புதுச்சேரி

புதுச்சேரியில் பா.ஜனதா வேட்பாளரை தேர்வு செய்ய ரூ.50 கோடி பேரம்- ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்

Published On 2024-03-16 07:38 GMT   |   Update On 2024-03-16 07:38 GMT
  • காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனை வேட்பாளராக கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய முடிவானது.
  • கடந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

புதுச்சேரி:

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதா போட்டியிடுகிறது.

புதுச்சேரி பா.ஜனதா சார்பில் போட்டியிட கவர்னர், மத்திய மந்திரி, புதுவை எம்.எல்.ஏ.க்கள், காரைக்கால் தொழிலதிபர் என பலரின் பெயர்கள் பேசப்பட்டது.

வேட்பாளரை இறுதி செய்ய பா.ஜனதா மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசினார்.

இதில் காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனை வேட்பாளராக கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய முடிவானது.

இவர் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்த நிலையில் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.வும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வரும் சிவசங்கரன் கூறியதாவது:-


பா.ஜனதா ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட காரைக்காலை சேர்ந்த ராஜசேகர் தேர்வானார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பா.ஜனதாவில் மாநில தலைமைக்கு பணம் தந்தால்தான் வாய்ப்பு என்ற நிலையை உருவாக்கி விட்டனர். மக்கள் செல்வாக்கை பார்ப்பதில்லை. ரூ.50 கோடி பணம் இருந்தால்தான் சீட் என்கிறார்கள்.

நல்ல வேட்பாளரை நிறுத்தினால் வெல்லலாம். கட்சித்தலைமை தெளிவாக இருக்கிறார்கள். உள்ளூர் தலைமை தான் சரியில்லை.

உள்ளூர் தலைமை பணத்தை பார்க்கிறார்கள். இது தவறு என்று கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளோம். உள்துறை அமைச்சர் நின்றால் வெற்றி கிடைக்கும் என்று சொல்லி விட்டோம். இறுதி முடிவு கட்சி தலைமை தான் எடுக்க வேண்டும்.

இவ்வாறு சிவசங்கரன் எம்.எல்.ஏ கூறினார்.

Tags:    

Similar News