வெயிலில் வாடி வதங்கிய மூதாட்டிக்கு செருப்பு அணிவித்து, குடை கொடுத்து உதவிய போலீஸ்காரர்
- கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
- அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
கோடைகாலம் தொடங்கியதால் புதுவையில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது.
காலை 7 மணி முதல் வெப்பம் அதிகரித்து செல்கிறது. சாலையில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் முதியோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் கோடை வெப்பம் தகித்து வருகிறது. வெயிலில் வாடிய முதியவருக்கு போலீஸ்காரர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் நெடுங்காடு சந்திப்பு சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் முகமது ஹாஜா, அந்த வழியே காலில் செருப்பு அணியாமல் வந்த மூதாட்டியை பார்த்தார்.
கடும் வெயிலால் நடக்க சிரமப்பட்டு வந்தார். இதைப்பார்த்த போலீஸ்காரர் மூதாட்டியை நிறுத்தி அருகிலிருந்த கடையில் செருப்பு, குடை வாங்கி கொடுத்தார்.
தொடர்ந்து மூதாட்டிக்கு இளநீர் வாங்கி கொடுத்தார். அந்த வழியே சென்ற முதியோருக்கும் இளநீர் வாங்கி கொடுத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் போலீஸ்காரரை பாராட்டி வருகின்றனர்.
இவர் ஏற்கனவே அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.