உதவி செய்வது போல் நடித்து முதியவரின் வாக்கை செலுத்திய மர்ம நபர்
- முதியவர் ஒருவரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் உதவி செய்வது போல் அழைத்து வந்துள்ளார்.
- முதியவரிடம் எதுவும் கேட்காமலேயே வாக்கை பதிவு செய்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குபதிவு நேற்று நடந்தது.
வாக்குப்பதிவிற்காக வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட வி.மணவெளி தனியார் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு முதியவர் ஒருவரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் உதவி செய்வது போல் அழைத்து வந்துள்ளார்.
அங்குள்ள வாக்குச்சாவடி பணியாளர்களிடம் முதியவருக்கு பார்வை தெரியவில்லை என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து முதியவரின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது, பின் முதியவரிடம் கையெழுத்தை பெற்ற பணியாளர்கள் உதவிக்கு வந்த நபருடன் வாக்களிக்க முதியவரை திரை மறைவிற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த முதியவருடன் சென்றவர் முதியவரிடம் எதுவும் கேட்காமலேயே வாக்கை பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த முதியவரை அழைத்து சென்று வெளியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
தன்னை கேட்காமலே அரசியல் பிரமுகர் தனது விருப்பத்திற்கு வாக்கு பதிவு செய்ததை அந்த முதியவர் வீடியோவில் புலம்பியுள்ளார். இந்த புலம்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.