புதுச்சேரி

சினிமா தியேட்டரை சூறையாடிய வழக்கில் ரவுடியை பிடிக்க போலீசார் வந்ததால் மனைவி கையை அறுத்து தற்கொலை முயற்சி

Published On 2023-09-11 17:00 IST   |   Update On 2023-09-11 17:01:00 IST
  • சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் தியேட்டருக்கு வந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35) ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றார். அப்போது அங்குள்ள லிப்டை அவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை தியேட்டர் நிர்வாகம் சி.சி.டி.வி.கேமரா மூலம் கண்டு பிடித்தனர். மறுநாள் சதீஷ் அதே தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்ற போது தியேட்டர் நிர்வாகத்தினர் சதீஷை கண்டித்தனர். பின்னர் அங்கிருந்து சதீஷ் சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் தியேட்டருக்கு வந்தார்.

அங்குள்ள பொருட்களை சூறையாடிவிட்டு தியேட்டர் ஊழியர்களை சதீஷ் மிரட்டி விட்டு சென்றார். இது குறித்து புகாரின் பேரில் உருளையபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் சதீஷை பிடிக்க அவரது வீட்டுக்கு போலீசார் சென்று வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் அடிக்கடி சதீஷை தேடி அவரது வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்ததால் மன உளைச்சல் அடைந்த சதீஷின் மனைவி தீஷ்மா கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலை முயன்றார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் தொல்லை கொடுத்ததால் ரவுடியின் மனைவி கையை கத்தியால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News