புதுச்சேரியில் சாலையோரம் படுத்திருந்த 2 மாத ஆண் குழந்தை கடத்தல்
- குழந்தையை மர்ம கும்பல் யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இவர்கள் கடற்கரை மற்றும் சாலையோரம் இளநீர், சோளம், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 3 வயதில் பெண் குழந்தையும், 2½ மாதங்களே ஆதித்யா என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இவர்கள் மிஷின் வீதியில் உள்ள ஜென்மராகினி கோவில் அருகே சாலையோர உள்ள பைக் வாடகை விடும் கடை வாசலில் படுத்து தூங்குவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு தனது குழந்தையுடன் சாலையோரம் படுத்து தூங்கினர். ஆனால் காலையில் பார்த்த போது குழந்தை ஆதித்யாவை காணவில்லை. இதனால் அவர்கள் திடுக்கிட்டனர். அங்குள்ள இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தையை மர்ம கும்பல் யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சோனியா பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.