கோப்பு படம்.
பெண் அமைச்சர் புகார் குறித்து வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்
- முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
- ஒரு பெண் அமைச்சர் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படி அறிக்கை கொடுத்திருப்பார்?
புதுச்சேரி:
புதுவை மாநில முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரங்கசாமி முதல்- அமைச்சராகி 2 1/2 ஆண்டாகிறது. மாநில அந்தஸ்து பெற பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளேன் என ரங்கசாமி கூறினார்.
புதுவைக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றார். இதில் யார் குற்றவாளி? பிரதமர் எத்தனை முறை டெல்லிக்கு சென்றார்? மாநில அந்தஸ்து தர முடியாது என மத்திய அரசு கூறியபிறகு, எதிர்கட்சிகள் மீது பழிபோடுகிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறும் எண்ணம் ரங்கசாமிக்கும் இல்லை, வழங்கும் எண்ணம் மத்திய பா.ஜனதா அரசுக்கும் இல்லை. ரங்க சாமி சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்.
ஒரு பெண் அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ரங்க சாமி, கவர்னரை சந்தித்து அமைச்சர் சந்திர பிரியங்காவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். திருமுருகனை அமைச்சராக்க வேண்டும் என கடிதம் அளித்துள்ளார்.
அந்த கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த கடிதம் ஏற்கப்பட்டு, புதுவை அரசுக்கு வந்துள்ளது. பெண் அமைச்சரை அசிங்கப்படுத்தி உள்ளனர். அமைச்சர்கள், முதல்-அமைச்சரின் செயல்பாடு கள் சரியாக உள்ளதா? ஒரு பெண் அமைச்சர் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படி அறிக்கை கொடுத்திருப்பார்? மன வேதனையோடு அந்த கடிதத்தை எழுதியுள்ளார். ஆண் அதிகார வர்க்கம் என்னை செயல்படவிடாமல் தடுத்துள்ளது.
தனிப்பட்ட பிரச்சினையை முன்வைத்து பழிவாங்குகின்றனர். சாதி, பாலின ரீதியில் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா சுயரூபத்தை அமைச்சரின் கடிதம் காட்டுகிறது. இது மிகப்பெரும் குற்றச்சாட்டு. இதுகுறித்து தலித் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.