புதுச்சேரி

புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் அடித்து கொலை செய்யப்பட்டாரா?- 3 பேரிடம் விசாரணை

Published On 2022-06-21 12:38 IST   |   Update On 2022-06-21 12:38:00 IST
  • புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (51)ரியல் எஸ்டேட் அதிபர்.
  • சரவணன் இறப்பில் மர்மம் உள்ளது என்று அவரின் உறவினர்கள் மற்றும் புதுவை எம்.எல்.ஏ வைத்தியநாதன் குற்றம் சாட்டினர்.

வேலுார்:

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (51)ரியல் எஸ்டேட் அதிபர். இவர் காட்பாடி அருகே 13 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு நிலத்தின் உரிமையாளர்களிடம் அட் வான்ஸ் தொகை கொடுத்துள்ளார்.

அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்காமல், நிலத்தின் உரிமையாளர்கள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த 18-ந்தேதி சரவணன் மற்றும் சில முக்கிய புள்ளிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் மர்மமான முறையில் சரவணன் இறந்து கிடந்தார்.

சரவணன் உடலை மீட்ட விருதம்பட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் இறப்பில் மர்மம் உள்ளது என்று அவரின் உறவினர்கள் மற்றும் புதுவை எம்.எல்.ஏ வைத்தியநாதன் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து இந்த வழக்கில் சரவணன் இறப்பு தொடர்பாக சில முக்கிய புள்ளிகளை பிடித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் பிரேத பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் அவர் உடலில் ஆல்கஹால் இல்லை. நெஞ்சு எலும்பு முறிந்து பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் அன்று இரவு நடந்த ஆலோசனையில் யாரெல்லாம் இருந்தனர். அவர்களுக்கும் சரவணன் வாங்க நினைத்த இடத்துக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி உட்பட 3 பேரை பிடித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சரவணன் இறப்பில் உள்ள மர்மங்கள் அனைத்துக்கும் விரைவில் விடை கிடைத்துவிடும் என்றனர் .

Tags:    

Similar News