புதுச்சேரி

ஆரோவில் அருகே 14 வயது சிறுமி பலாத்காரம்- ஓட்டல் ஊழியர் கைது

Published On 2022-12-22 10:19 IST   |   Update On 2022-12-22 10:19:00 IST
  • 14 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
  • சிறுமியை அவரது பெற்றோர் புதுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சேதராப்பட்டு:

புதுவை லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தில் நரிக்குறவர்கள், பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களில் ஒரு சிலர் கூலி வேலைக்காகவும், தாங்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காகவும் வெளியூருக்கு சென்று அங்கேயே பல நாட்கள் தங்கி வருவது வழக்கம்.

இந்த நிலையில் கருவடிப்குப்பம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த விஜயகுமார் மகன் முத்தழகன் (வயது 23) மற்றும் அவரது உறவினர்கள் ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையத்தில் சாலையோரத்தில் தங்கி அங்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இவர்கள் தயாரித்த கழுத்தில் அணியும் மணி, பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். முத்தழகன் அங்குள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அங்கு இருந்த 14 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறுமியை அவரது பெற்றோர் புதுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து புதுவை குழந்தைகள் நல ஆணையம் மூலம் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது ஓட்டல் ஊழியர் முத்தழகன் என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News