100 வயது மூதாட்டிக்கு பூர்ணாபிஷேக விழா: பிரதமர் நரேந்திரமோடி, அமைச்சர்கள்- கலெக்டர்கள் வாழ்த்து
- கணவர் இறந்து போனதால் மூதாட்டி காமாட்சி மகள்களது வீட்டில் வசித்து வந்தார்
- மூதாட்டி காமாட்சிக்கு வருகிற ஜூலை 23-ந் தேதி100 வயது பூர்த்தியாகவுள்ளது. இதனை குடும்ப உறுப்பினர்கள் விழாவாக நடத்த முடிவு செய்தனர்.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் பகுதியில் வசித்தவர் எம்.கணபதி. இவர், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் ஐ.என்.ஏ. (இந்திய தேசிய ராணுவம்) வீரர்.
இவருக்கும், நாகை மாவட்டம் வாழ்மங்களம் பகுதியைச்சேர்ந்த காமாட்சிக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள். 4 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகிறார்கள். இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் கணபதி கடந்த 2011-ம் ஆண்டு இறந்து விட்டார். இவருக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.
கணவர் இறந்து போனதால் மூதாட்டி காமாட்சி மகள்களது வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரியில் உள்ள தனது மகளது வீட்டில் வசித்து வருகிறார். மூதாட்டி காமாட்சிக்கு வருகிற ஜூலை 23-ந் தேதி100 வயது பூர்த்தியாகவுள்ளது. இதனை குடும்ப உறுப்பினர்கள் விழாவாக நடத்த முடிவு செய்தனர். விழாவை திரு.பட்டினத்தில் நடத்த மூதாட்டி காமாட்சி ஆலோசனை கூறியுள்ளார். அதன்படி, காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் அபிராமி அம்மன் கோவில் மண்டபத்தில் 100-வது பிறந்தநாள் விழா (பூர்ணாபி ஷேகம்) நேற்று நடைபெற்றது.
இந்த விவரம் அறிந்த பிரதமர் நரேந்திரமோடி, மூதாட்டிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். நேற்று நடைபெற்ற விழாவில், குடும்ப உறுப்பினர்கள், ஊர் மக்கள் இணைந்து பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடினர். விழாவில், புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, திரு.பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று வாழ்த்தி, ஆசிபெற்றனர்.