மது குடிப்பதை குடும்பத்தினர் கண்டித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
- கூலித்தொழிலாளியான செல்வராஜ் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் மாதாகோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54) இவர் தனது மனைவி கோமதி மற்றும் 2 மகன்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். கூலித்தொழிலாளியான செல்வராஜ் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அது போல் செல்வராஜ் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்தார். அப்போது செல்வராஜை அவரது மகன்கள் மற்றும் மனைவி கண்டித்து விட்டு வேலைக்கு சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் செல்வராஜின் மகன்களுக்கு போன் செய்து உனது தந்தை வீட்டில் தூக்கு போட்டு தொங்குவதாக கூறினார்.
உடனே செல்வராஜின் மகன்கள் வீட்டுக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தூக்கில் இருந்து செல்வராஜை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வராஜின் மூத்த மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.