உள்ளூர் செய்திகள்

வானூர் அருகே 2 ரவுடிகள் வெட்டிக் கொலை

Published On 2023-06-10 07:42 GMT   |   Update On 2023-06-10 07:43 GMT
  • கொலை செய்யப்பட்ட வாலிபர்கள் 2 பேரும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
  • புதுவை மாநிலத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த திருவக்கரை உள்ளது. இங்குள்ள மெயின்ரோட்டில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் வழியில், ரத்த வெள்ளத்தில் 2 வாலிபர்களின் உடல் கிடந்ததை அவ்வழியே சென்ற விவசாயத் தொழிலாளர்கள் இன்று காலை 10.30 மணியளவில் பார்த்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் வானூர் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 வாலிபர்களின் உடலை மீட்டனர்.

இதில் ஒரு வாலிபர் உடலில் ஒரு கையும், காலும் வெட்டப்பட்ட நிலையில் முட்புதர் அருகே கிடந்தது. மற்றொருவருக்கு தலை மற்றும் மார்பு, கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டிருந்தது.

உடலை கைப்பற்றிய போலீசார் புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபர்கள் 2 பேரும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் இறந்த வாலிபர்கள் புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த அருண் (வயது 23), கோர்க்காடு அன்பரசன் (35) என்பது தெரியவந்தது. இந்த 2 பேரும் புதுவை மாநிலத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது கூட்டாளிகளே இவர்களை கொலை செய்து வீசி சென்றுள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

Tags:    

Similar News