தென்னிந்தியர்களை புறக்கணித்ததா நத்திங் நிறுவனம்... வைரலாகும் கடிதத்தின் உண்மை பின்னணி
- நத்திங் போனுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது.
- #DearNothing என்கிற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டானது.
நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகப்படுத்தியது. லண்டனைச் சேர்ந்த இந்நிறுவனம் அங்கு நடைபெற்ற ஈவண்ட்டில் நத்திங் போன் 1 மாடலை அறிமுகம் செய்தது. பயனர்கள் எதிர்பார்த்தபடி ஏராளமான சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த போனுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பும் கிளம்பியது.
இதற்கு காரணம் ஒரு லெட்டர் தான். தென்னிந்தியாவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர், நேற்று நத்திங் போன் வெளியான சமயத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் நத்திங் போன் அடங்கிய பாக்ஸை பிரிக்கும் போது அதில் போன் எதுவும் இன்றி காலியாக இருப்பது போலவும், ஒரு லெட்டர் மட்டும் அதில் இருப்பது போலவும் அந்த வீடியோவில் அவர் காட்டி இருந்தார்.
அந்த லெட்டரில் 'இந்த சாதனம் தென்னிந்திய மக்களுக்கு வழங்கப்படாது' என எழுதப்பட்டிருந்தது. இந்த லெட்டர் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆனது. நத்திங் நிறுவனம் பயன்படுத்தும் ஸ்டைலிலேயே அந்த லெட்டரில் உள்ள எழுத்துக்கள் இருந்ததனால் நெட்டிசன்களும் அது நத்திங் நிறுவனத்தில் இருந்து வந்த லெட்டர் தான் நம்பி, கொதித்தெழுந்தனர்.
இதையடுத்து #DearNothing என்கிற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டானது. ஏராளமானோர் நத்திங் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வந்தனர். இதனால் பரபரப்பி நிலவியது. ஆனால் உண்மையில் அப்படி ஒரு லெட்டரை நத்திங் நிறுவனம் அனுப்பவே இல்லையாம். அது அந்த யூடியூபர் செய்த பிராங்க் வீடியோ என்பது பின்னர் தான் தெரியவந்தது. நத்திங் நிறுவனமும் இந்த சர்ச்சை குறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.