அந்தப் படத்தில் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராமல் நிகழ்ந்தது அந்த கல்யாணத் திருப்பம்.

    அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்.

    ``தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் சகோதரர்தான் ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் தயாரிப்பாளர். இவர் ஏற்கனவே ``ஆசை 60 நாள்'' படத்தை தயாரித்தவர். ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் கதாநாயகியாக மஞ்சுளாவை `புக்' செய்திருந்தார். நான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.

    மஞ்சுளா அப்போது தெலுங்கிலும் பிரபலமாக இருந்தார். தெலுங்கின் முன்னணி நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ், சோபன்பாபு என மாற்றி மாற்றி நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் இந்தப் படத்தில் நடித்தபோது `லஞ்ச் பிரேக்'கில், சின்னச்சின்ன இடைவேளைகளில் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். பேச்சு பொதுவாக இருக்கும். பல நேரங்களில் சுவராசியமாக எங்கள் உரையாடல் போய்க் கொண்டிருக்கும்.

    இப்படித்தான் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென மஞ்சுளாவிடம், ``மஞ்சு! உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீங்க என்ன சொல்கிறீங்க?'' என்று கேட்டு விட்டேன்.

    எதிர்பாராத அந்தக் கேள்வியில், மஞ்சுளாவும் திடுக்கிட்டுப் போனது அவரது முகபாவத்தில் தெரிந்தது.

    பொதுவாகவே, உள்மனதின் ஆழத்தில் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் புதையுண்டு போயிருக்கும். மஞ்சுளாவிடம் பேசிப்பழக ஆரம்பித்த இந்த சில நாட்களில் அவரைப் பற்றி எண்ணங்கள் காதலாக மாறியிருந்தன.

    அதுதான் சட்டென வார்த்தைகளில் வெளிப்பட்டு விட்டது.

    என் கேள்விக்கு பதிலை மஞ்சுளாவின் அதிர்ச்சி முகமே எனக்கு சொல்லிவிட்டது. அவர் பதிலாகக் கூட எதுவும் சொல்லவில்லை.

    மறுநாள் எனக்கு மதியம் 2 மணிக்குத்தான் படப்பிடிப்பு. செட்டுக்கு வந்தபோது அங்கே மஞ்சுளா ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். காட்சியை முடித்து விட்டு வந்தவரிடம் ``நேற்று நான் சொன்னதை யோசித்தீர்களா? பதில் ஒன்றும் சொல்ல வில்லையே'' என்றேன் மறுபடியும்.

    இப்போது மஞ்சுளாவின் முகம் எனக்கு பதில் சொல்லத் தயங்கும் `தர்மசங்கடமான' நிலையை உணர்த்தியது. மெதுவாக என்னைப் பார்த்தவர், ``யோசித்து சொல்கிறேன்''  என்றார். பிறகு அவரே, ``இந்த விஷயத்தில் நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்பா- அம்மாவிடமும் கலந்து பேச வேண்டும்'' என்றார்.

    அடுத்தடுத்து வந்த இரண்டொரு நாட்களில் மஞ்சுளாவின் பெற்றோரை சந்தித்தேன். அவர்களோ, ``எங்கள் பெண் விருப்பம் எதுவோ, அதுவே எங்கள் விருப்பமும். உங்கள் விருப்பம் பற்றி மஞ்சுளா எங்களிடம் சொன்னாள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியது எங்களுக்கும் பிடித்திருக்கிறது. எனவே திருமண விஷயத்தில் எங்களுக்கும் சம்மதமே'' என்றனர்.

    திருமணத்தை எளிமையாக நடத்தினோம். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார் மஞ்சுளா.

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    படங்களில் நடிப்பது தொடர்ந்தாலும், ஒரே மாதிரியான கதைகள் விஜயகுமாரை சற்று யோசிக்க வைத்தது. அதனால் வித்தியாசமான கதைகளைத் தேட ஆரம்பித்தார்.

    இந்த சமயத்தில் வில்லனாக நடிக்கவும் அழைப்புக்கள் வந்தன. கதாநாயகனாக ரஜினி நடிப்பில் முன்னணியில் இருந்த நேரத்தில் அவரது படங்களில் கூட வில்லனாக? நடித்தார், விஜயகுமார்.

    தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜியின் ``சவால்'', ``தியாகி'' போன்ற படங்களிலும் வில்லனாக நடிப்பதைத் தொடர்ந்தார்.

    இப்படி வில்லன் நடிப்பில் பிஸியாக இருந்த நேரத்தில் மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு விஜயகுமார் போனார். அப்போது சில ரசிகர்கள் அவரிடம், ``ஹீரோவாக நடித்து எங்களை சந்தோஷப்படுத்திய நீங்கள், இப்போது வில்லனாக நடிப்பது எங்களுக்கு வேதனை தருகிறது'' என்று சொல்ல, ரசிகர்களின் ஒட்டுமொத்த உணர்வாக அதை எடுத்துக் கொண்டு நடிப்பதையே நிறுத்தி விட்டார், விஜயகுமார்.

    மூன்றாண்டுகள் இந்த நிலை நீடித்தது. மறுபடியும் விஜயகுமார் நடிக்க ஆரம்பித்தது குணசித்ர வேடங்களில்.

    அதற்கான வாய்ப்பு, `ஜீ.வி.' பட நிறுவனம் மூலம் வந்தது
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.

    நடிகர் விஜயகுமாருக்கு ஒரே ஆண் வாரிசு அருண்குமார். சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அதனால் "எம்.பி.ஏ.'' படிக்க அமெரிக்காவுக்கு போக இருந்த திட்டத்தை கைவிட்டு, முழுநேர நடிகராகி விட்டார், அருண்குமார்.

    மகன் அருண்குமார் சினிமாவுக்கு வந்தது பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அருண்குமார் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருந்தார். அவரது பள்ளி வாழ்க்கையே, பல பள்ளிகளில் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நாடு விட்டு நாடும் தொடர்ந்தது.

    ஆரம்பப் படிப்பு சென்னை டான்போஸ்கோவில் தொடங்கியது. அதன் பிறகு `சோ'வின் சகோதரர் நடத்தி வரும் "லா சாட்டலின்'' பள்ளி. அதன் பின்னர் அமெரிக்காவில்

    2 வருடம் என உலகம் சுற்றியது. நான் நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் 2 வருடம் ரெஸ்டாரெண்ட் நடத்திய நேரத்தில், அருண் 2 வருடமும் அமெரிக்காவில் படித்தார். அதன் பிறகு சென்னை வந்தபோது மறுபடியும் `லா சாட்டலின்' பள்ளியில் படிப்பு.

    அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்குத்தான் பெற்றோர்களின் டிரான்ஸ்பரை பொறுத்து, இப்படி ஊர்ஊராய் பள்ளிகளில் மாறி மாறி படிக்க வேண்டியிருக்கும். அருணுக்கும் இந்த மாதிரியான அனுபவம் கிடைத்தது.

    பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு கூட, அருணுக்குள் சினிமா ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. அந்த வாய்ப்பை தேடி வந்து ஏற்படுத்திக் கொடுத்தவர் தயாரிப்பாளர் `அன்பாலயா' பிரபாகரன்.

    அருண் "பி.காம்.'' இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர்ந்த நேரத்தில் `அன்பாலயா' பிரபாகரன், என்னை வந்து சந்தித்தார். அவரது படத்தில் நான் நடிப்பது தொடர்பாகத்தான் பேச வந்திருக்கிறார் என்று எண்ணினேன். அவரோ வந்ததும் வராததுமாக, "ஒரு நல்ல லவ் ஸ்டோரி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உங்க மகன் அருணை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.

    எனக்கு அதிர்ச்சி. சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் எந்த எண்ணமும் இல்லாத மகனுக்குள் வலுக்கட்டாயமாக சினிமாவை திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் அவரிடம், "பையன் பி.காம். முடித்து விட்டு, அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க இருக்கிறான். அதனால் சினிமா வேண்டாமே'' என்று தவிர்க்கப்பார்த்தேன்.

    ஆனால் நடந்ததை தனது அம்மா மூலம் தெரிந்து கொண்ட அருண், "நான் நடிக்கிறேன். தயாரிப்பாளர் கிட்ட `சரி'ன்னு சொல்லும்படி அப்பாகிட்ட சொல்லுங்க'' என்று கூறியிருக்கிறார்.

    மகனின் விருப்பம் அதுவென தெரிந்த பிறகு தடைபோட விரும்பவில்லை. அதோடு லவ் ஸ்டோரி, ஏ.ஆர்.ரகுமான் இசை என்று தயாரிப்பாளர் பிரமாண்டம் காட்டி விட்டுப் போவதால், "சரி; நடிக்கட்டும்'' என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் படத் தயாரிப்பு தாமதித்துக் கொண்டே போனது. தயாரிப்பாளரைக் கேட்டால், "ஏ.ஆர்.ரகுமான் 3 பாட்டுக்கு டிïன் தந்துவிட்டார். இன்னும் 2 பாட்டுக்கு டிïன் தந்து விட்டால் படத்தை முழு வீச்சில் தொடங்கி முடிக்க ஏதுவாக இருக்கும்'' என்று சொன்னார்.

    எனக்கு நம்பிக்கை குறைந்தது. அவசரப்பட்டு சரி சொல்லிவிட்டோமோ என்று கூட நினைத்தேன்.

    இந்த நிலையில் திடுமென ஒரு நாள் வந்து நின்றார், தயாரிப்பாளர். ரகுமான் இசை தாமதமாவதால் வேறு ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன். சுந்தர் சி. இயக்குகிறார். படத்துக்கு "முறை மாப்பிள்ளை'' என்று பெயர் வைத்திருக்கிறேன். முதலில் அருண் இந்தப் படத்தில் நடிக்கட்டும். அடுத்து ரகுமான் பாட்டை முடித்துக் கொடுத்ததும் `லவ் ஸ்டோரி' எடுக்கலாம்'' என்றார்.

    சரி! நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சினிமாவுக்குள் அருண் காலெடுத்து வைத்தாயிற்று. இனி பின்வாங்கினால் சரியாக இருக்காது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்றபடி "முறை மாப்பிள்ளை'' படத்துக்கு அருணை ஹீரோவாக்க சம்மதித்தேன்.

    படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் நடந்தது. நண்பர் ரஜினி வந்து அருணுக்கு பொட்டு வைத்து வாழ்த்தி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "என் இனிய நண்பர் விஜயகுமாரின் மகன் அருண் சினிமாவுக்கு வருவதை வாழ்த்துகிறேன். அவர் நல்லா வரவேண்டும். நல்லா வருவார்'' என்று வாழ்த்தினார்.

    அவர் வாழ்த்து பலித்தது. "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் அருண் நிலையான ஹீரோ ஆனார். தொடர்ந்து "பிரியம்'', "காத்திருந்த காதல்'', "கங்கா கவுரி'', "துள்ளித்திரிந்த காலம்'', "கண்ணால் பேசவா'', "அன்புடன்'', "பாண்டவர் பூமி'', "முத்தம்'', "இயற்கை'', "ஜனனம்'', "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'' என தொடர்ந்து இப்போது ரிலீசான "தவம்'' வரை நடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இப்போதும் "வேதா'', "துணிச்சல்'' என திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களும் உண்டு.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், நடிகர் அர்ஜ×ன், அருணை வைத்து தயாரித்த "தவம்'' படம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து
    கொண்டார்.

    "அர்ஜ×ன் சார் என்னிடம் அடிக்கடி அருண் பற்றி கேட்பார். "நன்றாக நடிக்கவும் செய்கிறார். `பைட்'டும் சூப்பரா போடறார். பிறகு ஏன் விஜய், அஜித் மாதிரி இன்னும் அருண் பேசப்படவில்லை?'' என்று கவலை தெரிவிப்பார்.

    "எல்லாத்துக்குமே நேரம்னு ஒண்ணு இருக்கே'' என்பேன் நான்.

    ஒருநாள் திடுமென என்னை சந்தித்த அர்ஜ×ன், "அருண் விஷயத்தில் நீங்கள் சொன்ன `நேரம்' இப்போது வந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். நான் அருணை ஹீரோவாகப்போட்டு ஒரு படம் தயாரிக்கிறேன். `தவம்' என்பது படத்துக்கு பெயர்'' என்றார்.

    எனக்கு ஆனந்த அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் ஒரு முதல் தர நடிகர்; `ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் மாதிரி ஹீரோக்கள் தொடர்ந்து படம் எடுத்து தங்களை வளர்த்துக் கொள்ளவே நினைப்பார்கள். மாறுபட்டு என் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்கப்போகிறேன் என்று சொல்கிறாரே! இப்படியும் ஒரு அபூர்வ மனிதரா?'' என்ற வியப்புதான் ஆனந்த

    அதிர்ச்சியாகியிருந்தது.சொன்னபடியே `தவம்' படத்தை தயாரித்து ரிலீஸ் பண்ணி அருணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்த தயாரிப்பாளராகவும் எனக்குள் நிலைத்து விட்டார்.

    படத்தில் அருணை வித்தியாசமான கதைக் களத்தில் நடிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தற்கொலைக்கு முயலும் கதாநாயகியை, "எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு'' என்று அருண் கேட்கிறபோது, அருணின் அப்பா, ஒரு நடிகர் என்பதையெல்லாம் நான் மறந்து ஒரு ரசிகனாக அந்தக் காட்சியில் அருணின் நடிப்போடு ஒன்றிவிட்டேன்.

    அருண்குமார் இந்தப்படம் முதல் `அருண் விஜய்' என்று, பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். புதிய பெயரில் வெற்றியும் அவரோடு கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை.

    அர்ஜ×ன் என் மகன் அருண் விஜய்யை ஹீரோவாக்கியது என்னை ரொம்பவே நெகிழ்ச்சியாக்கி விட்டது. இதன் விளைவு `தவம்' பட பாடல் கேசட்டு வெளியீட்டு விழாவின்போது என்னில் எதிரொலித்தது. அந்த விழாவில், "இனி நானும் வருஷம் 2 படம் தயாரிப்பேன். அதில் ஒரு படத்தில் அருண் விஜய் நடிப்பார். அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு தொடங்கும்'' என்று கூறினேன். சொன்னபடி அடுத்த ஆண்டு படத்தயாரிப்பு தொடர்பான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டேன்.

    அருண் விஜய்யிடம் நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் `பிரஷ்' ஆகவே இரு! எந்தப்படம் பண்ணினாலும் அதை முதல் படமாக நினைத்து சிரத்தையோடு பண்ணு! உழைப்பு இருக்கிறது; தொழில் அக்கறை இருக்கிறது. இதோடு முழு ஈடுபாடும் கலந்து கொள்ளும்போது வெற்றியும் உன்னுடன் பின்னிப் பிணைந்திருக்கும்'' என்பதுதான்.

    சினிமா மீதான அவரது `தவம்' தொடர்ந்து நல்லவிதமாகவே கைகூடும் என்பது அவரது அப்பாவாக என் நம்பிக்கை.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
    நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.

    படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-

    "1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.

    நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே'' 

    என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,

    "நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.

    அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.

    அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.

    பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.

    "சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

    "அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.

    உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.

    மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக  இருந்தது.

    நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.

    சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.

    மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.

    அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.

    சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.

    சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.

    பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.

    மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.

    படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.

    அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.

    என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.

    அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

    எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.

    திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.

    நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்யூலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.

    நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.

    "ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.

    அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

    வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.

    எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!

    இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.

    சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.

    நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.

    "சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று 

    சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.

    நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.

    சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.

    பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது. எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

    இந்தப் படத்தில்தான் நடிகை மீனா அறிமுகமானார். அப்போது அவர் ஏழெட்டு வயது சிறுமி. படத்துக்கு 2,500 ரூபாய் பேசி, 500 ரூபாய் அட்வான்சாக கொடுத்தேன். பின்னாளில் பெரிய கதாநாயகி ஆகிவிட்ட மீனா, "சினிமாவில் நடிக்க எனக்கு முதல் அட்வான்ஸ் கொடுத்தவர் விஜயகுமார் சார்தான்'' என்று என்னை பல தடவை பல பேரிடம் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார்.

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    ×