கணினி

200 சீன செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி!

Published On 2023-02-06 13:11 GMT   |   Update On 2023-02-06 13:11 GMT
  • தடை செய்யப்பட்ட செயலிகள் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டி வந்துள்ளன.
  • பல்வேறு மாநிலங்களில் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.

சீனாவை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 288 சீன செயலிகளை முழுமையாக ஆய்வு செய்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அவற்றில் 230 செயலிகளை அவசரகால அடிப்படையில் தடை செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது தடை செய்யப்பட்டு இருக்கும் இந்த செயலிகள் மூலம் தனிநபர்கள் குறைந்த தொகையை கடனாக பெற்று, அளவுக்கு மீறிய இடையூறு மற்றும் சட்டவிரோத மிரட்டல்களை சந்தித்து வந்துள்ளனர். சில சமயங்களில் வட்டி சதவீதம் ஆண்டிற்கு 3 ஆயிரம் சதவீதம் வரை வசூலிக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

கடன் பெற்றவர்கள், தொகையை திரும்ப செலுத்தாத நிலையில் செயலி சார்பில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான குறுந்தகவல் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டி வந்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவின் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.

இது போன்ற அறிக்கைகள், மற்றும் பல்வேறு மாநிலங்களின் உளவுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகவல்களின் பேரில், செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட செயலிகளில் 94 செயலிகள் ஆப் ஸ்டோர்களில் இன்ஸ்டால் செய்ய தயார் நிலையில் இருந்துள்ளன. இதர செயலிகள் மூன்றாம் தரப்பு இணைய முகவரிகள் மூலம் இணையத்தில் வலம் வந்துள்ளன.

சீன செயலிகளுக்கு தடை விதித்து இருப்பதோடு, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பந்தயம் கட்டுவது மற்றும் சூதாடுவது சட்ட விரோதமான நடவடிக்கை ஆகும். இவற்றை விளம்பரப்படுத்துவது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019, கேபில் டிவி நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டம் 1995 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் சட்டவிரோத நடவடிக்கை என அரசு சார்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News